குரு பெயர்ச்சி பலன்கள்





பார்வையாலேயே யோக பலன்களைத் தரும் குரு பகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை மிதுனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யப் போகிறார். வேதங்கள், உபநிடதங்கள் உள்ளிட்ட தர்ம சாஸ்திரங்களுக்குரிய கிரகமான குருபகவான் மிதுனத்தில் அமர்வதால் பழைய நூல்கள், சம்பிரதாயங்கள் பிரபலமடையும். புதையுண்டு கிடக்கும் மர்மங்கள் வெளியாகும். அவரவர் எண்ணங்களுக்கேற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். சமத்துவத்தை வெளிப்படுத்தும் வீட்டில் குரு அமர்வதால் பருவமழை முதல் விளைச்சல் வரை எல்லாமே மிதமாக இருக்கும். சூறாவளிக் காற்றால் சேதம் அதிகமாகும். தலைவர்கள், மக்களிடையே வார்த்தைப் போர் அதிகரிக்கும். பிரபலம் அடைவதற்காக சிலர் வதந்திகளை வளர்ப்பார்கள். பணப்புழக்கம் குறையும்; விலைவாசியும் ஓரளவு குறையும். பெட்ரோ- கெமிக்கல் மற்றும் உலோகங்களைப் போலவே உணவு தானியங்கள், கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையற்றதாக இருக்கும். இந்தியாவின் ஜாதகத்திற்கு மறைவு ஸ்தானத்தில் குரு அமர்வதால், அண்டை நாடுகளின் அத்துமீறல்களாலும் சதித் திட்டங் களாலும் நாடு பலவிதங்களில் பலவீனமடையும். பதுக்கல், கறுப்புப் பணம் அதிகமாகும்.

சுய கௌரவ கிரகமான புதன் வீட்டில் குரு அமர்வதால், வறட்டு கௌரவம், ஈகோ பிரச்னையால் பல நிறுவனங்கள் அழியும். ஷேர் மார்க்கெட் பெருமளவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள கட்டுப்பாடுகள் விலகும். தேர்வுமுறை எளிதாகும். ஆசிரியர் துறையில் புதிய சங்கங்கள் உருவாகும். கண், காது, மூக்கு, தொண்டை நோய்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். தண்ணீராலும், காற்றாலும் நோய்கள் உருவாகும். காடுகள், வன விலங்குகள், நன்செய் நிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்க புதுச் சட்டங்கள் வரும். மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், மணமுறிவு பெற்றவர்கள் சாதித்துக் காட்டுவார்கள்.

நாடு தழுவிய அடையாள அட்டைகள் அளிக்கப்படும். தேர்தலுக்குப் பின்னர் கூட்டணிகள் மாறும். உளவுத் துறை, ராணுவத் துறை நவீனமயமாகும். புதிய ஏவுகணைகள், தளவாடங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும். தனகாரகன் குரு மிதுனத்தில் அமர்வதால் ரிசர்வ் வங்கி அங்கீகரிக்காத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம். ஏலச்சீட்டிலும் சேர வேண்டாம். வங்கிக் கடன் பெற்று வீடு, வாகனம் வாங்கியவர்களில் பலர் தவணையை குறித்த காலத்தில் செலுத்த தவறுவதால் பலரின் சொத்து ஏலத்திற்கு வரும். தொலைபேசி, அலைபேசி சேவைக் கட்டணங்கள் குறையும். அ, க, ஹ, ச, கி, ரி, பி, ஷி ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஊர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும். மேற்கண்ட எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் ஆரோக்கியத்திலும், பண விஷயத்திலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

குரு மாற்றத்தால் தென்மேற்குப் பருவ மழை அதிகரிக்கும். விவசாயம் வளமடையும். ரியல் எஸ்டேட் கொஞ்சம் சூடு பிடிக்கும். நிலங்களின் கைடுலைன் வேல்யூவை அரசு குறைக்கும். மின்சாரத் தட்டுப்பாடு குறையும். விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவார்கள். எழுத்தாளர்கள் நலிவடைவார்கள். புத்திரகாரகன் குரு பகை கிரகமான புதனின் வீட்டில் அமர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்படைவார்கள். குழந்தைகளை புதிய நோய்கள் தாக்கும். குழந்தையின்மை அதிகமாகும். உற்பத்தி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும், டி.வி., ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர், செல்போன்களின் விலையும் குறையும். பாடப்புத்தகங்களின் விலை உயரும். ஆங்கில மோகம் அதிகமாகும்.

பரிகாரம்: கல்விக்கும், கௌரவத்திற்கும், விடாமுயற்சிக்கும் உரிய கிரகமான புதன் வீட்டில் குரு அமர்வதால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர்களின் கல்விக்கு உதவுங்கள். கல்வி கிரகமான பிரகஸ்பதியாகிய குரு பகவானின் அருள் உங்கள் இல்லம் தேடி வரும்.