மாற்றுத் திறனாளிகளின் ஆரோக்கிய வாழ்வுக்குக் கைகொடுப்போம்!



சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3

‘‘ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது பெரிய சவால். மாற்றுத்திறனாளிகளுக்கு அது இரட்டை சவால். உடலோடும், வாழ்வோடும் போராடிக் கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் பற்றி நமக்குத் தெரிந்தது கொஞ்சம்தான்.

சகமனிதராக அவர்களின் நலன்மீது இனிமேலேனும் நாம் போதுமான அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்’’ என்கிறார் மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவர் நித்யா மனோஜ்.

 மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து தொடர்ந்து நம்மிடம் பேசுகிறார்.

‘‘மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஆரோக்கியம் என்பது தனிப்பட்ட பிரச்னை அல்ல. மாறாக, அது மனித உடலுக்கும் அதனை சூழ்ந்திருக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பைப் பிரதிபலிக்கும் ஒரு சிக்கலான நிகழ்வாக இருக்கிறது. ஊனம் என்பது உடல் அல்லது மனக் குறைபாடுகளை மட்டுமன்றி மன நலிவு, தண்டுவட மரப்பு, பெருமூளை வாதம் போன்ற நோய்களையும் உள்ளடக்கியது.

இந்தக் குறைபாடுகளால் உடலியக்கம் பாதிக்கப்படுவதால் இதற்கு விரிவான மருத்துவப் பராமரிப்புகள் தேவைப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றவர்களுக்கு ஏற்படும் மேலும் சில நோய் பாதிப்புகளோடு முதுமை சார்ந்த பிரச்னைகளும் உண்டாக வாய்ப்புள்ளது.

ஏதோ ஒரு வகையில் குறைபாடு உடையவர்கள் உலகில் 100 கோடி மக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவிகிதம். இவர்களில் ஆண்கள் 1 கோடியே 49 லட்சம் பேரும், பெண்கள் 1 கோடியே 18 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உடலியக்கக் குறைபாடு (கை, கால் செயலிழப்பு) செவித்திறன், பார்வை தொடர்பான குறைபாடு உடையவர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளை அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் உடல் உறுப்புகளில் குறைபாடுடையோர், பார்வைக் குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோர், மனவளர்ச்சி மற்றும் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுடையவர்கள் (Multiple Disability) என்று ஆரம்பத்தில் 5 வகைகளாகப் பிரித்திருந்தனர்.

 ஆனால், தற்போது இத்தோடு மேலும் சிலவற்றைச் சேர்த்து 22 வகைகளாக
அதிகரித்திருக்கிறார்கள். தொழுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள், மூளை முடக்குவாதம், உயரக் குறைபாடுடையவர்கள், தசை அழிவு நோய், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், பகுதியளவு பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் முழுவதும் பார்வை இழந்தவர்கள், பகுதியளவு செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் முழுவதும் செவித்திறன் இழந்தவர்கள், முழுவதும் பேச்சுத்திறன் இழந்தவர்கள், வாசித்தல், சொல் அல்லது எழுத்து விளக்க இயலாமை போன்ற மேலும் சில கற்றல் குறைபாடுகள், கவனச்சிதறல் குறைபாடு, மனநோய்கள் என்று அவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இந்த பட்டியலில் Multiple Sclerosis மற்றும் நடுக்குவாதம் போன்ற நரம்பியல் சார்ந்த நோய்கள், ஹீமோபிலியா என்கிற ரத்த ஒழுக்கு நோய், தலசீமியா என்கிற ரத்த அழிவுச்சோகை நோய், Sicklecell Disease என்கிற ரத்தசோகை நோய் போன்றவையும் இணைந்துள்ளது’’ என்றவரிடம் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றிக் கேட்டோம்...

‘‘போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளின்மை, மருத்துவ பராமரிப்பு அளிக்க முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, நவீன காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கட்டுமான வசதிகளின்மை போன்ற பிரச்னைகள் இங்கு உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியக் கொள்கை 2006-ன் கீழ் சில திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் அது எல்லோருக்கும் கிடைக்கும்படி நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். மாற்றுத் திறனாளிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் இல்லாததே இதுபோன்ற திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு தடையாக உள்ளது. சமூகப் புறக்கணிப்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான மக்களின் மனோபாவமும் இன்று அவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

 சிலர் அவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றனர். ஆனால், சிலர் அவர்களை அலட்சியப்படுத்துவதோடு, எள்ளி நகையாடுகின்றனர். மேலும் அவர்களுடைய உணர்வுகளை சரியாக புரிந்து கொள்வதில்லை. நாம் அவர்களைப் பார்த்து நகைக்காமல் பொறுப்போடு நடந்து கொள்வதோடு, அவர்
களுக்கு சரியான முறையில் ஆதரவளிக்க வேண்டும்.’’

மாற்றுத் திறனாளிகளுக்கான  சிகிச்சைகள் பற்றி...

‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை என்றாலே பிசியோதெரபி மருத்துவ சிகிச்சைதான் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால், அவர்களுக்கான நவீன சிகிச்சைகளை உடலியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவ முறை (Physical Medicine and Rehabilitation) மூலம் பெற முடியும் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

தற்போது உலகளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன புனர்வாழ்வு மருத்துவ சிகிச்சையிலும் ரோபோட்டிக் மருத்துவ முறைகள் நல்ல பலனளித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை, சேலம் போன்ற வெகுசில இடங்களில் அதிநவீன புனர்வாழ்வு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது.

இந்த சிகிச்சையின் மூலமாக கை, கால்களின் இழந்த செயல்பாடுகளை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதோடு, நடக்க இயலாதவர்களை நடக்க வைப்பதும் சாத்தியமாகிறது. இதேபோல் மனநலம் சார்ந்த சிகிச்சை
பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுபோன்ற நரம்பியல் மற்றும் எலும்பு சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதால், இழந்த உடலியக்க செயல்பாடுகளை மீட்டெடுப்பதோடு, அந்த பிரச்னை மேலும் அதிகமாகாமல் தடுக்கலாம். கற்றல் குறைபாடு பிரச்னை உள்ளவர்களுக்கு, மூளையின் புத்திக்கூர்மைக்கான பரிசோதனைகள் செய்து அதற்குரிய மாற்றுப் பயிற்சி (Remedial Training) சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

 இந்த சிகிச்சையானது செயல்திறன் பயிற்சியாளர்கள், பேச்சுப்பயிற்சி நிபுணர்கள், மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் புனர்வாழ்வு மருத்துவர்கள் மூலமாக பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகிறது. அதை அவர்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க நாம் உதவி செய்வோம்.  

மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தாண்டி, அவர்கள் ஒர் குடும்ப உறுப்பினராகவும், சமூக அங்கமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களுடைய உடல் மற்றும் மனநலக் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும். அவர்களுடைய திறமைக்கான வாய்ப்புகளை வழங்கி, அங்கீகரிக்க வேண்டும்.

அவர்களின் தேவைகளை புரிந்துகொண்டு அதை பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆர்வமும் உண்டு. மாற்றுத் திறனாளிகளை ஓர் சுமையாக கருதும் நமது பார்வையை மாற்றிக் கொள்வோம்.

நாம் அவர்களுக்கு அன்பு, ஆதரவு மற்றும் பராமரிப்பை வழங்குவதோடு, நட்புணர்வுடன் அவர்களோடு ஒரே சமூகமாக இணைந்து வாழ்வோம்!’’ என்கிறார் மருத்துவர் நித்யா மனோஜ்.

மாற்றுத் திறனாளிகளுக்கு  ஆதரவளிப்போம்!

* பொது போக்குவரத்து வசதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடமளிப்பதோடு, அதில் அவர்கள் அமர்வதற்கு அனுமதியுங்கள்.
* பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உதவுங்கள்.
*கல்வி கற்பதில் மாற்றுத் திறனாளிகளுக்கும் சம உரிமை உண்டு. அவர்கள் கல்வி பயில்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். அவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்.
* அவர்களுடைய வயதுக்கு சமமான பிள்ளைகளுடன் இணைந்து கல்வி கற்க அனுமதியுங்கள்.
* மாற்றுத் திறனாளிகளுடைய குறைபாட்டின் அடிப்படையில் அவர்களை ஒதுக்காதீர்கள்.
* சமூகத் தடைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதைத் தடுக்காதீர்கள்.
* பணியிடங்களில் அவர்களுக்கேற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டும்.
* சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளவும், சுதந்திரமாக வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு ஆதரவளியுங்கள்.

- க.கதிரவன்
படம்: ஆர்.கோபால்