முதியோர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் தேவை!



வணக்கம் சீனியர்

‘மைதானத்தில் விளையாடுவது முக்கியம். அங்குதான் குழந்தைகளின் மோட்டார் திறன்கள் மற்றும் ஒருங்கிணைப்பு மேம்படுகிறது’ என்று நிபுணர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். இந்த மைதான விளையாட்டுகள் முதியோருக்கும் அவசியம் என்று தற்போது குறிப்பிடுகிறார்கள்.

காரணம் இல்லாமல் இல்லை. சமூகமயமாக்கல் மற்றும் தகவல்தொடர்பு திறன்களை வளர்ப்பதற்குத் தேவையான புதிய காற்று, சூரிய ஒளி மற்றும் சகாக்களுடன் தொடர்புகொள்வதும் அவர்களுக்குத் தேவை என்பதே. ஆனால், இந்த விளையாட்டு மைதான யோசனை குழந்தைகளுக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது.

வயதானவர்களும், குழந்தைகளைப் போன்று மென்மையானவர்களே. அவர்களுக்கு ஒருவருக்கொருவருடனான உறவுகள் மற்றும் சக குழுக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. மேலும் அவர்களின் உடல் இயக்கங்களை மேம்படுத்தவும், உடலை பராமரிப்பதற்காகவும் மிதமானது முதல் முறைசாரா உடல் செயல்பாடுகளும் தேவை. எனவே, இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை அமைப்பது அவசியமாகிறது.

முதியோருக்கு விளையாட்டு மைதானம் என்றவுடனே ஊஞ்சல், ராட்சத ராட்டினம் போன்று அவர்கள் உடலின் அட்ரினலினை தூண்டும் கட்டமைப்புகளை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு பதிலாக முதியவர்களின் தசை வலிமை, மோட்டார் செல்களின் ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தக்கூடிய குறைந்த உடலியக்கத்தைக் கொண்ட சிட்-அப் பெஞ்ச், உடற்பயிற்சி பைக்குகள், ஃப்ளக்ஸ் ரன்னர்ஸ், ஃப்ளக்ஸ் வீலர்ஸ், குறைந்த வேகம் கொண்ட ட்ரட்மில்கள் போன்றவற்றை வைக்கலாம்’ என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மேலும், ‘முதியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், அவர்களின் உடற்திறனை மேம்படுத்துகின்றன; தனிமையைக் குறைக்கின்றன’ என்கின்றனர் உளவியலாளர்கள். இந்த பூங்காக்கள் முதியோரின் உடல் நலத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்கு மட்டும் சேவை செய்வதில்லை.

மக்களைச் சந்திக்கவும், பூங்காவில் தேநீர் அருந்தவும், நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பழகவும் வாய்ப்பளிப்பதற்கான இடமாக இருக்கும். இது முதியவர்களிடையே ஒரு பொதுவான பிரச்னையாக இருக்கும் தனிமை மற்றும் ஒதுக்கப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கான இடமாகவும் இருக்கும்.

Active ageing-ன் சர்வதேச கவுன்சிலின் தலைமை நிர்வாகியான கோலின் மில்னர், The wall street journal பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘முதியவர்களுக்கான விளையாட்டு மைதானங்களை அதிகரிப்பதன் மூலம் அவர்கள்  சமூகத்துடன்  அதிகம் இணைவதற்கான சூழல்களை உருவாக்கித் தர முடியும்.

குறிப்பாக, பிள்ளைகள் நெடுந்தொலைவில் இருப்பவர்கள் மற்றும் துணையை இழந்தவர்களுக்கு அவர்களின் தனிமையைப் போக்கி, உடல்திறனை மேம்படுத்தக்கூடும்’ என்கிறார்.

வயதானவர்களில் அடிக்கடி மருத்துவமனையில் சேர்வது மற்றும் வயதானதற்கான அறிகுறிகளைக் குறைக்கவும் இதுபோன்று வெட்டவெளி மைதானங்களில் விளையாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யும் நடவடிக்கைகள் உதவுகின்றன. முதியவர்களிடத்தில் அடிக்கடி வெளியே செல்லும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டால், அவர்கள் வயதாகும்போது மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

1995-ம் ஆண்டில், சீன அரசு முதியவர்களுக்கான பூங்காக்களை தன் நாடு முழுவதும் அமைத்ததன் மூலம் உலகின் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த யோசனையை ஜப்பான் செயல்படுத்தத் தொடங்கி, கடந்த 20 ஆண்டுகளாக ஆசியா, ஐரோப்பா நாடுகள் முழுவதும் முதியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் பெருகத் தொடங்கின. தற்போது உலகம் முழுவதும் முதியவர்களுக்கான மைதானங்களை பரவலாக காண முடிகிறது. அமெரிக்கா, ஸ்பெயின், ஸ்பானிஷ் போன்ற நாடுகள் இதற்காக அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டன.
 
2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவீதம் வரை முதியவர்கள் மக்கள் தொகை அதிகரிக்கக்கூடிய பிரச்னையை சமாளிக்க உலகம் முழுவதும் பல கோணங்களில் யோசனைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை கருத்தில் கொண்டு நம் இந்தியாவும் இதைப்பற்றி யோசிக்குமானால், முதியவர்களுக்கான மருத்துவச் செலவை குறைக்கும் அதே நேரத்தில் முதியவர்களை பராமரிப்பதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியும்.

- என்.ஹரிஹரன்