இந்தியாவில் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை



300 லட்சத்திற்கும் அதிகமான இந்திய ஆண்களும், பெண்களும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்ப்ட்டிருக்கின்றனர். இருப்பினும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்நிலை பற்றி   கவலை தெரிவிக்கும் வெளிப்படையான கருத்துப்பரிமாற்றங்கள் அதிகம் எதுவும் நிகழவில்லை. மற்றும் இந்தக் குறைபாடு குறித்து  பொதுவாக விழிப்புணர்ச்சி  அற்ற தன்மையே காணப்ப்டுகிறது.

விளக்குகிறார் மருத்துவர் அனிதா சூர்யநாராயண்,

மலட்டுத்தன்மையானது, பாதுகாப்பு  சாதனங்கள் பயன்படுத்தாது தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் கூட குழந்தைப் பேறு அடைய இயலாத நிலையக் குறிக்கும். பதிவு செய்யப்பட்ட மலட்டுத்தன்மை குறைபாடுகளில் 40-50 சதவிகிதம் பெண்களின் உடல்நிலை சார்ந்ததாகவே காணப்படுகிறது. சற்றேறக்குறைய 20 சதவிகிதம் விந்தணு பிறழ்வு நிலை காரணமாகவும், மிகுதி உள்ளவவை இனம் காணப்படா காரணிகளாகவும்  வகைப்படுத்தப்படுகிறது.

ஒருவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகளில் உள்ளது. அவற்றில் வயது மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. 32 வயதிற்குப்ப்பிறகு ஒரு பெண்ணுக்கு  கருவளம் குறையத்தொடங்கி அதன் பின்னர் தொடர்கிறது என்றால் அதுவே ஒரு ஆணுக்கு 50 வயதுக்குப் பின்னர் குறையத்தொடங்குகிறது

கறுவுறுதிறனளவு பாதிப்படைவதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாகத் விளங்குகிறது. கருத்தரித்துள்ள பெண்கள் அவர்களின் கருவுற்ற காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளது என்பதை பல ஆய்வு முடிவுகள்  உறுதி செய்கின்றன. அதுபோன்றே மது அருந்தும் பழக்கமும் தாயையும் சேயையும் பாதிக்கும் தன்மை கொண்டது; ஆண்களின் விந்தணு  வீரியம்  குறைவடைவதற்கும் அதற்குத் தொடர்பு உள்ளது.

உடல்பருமன், அதனுடன் இணைந்து உடலுழைப்பு இல்லா வாழ்க்கை முறை, இவைகளும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அதுவே ஆண்களின் விந்தணு இயல்புக்கு மாறான எண்ணிக்கையிலிருப்பதற்கு காரணமாக இருக்கிறது. கூடுதலாக எடை குறைவு அல்லது பசியின்மை ஆகியவைகளும் கறுவுறுதிறனுக்கு எதிர் விளைவை ஏற்படுத்தக் கூடும் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றி ஒரு பரந்த அளவில் அறிந்து  கொள்ளுவதற்கும் மேலாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில்  மலட்டுத்தன்மைக்கான  பல்வேறு  வேறு பட்ட காரணிகள் இருக்கின்றன. ஆண்கள் மத்தியில் மலட்டுத்தன்மை அதிகமாக காணப்படுவதற்கான  சில பொதுவான காரணங்கள் இவை:

• விந்துக்குழாய் சிரைச் சுருள்(வேரிகோசீல்):ஆண் விரைப்பையிலுள்ள வடிகால் சிரைகளில் ஏற்படும் வீக்கம் காரணமாக ஏற்படுவது. ஆண்கள் மத்தியில் மிக அதிகளவில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்க்கு மிக முக்கியமான காரணங்களில் இது ஒன்றாகும்.

• நோய்த்தொற்று: வீக்கம் அல்லது உடலுறவு மூலமாக பரவும் நோய்கள் (செக்சுவலி ட்ராண்ஸ்மிட்டட் டிசீசஸ்– எஸ்டிடி) விந்தணு உற்பத்தி அல்லது விந்தணு வீரியம் ஆகியவற்றைப் பாதிக்கலாம் அல்லது விந்தணு பயணிக்கும் பாதையில் தழும்புகளை ஏற்படுத்தி அவற்றிற்குத் தடை ஏற்படுத்தலாம்.

• விந்து பீச்சுதல் சம்பந்தமான பிரச்சினைகள்: உச்ச கட்டத்தில் ஆண்குறியிலிருந்து வெளிச்செலுத்தப்படாமல், விந்து பின்நோக்கி  சிறுநீரகப் பைக்குள் பீச்சப்பட்டுவிடும் நிலை.

• நோய் எதிர்ப்பு உயிரணு: (ஆண்டி பாடீஸ்) நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள்  விந்தணுக்களை ஆபத்து விளைவிக்கக் கூடியவைகளாக தவறாக அடையாளம் கண்டு அவற்றை அழிக்க முயற்சிக்கும் செயல்.

• கட்டிகள் : புற்று நோய்க் கட்டிகள் மற்றும் ஆபத்து விளைவிக்காத கட்டிகள் அடிமூளைச் சுரப்பி போன்ற ஆண் இனப்பெருக்க வளரூக்கிகளை வெளியிடும் சுரப்பிகளைப் பாதித்தல் அல்லது வேறு இனம்கண்டறியாத காரணங்கள் மூலமாக  நேரடியாக இனப்பெருக்க உறுப்புக்களைப் பாதிப்படையச் செய்யும்.  சில சந்தர்ப்பங்களில் கட்டிகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அல்லது வேதிச்சிகிச்சை போன்றவைகளும் ஆணுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடும்.

• வளரூக்கி சமச்சீர் நிலையின்மை:  முன்மூளைக் கீழ் அறை(ஹைப்போதலாமஸ்), அடிமூளைச் சுரப்பி(பிட்யூட்டரி) கேடயச் சுரப்பி (தைராய்டு) ,அட்ரீனலீன் சுரப்பிகள் போன்ற வளரூக்கி சுரப்பு அமைப்புகளை பாதிப்படையச் செய்யும் சில உடலுறுப்புப் பிறழ்வுகளின் காரணமாகவும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். விரை இயக்குநீர் குறைவு, மற்றும் வேறு வளரூக்கி பிரச்சினைகளுக்கு அடித்தளமாக பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

• உடலுறவு சம்பந்தமான காரணங்கள்: விரைப்புத்தனமை அற்றுப்போதல், விந்து விரைவில் வெளியேறுதல், வலி நிறைந்த உடலுறவு, உடலமைப்பு சார்ந்த பிரச்சினைகள், மனம் சார்ந்த பிரச்சினைகள், அல்லது உறவுகள் சார்ந்த பிரச்சினைகள் உடலுறவுக்கு குறுக்கீடு செய்து  பாதிக்கின்றன. விளைவாக  ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது.

• மருந்துகள்: விரை இயக்குநீர் குறைவை ஈடு செய்யும் சிகிச்சை, அதிக நாட்கள் தொடர்ந்து உட்கொண்ட வளர் மாற்ற ஊக்க மருந்துகள், புற்றுநோய்க்கான மருந்துகள், சில பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், சில வயிற்றுப் புண்ணுக்கான மருந்துகள், போன்ற மருந்துகள் விந்தணு உற்பத்தியைப் பாதிக்கின்றன. விளைவாக  ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது

பெண்கள் மத்தியில் மலட்டுத்தன்மை அதிகமாகக் காணப்படுவதற்கான  சில பொதுவான காரணங்கள் இவை:

• பலஉறை கருவக நோய்க்குறி (பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம்- பிசிஓஎஸ்) பிசிஓஎஸ் வளரூக்கி சமச்சீரின்மையை ஏற்படுத்துகிறது. அது கருமுட்டை உருவாவதைப் பாதிக்கிறது. இது பெண்கள் மத்தியில் மிக அதிகமாகக் காணப்படும் காரணிகளில் ஒன்றாகும்.

• முன்மூளைக் கீழ் அறை இயக்கப் பிறழ்வு :  அடிமூளைச் சுரப்பி(பிட்யூட்டரி)யால் உற்பத்தி செய்யப்படும் இந்த இரு வளரூக்கிகள் ஒவ்வொரு மாதமும் கருமுட்டை உருவாக்கத்தை ஊக்குவிக்கக் காரணமாக விளங்குகின்றன. இந்த வளரூக்கிகளின் உற்பத்தி தடை பட்டால் அது கருமுட்டை உருவாவதைப் பாதித்து மலட்டுத்தன்மையைத் தோற்றுவிக்கும்.

• முழு முதிர்வற்ற கருப்பை இயக்க நிறுத்தம்:  இந்த குறைபாடு பொதுவாக தன் எதிர்ப்புத் துலக்கம்(ஆட்டோ இம்யூன்) அல்லது கருப்பையிலிருந்த முட்டைகள் முழுநிறைவற்ற நிலையில் இழத்தல் போன்றவைகளால் ஏற்படுகிறது. கருப்பை முட்டைகளை உற்பத்தி செய்யாது, 40 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்கு சினைப்பருவத் தூண்டு இயக்கு நீர் (ஈஸ்ட்ரோஜென்) உற்பத்தியை பாதித்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

• அதிகப்படியான பால் சுரப்புத்தூண்டுநீர் (ப்ரோலாக்டின்) : அடிமூளைச்சுரப்பி பால் சுரப்புத் தூண்டுநீரை அதிகளவு சுரப்பதால் அது சினைப்பருவத் தூண்டு இயக்குநீரின்(ஈஸ்ட்ரோஜென்) உற்பத்தியை குறைவடையச் செய்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

• கருமுட்டைக்குழாய்(பெஃலோப்பியன் ட்யூப்) மலட்டுத்தன்மை) : பாதிப்படைந்த அல்லது தடைமுட்டுக்களைக் கொண்ட கருமுட்டைக் குழாய்கள் விந்தணுக்கள் கருமுட்டையை அடைவதற்கு இடையூறு விளைவிக்கின்றன அல்லது கருவுற்ற முட்டை கருப்பைக்குள் செல்லும் வழியில்  தடையை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக மலட்டுத்தன்மை உருவாகிறது.

• கருப்பை உள்வரிச்சவ்வு (எண்டோமெட்ரியோஸிஸ்) : கருப்பை சுவற்றின் உட்பரப்பு உறையை பாதிக்கிறது. அதனால் கருவுற்ற முட்டை பதியவைக்கப்படுவதை சீர் குலைக்கிறது. இந்த நிலை நேரடியாக மட்டுமின்றி விந்தணு அல்லது முட்டையை சேதப்படுத்தும் பிறவழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது,

• கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய்  சார்ந்த காரணங்கள்: இயல்பாக கருப்பையில் காணப்படுகிற ஆபத்தற்ற சிறுசிறு கட்டிகள், அல்லது பெரிய கட்டிகள், கருமுட்டைக் குழாய்களில் தடையை ஏற்படுத்தலாம் அல்லது கருமுட்டை பதிய வைக்கப்படுவதற்கு குறுக்கீடாக இருக்கலாம், அதன் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும்.

பிறப்பிலிருந்தே தொடரும்  கருப்பைப் பிரழ்வுப் பிரச்சினைகள் கருவுருதலிலும், கருவை சுமப்பதிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பாரம்பரியமாக உள்ள பிரழ்வுகள்  அல்லது கருப்பை வாய்ப்பகுதியில் உள்ள சேதம் காரணமாக  நரம்புகளில்  ஏற்படும் சுருக்கம் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம்.

இன்றைய நாட்களில் பெருநகரங்களில் வாழும் இந்தியப் பெண்கள், அவர்கள் தொழில் சார்ந்த போட்டிகளின் காரணமாக கருவுருதலை தள்ளிப்போடுகின்றனர். அதிகரிக்கும் வயது காரணமாக கருவுறுதல் திறன் பிரச்சினைகளை அனைத்துப் பெண்களும் சந்திப்பதில்லை என்றாலும் சமீபத்திய போக்குகளும் பகுப்பாய்வுகளும் வேறொரு தகவலை நமக்குத் தெளிவாக்குகிறது. தற்காலப் பெண்கள் அவர்களின் வாழ்வியல் முறைகளால் மலட்டுத்தன்மையை அடையும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

பெண்கள் கருவுறுதலை தள்ளிப்போடுவதற்கு முன் அவர்களின் கருப்பை இருப்புக்களைப் பற்றி அறிந்திருப்பது மிக அவசியம். இது அவர்களுக்கு சிறந்த முடிவை எட்டுவதற்கு உதவும். மேலும் கருவுறுவதற்கு முடிவெடுக்கும் சமயத்தில் உண்டாகும் தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கச் செய்யும். கருப்பை இருப்பு என்பது கருப்பையில் குறிப்பிட்ட காலத்தில் இருக்கக் கூடிய முட்டைகளின் மொத்த எண்ணிக்கையாகும். கருப்பை இருப்புக் குறைவு என்பது உடற்கூறு சம்பந்தமாக ஏற்பட்ட முட்டைகளின் எண்ணிக்கைக் குறைவு. அதனால் கருவுறுவதற்கு நியாயமாக எதிர்பார்க்கும் சந்தர்ப்பங்களை அளிக்கக்கூடிய எண்ணிக்கையில் கரு முட்டை இல்லாது போகும்.

கருப்பை இருப்பு சோதனை என்று பிரபலமாக அழைக்கப்படும் முல்லர் வளரூக்கி  எதிர்ப்பு சோதனை (ஆண்டி முல்லேரியன் ஹார்மோன் டெஸ்ட்) ஒரு  பெண்ணின் கருவுறும் திறனை கிட்டத்தட்ட துல்லியமாக குறிப்பிடுகிறது. இருந்த போதிலும் ஏஎம்ஹச் சோதனை ஒரு பல்நோக்கு சோதனை என்பதால் அதன் அதிகரித்த அளவீடுகள்  பலஉறை கருவக நோய்க்குறி (பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம்- பிசிஓஎஸ்)க்கான அறிகுறியாகவும் இருக்கக் கூடும். இருப்பினும் ஏஎம்ஹச் சோதனையானது மலட்டுத்தன்மையை பரிசோதிப்பதற்கான மிக முக்கியமான சோதனையாகும். 

கர்ப்பம் தரிக்க விரும்பி அது நிறைவேறாமல் போகும் தம்பதிகள் ஒரு கருத்தரிப்பு மருத்துவ நிபுணரிடம் செல்ல வேண்டும். பரிந்துரைக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஒரு அறிவுரை வழங்குபவரிடமும் செல்ல வேண்டும்; தற்போதுள்ள நிலையை முறையாகப்  பரிசோதித்து அறிந்து கொண்டு, மேற்கொண்டு தேவைப்படும் சிகிச்சைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளுவது மிக,மிக  அவசியம்.