அமலாபாலும் அடி பின்னுகிறார்!



‘ஆடை’ படத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்கும் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்கிறது. ஆடை துறந்து ‘ஆடை’யில் அமளிதுமளி செய்தவர், ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து அதகளம் செய்கிறார்.
ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். கதை அருண். அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.

படத்தைப்பற்றி அமலாபாலிடம் கேட்டோம்.‘‘இந்தப் படம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம், படத்தோட கதை. ஒரு இளம்பெண் காட்டுலே சிக்கிக்கிட்ட பிறகு தனி ஆளா எந்த உதவியுமே இல்லாம அதுல இருந்து எப்படி வெளியிலே வர்றார்ங்கறது தான் படம்.

இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும். இந்தப் படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும்போதுகூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்தப் படத்துக்காக புதுசா ‘கிராமகா’ என்னும் தற்காப்புக் கலையைக் கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும்.

கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்தக் கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. இயக்குநர் வினோத், நிர்வாகத் தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இவர்கள் பட்ட கஷ்டத்திற்கு முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்‌ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் ‘மைனா’வில் இருந்தே நல்ல நண்பர். சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்.

இந்தப் படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது. இந்தப் படத்தில் வேலை செய்த அனைவரும் இந்தப் படத்தை ஒரு பேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது.

தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் வருகிறது. எனக்கு வரும் வாய்ப்புகளில் கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்’’ என்றார் அமலாபால்.

- எஸ்