ஆஸ்திரேலியாவில் படிக்கணுமா? விசா பெற தயாராகுங்க!
வெளிநாட்டுக் கல்வி
வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்
ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று நடுத்தர வர்க்கத்து மாணவர்களும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க செல்வது சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைப் படித்து சர்வதேச தரத்தில் பட்டம் பெறுவது என்பது பல மாணவர்களின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் சிறப்பானவற்றைப் பட்டியலிட்டு பல அவசியமான தகவல்களை இதுவரை நாம் பார்த்தோம்.
பட்டப்படிப்பைத் தருவது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனுக்குள்ளிருக்கும் சுய திறமைகளை அடையாளம் காண்பித்து, ஆராய்ச்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் மூலம் அவனை மெருகேற்றி சுய சிந்தனையின் அடிப்படையில் மாணவனின் தகுதிக்குத் தகுந்தாற்போல் வேலைவாய்ப்பை பெறச் செய்கிறது. மேலும் அதன் மூலம் தனது பட்டப்படிப்பின் தரத்தை அளவிடுகிறது உலக அளவில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள்.
ஆஸ்திரேலியாவின் சூழல், மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றினூடாக தரமான கல்வியையும் சேர்த்து வழங்குகிறது அங்கு உள்ள பல்கலைக்கழகங்கள். இப்படித் தரமான உயர்கல்வி பெற்று தன்னையும் உயர்த்திக்கொண்டு, உலக வளர்ச்சிக்கும் தன்னால் இயன்ற சேவையைச் செய்யப்போகும் மாணவர்கள், முதலில் ஆஸ்திரேலியன் எம்பஸி நடத்தும் விசா தேர்வில் தேர்வாகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசா தேர்வில் பங்குபெறச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்
1. Schooling Mark sheets 2. UG Individual Mark sheets 3. Degree certificate 4. Passport 5. Passport size photographs 6. English Language Proficiency Certificate or Medium of Instruction letter in English 7. Motivation Letter / Statement of Purpose 8. Financial Statements 9. Admission Letter from University 10. Accommodation Letter 11. Updated Resume 12. Covering letter 13. Parents Affidavit Letter 14. Visa application form Depends on the country
விசா பெறுவதற்கு முன்பும் பின்பும் என்னென்ன ஏற்பாடுகளை மாணவர்கள் செய்ய வேண்டும் என்பதையும், விசா இன்டர்வியூவிற்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்வது எப்படி? என்பதையும் அடுத்த இதழில் பார்ப்போம்.
அரசுப் பள்ளி ஆசிரியரின் அற்புத முயற்சி!
அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருக்குறள் நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்திற்காகச் சிறப்புக் கையேட்டினை தயாரித்திருக்கிறார் மேலூர் அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளி ஆசிரியர் சூரியகுமார்.தமிழகத்தின் அனைத்து வகைப் பள்ளிகளிலும் திருக்குறளை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்குறளின் (இன்பத்துப்பால் தவிர்த்து) அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள அனைத்துக் குறட்பாக்களையும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தில் சேர்த்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை (எண்.51) வெளியிட்டது. மேலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வயது, வகுப்பைக் கணக்கீடு செய்து வகுப்புவாரியாக 15 அதிகாரங்கள் வீதம் பயிற்றுவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் விதத்தில் சிறப்புக் கையேட்டினை தயாரித்திருக்கிறார் ஆசிரியர் சூரியகுமார். இதுகுறித்து பேசியபோது, “திருக்குறளை நன்னெறிப் பாடமாக வகுப்புக்கு 15 அதிகாரங்கள் வீதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு வசதியாக வகுப்பிற்கு 15 அதிகாரங்கள் அடங்கிய ஏழு சிறப்புக் கையேடுகளைத் தயாரித்திருக்கிறேன். அதிகாரத்திற்கு ஒரு நன்னெறிக் கதை வீதம் இந்தக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் திருக்குறள் கருத்துகளை எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க எளிமையான பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எங்கள் பள்ளி மாணவர்களுக்காக இந்நூல் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கூறிய அவர் மேலும் இக்கையேடுகளைப் புலவர் சங்கரலிங்கம், சமூக ஆர்வலர் ம.கொ.ச.இராஜேந்திரன் ஆகியோர் மேலாய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
|