கவிதைக்காரர்கள் வீதி
சொல்லாத கதை
ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி வனத்துக் குகையில் இருக்கிற கிளிக்குள் இருக்கிறது மந்திரவாதியின் உயிர் என்று கதையைத் தொடர்கிறேன். கதையை நிறுத்தச் சொல்லிவிட்டு அபிக்குட்டி கேட்கிறாள்... ‘அப்போ கிளியின் உயிர்?’ - ரவி உதயன், ஈரோடு.
வாங்காத பலி
இதுவரை யாரையும் வெட்டாத மதுரை வீரனின் துருப்பிடித்த அரிவாளில் பசிக்கு அவ்வப்போது நுனியில் செருகப்படுகிறது ஒற்றை எலுமிச்சம்பழம் - இரா.கமலக்கண்ணன், சித்தோடு.
அணையாத இரவு
விளக்கணைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தது காமம் - என்.ஏகம்பவாணன், சென்னை-92.
நிற்காத ரசனை
தாயின் தாலாட்டில் கிறங்கிப் போய் தூளியில் தூங்கியது குழந்தை. குழந்தையின் மூச்சுக் காற்றொலியை தாலாட்டாகக் கேட்டு ரசிக்கிறது அதன் மார்பில் சாய்ந்திருந்த பொம்மை - அ.சுகுமார், காட்டுக்கானூர்.
கிடைக்காத வரம்
எல்லோருக்கும் பிடித்தமானவனாய் ஆக வேண்டுமென வரம் கேட்டேன். சிரித்துக்கொண்டே கடவுள் சொன்னார், தனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கவில்லை என்று! - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
|