வார நாட்களில் நடைப்பயிற்சி... வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்!



ஆராய்ச்சி
 
உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகளால் எல்லோராலும் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இந்த மாதிரி தர்மசங்கடத்தில் தவிப்பவர்களுக்கு நடைப்பயிற்சி மிகவும் சிறந்தது. உடற்பயிற்சிகளுக்கு இணையானது நடைப்பயிற்சி. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே கூட போதும் என்று கூறியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இன்றைய நவீன வாழ்க்கைமுறை காரணமாக சிறிது தொலைவு செல்வது என்றாலும் வாகனங்களின் துணையை நாடுவது வாடிக்கையாகிவிட்டது. உடலுக்கு இயக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டதால் உடல்நலம் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது. இந்த நிலையில், தினமும் ஒரு மணி நேரம் என்கிற அளவிலோ அல்லது வாரம் முழுவதும் ஒரு மணிநேரம் என்கிற அளவிலோ தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்வது வாழ்நாள் முழுவதும் மனித இனத்தை ஆரோக்கியமாக வைக்குமெனத் தெரிய வந்துள்ளது.

ஒரு மணி நேரம் தொடர்ந்து மிதமான வேகத்திலோ அல்லது விரைவாகவோ நடந்து செல்லுதல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்வதால், முதுமைப் பருவத்தில் எந்தவொரு சின்னச்சின்ன வேலைகளையும் செய்ய முடியாமல் முடங்கிப் போவது குறையும். இடுப்பு, முழங்கால், கணுக்கால் மற்றும் பாதங்கள் பலவீனம் அடையாது. குறிப்பாக, Arthrits என சொல்லப்படுகிற கீல்வாதம் ஏற்படாது.

4 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை பிரபல எழுத்தாளர் டோரத்தி டன்லப் என்பவர் மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வு பற்றிக் கூறும்போது, ‘வாரந்தோறும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொண்ட 85 சதவீத முதியவர்கள் தங்களுடைய அன்றாடப் பணிகளை தாங்களே மேற்கொள்ளும் திறன் பெற்றிருந்தனர்.

நடைப்பயிற்சி பழக்கம் இல்லாதவர்கள் குளித்தல், ஆடை மாற்றுதல், கடைகளுக்குச் செல்லுதல் உட்பட சாலையைப் பத்திரமாக கடத்தல் போன்ற வற்றைத் தனியாக செய்து கொள்ள முடியவில்லை. இதிலிருந்து நடைப்பயிற்சி யின் முக்கியத்துவத்தைப் பலரும் உணர்ந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது கட்டாயம்’ என்கிறார்.

- விஜயகுமார்