புத்துணர்ச்சி தரும் புதினா



ஸ்பெஷல்

புதினா என்ற பெயரை கேட்டாலே அதன் வசீகரிக்கும் பச்சைப்பசேல் நிறமும், செடியின் அழகான தோற்றமும், மயக்கும் அதன் நறுமணமும்தான் பலருக்கும் நினைவில் வரும். இவை தவிர மருத்துவரீதியாக புதினாவில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன?!
டயட்டீஷியன் லீலாவதி பதிலளிக்கிறார்…

புதினாவில் சராசரியாக 600 வகைகள் உள்ளன. எண்ணற்ற இதன் வகைகளைப் போலவே புதினாவினால் கிடைக்கும் மருத்துவரீதியான பலன்களும் அதிகம்தான். புதினாவில் உள்ள மென்தால்(Menthol) என்ற வேதிப்பொருள்தான் இதன் சிறப்புகளும் காரணம் என்று சொல்லலாம். புதினாவை உணவுகளில் ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது காய வைத்துப் பொடியாகவோ, தேநீர் வடிவிலோ என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இனி புதினாவின் நன்மைகளை பார்ப்போம்....

பொதுவாக புதினா உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும் தன்மை உடையது. எலுமிச்சைச்சாற்றுடன் புதினா சேர்த்து அருந்தும்போது உடலுக்குக் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
வெளியில் செல்லும்போது அல்லது முக்கியமான சந்திப்புகளின்போது சிறிது புதினா இலைகளை மென்றுவிட்டு சென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும். செயற்கையான மவுத் ஃப்ரெஷ்னருக்குப் பதில் இயற்கையான ஃப்ரெஷ்னராகவும் இருக்கும். புதினா இலைகளை காய வைத்து அரைத்து வைத்த பொடியை பயன்படுத்தி தயாரிக்கும் மின்ட் டீயாகக் கூட அருந்தலாம். இதன் மூலமும் வாயில் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.

ஆஸ்துமா தொல்லை இருப்பவர்களுக்கு புதினாவின் வாசனை நல்ல நிவாரணம் அளிக்கும் பொருளாக உதவும். மூக்கடைப்பு சமயத்திலும் அதன் நறுமணத்தை சுவாசிக்கும்போது மூக்கடைப்பு நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருக்க புதினா உதவும்.
புதினா ஒரு சிறந்த ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல். அதனால் சிறு சிறு ‘பூச்சிக் கடிகளின்போது பூச்சி கடித்த அந்த இடத்தில் புதினா இலைகளை தேய்த்துவிடலாம். தோளில் ஏற்படும் அலர்ஜிக்குக் கூட பயன்படுத்தலாம். புதினாவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்திருப்பதால் மன அழுத்தம் குறையும்.

கீரை வகையைச் சேர்ந்தது புதினா என்பதால் நார்ச்சத்து உள்ள பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் அஜீரணக்கோளாறுகளை தவிர்க்க மிகவும் நல்ல உணவுப் பொருளாக புதினா இருக்கிறது. இரைப்பைத் தசைகள் இறுக்கமாக இருக்கும்போது உணவு உடனடியாக குடலுக்குச் செல்லாது. சிறிது நேரம் அங்கேயே தங்கிவிடும். இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு வாயு, வயிற்றுவலி, தொப்பை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். உணவில் உள்ள சத்துகளும் சரியாக உடலுக்குக் கிடைக்காது. புதினா அந்த தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி ஜீரணச்சக்தியை மேம்படுத்தக்கூடியது.

நார்ச்சத்து தவிர புதினாவில் வைட்டமின் ஏ, மாங்கனீசு, இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகிய சத்துக்களும் உள்ளன. வைட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வைக் கோளாறுகளை சரி செய்யும் தன்மை உடையது.எடை குறைப்பில் இருப்பவர்கள் புதினா இலைகளை டீ, ஜூஸ் என ஏதாவது ஒரு வகையில் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

புதினாவின் நறுமணம் மூளையின் செயல்பாட்டைத் தூண்டக் கூடியது. அதனால் களைப்பை உணர்கிறவர்கள் பயணங்களின்போது கைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் வாந்தி உணர்வும் தோன்றாது. காரில் பயணம் மேற்கொள்கிறவர்கள் கைப்பிடி அளவு புதினா இலைகளை சிறு சிறு துளைகள் கொண்ட ஒரு கவரில் போட்டு வைத்துவிட்டால் தூக்கம் வராமல் கார் ஓட்ட முடியும். சோர்வும் தெரியாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு முலைக்காம்பில் வெடிப்பு உண்டாகி வலி ஏற்படும். அந்த சமயத்தில் அந்த இடத்தில் புதினா இலைகளின் சாறு அல்லது புதினா இலைகளை தேய்த்துவிட்டால் வலி குறையும். எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

இரவில் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை தண்ணீரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக அருந்தலாம். எலுமிச்சைச்சாறுடன் சர்க்கரை சேர்த்து அத்துடன் புதினா இலைகளை போட்டு உடனடியாக சாப்பிடலாம். உடனடி எனர்ஜி கிடைக்கும். எடை குறைப்புக்கும் நல்லது.

எலுமிச்சைச்சாறுடன், வெள்ளரித்துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து அத்துடன் புதினா இலைகளை போட்டு சாப்பிடலாம்.
காய்ந்த புதினா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிடலாம்.சாதாரண தேநீருடன் புதினா இலைகளை கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்.

புதினா இலைகளை உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி இவற்றுடன் சேர்த்து வதக்கி சட்னியாக சாப்பிடலாம். சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம். கிழக்கிந்திய உணவுவகைகளில் சேர்த்து சாப்பிடலாம். பெப்பர் மின்ட் ஆயில் அல்லது கேப்சூல் கிடைத்தாலும் சாப்பிடலாம். வயிற்றுக்கோளாறுகளை சரி செய்யும். ஆனால், மருந்தாக உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

எப்படி பார்த்து வாங்குவது?

புதினாவை வாங்கும்போது நன்கு பச்சையாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். பழுத்த இலைகள், நிறம் குறைந்த இலைகளாக இருந்தால் வாங்க வேண்டாம். புதினாவை நல்ல கூர்மையான கத்தியால் வெட்ட வேண்டும். மெதுவாக இழுத்து இழுத்து வெட்டும்போது அதன் சத்துகள் காற்றில் வீணாகும். புதினா இலைகளை பயன்படுத்திய பிறகு அதன் தண்டுகளை வீட்டில் சிறுசிறு தொட்டிகளில் நட்டு வைத்து வளர்க்கலாம். இதன்மூலம் ஃப்ரெஷ்ஷான புதினா வீட்டிலேயே கிடைக்கும்!

- சக்தி