குருவோட பொண்ணை காதலிச்சு மணந்த சிஷ்யன்! Stun சிவா...



தமிழ் சினிமா உலகில் இந்தப்பெயருக்கு தனியாக அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 80க்கும் மேற்பட்ட படங்களில்  ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர். சமீபத்தில் வெளிவந்த ‘சாம்பியன்’ படம் அவரை ஒரு மிகப்பெரும் நடிகராக மாற்றியிருக்கிறது.

‘வேட்டையாடு விளையாடு’, ‘கோலி சோடா’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய ‘சாம்பியன்’ படத்தில் முழு வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தனியார் நிறுவனமொன்று இந்த ஆண்டின் சிறந்த வில்லனாக இவருக்கு விருது கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. தற்போது தன் மகனை வைத்து ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தவருடன் ஒரு சந்திப்பு.

“இனிமேல் ஃபைட் மாஸ்டராக பணியாற்றுவீர்களா, இல்லை நடிப்பு மட்டும்தானா?”

“இல்லை. இரண்டுமே செய்வேன். ஸ்டண்ட்தான் என்னுடைய அடையாளம். அந்தவகையில் எந்தக் கட்டத்திலும் சண்டை இயக்குநராக பணியாற்றுவதை நிறுத்தமாட்டேன். நடிக்க வாய்ப்பு வந்தாலும் மறுக்காமல் நடிப்பேன்.”“உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்... உங்கள்
பின்னணி என்ன?”

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சின்ன வயசுலேயே படிச்சிட்டே வேலை செய்யணும்கிறது என்னோட ஆர்வம். 10வது படிக்கும்போதே பைக் மெக்கானிக் கடையில வேலை பார்த்தேன். அங்க ஃபைட்டர்ஸ் எல்லாம் பைக் சரிபண்ண வருவாங்க. அவங்க பழக்கம் மூலமா ஸ்டண்டல ஆர்வம் வந்தது. எங்க மாமா எம்.ஜி.நடராஜன் யூனியன்ல இருந்தாரு. அவர் மூலமா ஸ்டண்ட் யூனியன்ல சேர்ந்தேன். 1989ல இருந்து சினிமாவுல வேலை செய்திட்டு இருக்கேன்.

ராம்போ ராஜ்குமார் மாஸ்டரிடம் முதலில்  வேலை பார்த்தேன். முதல் படம் ‘அன்புக்கட்டளை’.  அப்பல்லாம் உதவியாளராக ஆகவே 5 வருடங்கள் ஆகும். நிறையப் படங்கள் வேலை பார்த்திருக்கேன். 1997ம் வருடம் மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில்தான் ஸ்டண்ட் மாஸ்டரானேன். விஜய் சார் நடித்த ‘லவ் டுடே’தான் என்னுடைய முதல் படம். Stun சிவாங்கிற பேர் அந்தப்படத்திலதான் வந்தது.”

“அது ஏன்... ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மட்டும் அடைமொழியை வெச்சிக்கிறாங்க?”

“சூப்பர் சுப்பராயன் மாதிரி ஆரம்பக்கட்டத்தில இருந்தே அந்த மாதிரி அடைமொழியுடன் பெயர்கள் வந்திட்டு இருந்தது. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் இருந்ததில்ல. கே.எஸ்.ரவிக்குமார் சாரோட முதல்படத்தில இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர்தான் என்னோட படத்துல உனக்கு கேச்சிங்கா இருக்கும்படி பேர் வைக்கிறேன்னு சொல்லி அதிரடியாக stun சிவான்னு பேர் வச்சார்.”

“இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க?”

“தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி  என 80க்கும் அதிகமான படங்கள் பண்ணியிருக்கேன். ‘கண்ணுக்குள் நிலவு’ படத்துக்கு மாநில விருது வாங்கியிருக்கேன். ‘பிதாமகன்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா கிடைக்கல. அதுக்காக மனம் தளரலை. கண்டிப்பாக ஒரு நாள் தேசிய விருது வாங்குவேன் என்ற நம்பிக்கையுடன் உழைத்து வருகிறேன்.”
“ஃபைட் மாஸ்டராக நல்லாதானே போயிட்டிருந்தது...

நடிப்புக்குள்ள எப்படி வந்தீங்க?”

“சாதாரண ஃபைட்டரா இருக்கும்போதே நடிப்பு மீது எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. படப்பிடிப்பு சமயத்தில் திடீர்னு ஏதாவது ஒரு காட்சியில் பத்து பேர் வாங்கனு கூப்பிடுவாங்க. எல்லாரும் ரெடியாகப் போனால், நான் உதவி இயக்குநரைப் பார்த்து டயலாக் இருக்கானு கேட்டு அத மனப்பாடம் பண்ணி ரெடியா வெச்சிருப்பேன். மத்தவங்க சொதப்பும்போது நான் பண்றேன்னு சொல்லி கேட்டு வாங்கி நடிப்பேன். அப்போதிலிருந்து நடிப்பு மேல அவ்வளவு ஆர்வம்.

‘பிதாமகன்’ல நடிக்கும்போது விக்ரம் சார மிரட்டுற மாதிரி ஒரு சீன். அதுல ரிகர்சல் பண்ணும்போது பாலா நடிக்கிறியானு கேட்டாரு. என்ன அந்த சீன்ல நல்லா தெரியும்படி காட்டினார். அதுக்கப்புறம் கமல் சாரோட ‘வேட்டையாடு விளையாடு’ படத்துல முதல் சீன் பண்ணினேன். அது மூலமா பெரிய அறிமுகம் கிடைச்சுது.

‘கோலி சோடா’ படத்தில விஜய் மில்டன் கூப்பிட்டு நடிக்க வச்சார். அத பார்த்துதான் சுசீந்திரன் ‘சாம்பியன்’ படத்துல முழு வில்லனா அறிமுகப்படுத்தினார். இப்ப அந்தப் படத்துக்காக தனியார் விருது வாங்கியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் பெரிய இயக்குநர் படங்களிலும் எல்லா நடிகர்களோடவும் படம் பண்ணணும்.”

“இப்போ ஸ்டண்ட் மாஸ்டரா என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?”

“ஜெயம் ரவியோட ‘பூமி’ படம். அப்புறம் மகிழ்திருமேனி இயக்கத்துல உதயநிதி நடிக்கிற படம் ஒண்ணு பண்றேன். தெலுங்கில் மோகன்பாபு சாரோட மகன் படம், வி.வி.விநாயக் சார் படம், பெல்லங்கொண்டா சுரேஷ் மகன் சாய் படம்னு கைவசம் நிறைய படங்கள் உள்ளது.”

“நடிப்புல என்னென்ன படம்?”

“தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் ‘கிராக்’ படத்தில வில்லனா கமிட்டாகி நடிச்சிட்டு இருக்கேன்.”

“நீங்கள் இயக்கும் படம் பற்றி?”

“என் பையன் கெவின் ஹீரோவா நடிக்க ‘கராத்தேக்காரன்’ படத்தை இப்ப இயக்கிட்டு இருக்கேன். இது முழுக்க ஆக்‌ஷன் கலந்த படமா இருக்கும்.”
“உங்க காதல் கதை பற்றி சொல்லுங்களேன்?”

“அது பெரிய கதை. அவங்க பேர் லேனி. வியட்நாமிஸ். பைக் மெக்கானிக்கா வேலை பார்த்தப்போ சினிமால பைக் சீன் மட்டும் நடிக்க வைப்பாங்க. அந்த சீன் முடிஞ்சதும் அனுப்பிடுவாங்க. முறையா ஃபைட் கத்துக்கணும்னு நினைச்சேன். நண்பர் மூலமா ஸ்டண்ட் சொல்லித்தர தரன் அப்படிங்கிறவர்கிட்ட சேர்ந்தேன். அவரோட பொண்ணுதான் லேனி. எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு கெவின், ஸ்டீபன்னு இரண்டு பசங்க இருக்காங்க. மூத்த பையன் ஹீரோவா நடிக்கிறார்.”
“அப்ப வியட்நாமிஸ் பேசுவீங்களா?”

“இல்லை. ஒருசில வார்த்தைகள் மட்டும்தான் தெரியும். வீட்டில் லேனி நல்லா தமிழ் பேசுவாங்க. அவங்களோட தாத்தா இந்தியன் என்பதோடு மட்டுமல்லாமல் காரைக்குடிக்காரர். அதனால் தமிழ் பிரச்சனை இல்லை.”“ஸ்டண்ட் காட்சிகளை ஒவ்வொரு மொழியிலும் வேற வேற மாதிரி எடுப்பீங்களா? தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் என்ன வித்தியாசம்?”

“தமிழ், தெலுங்கு, இந்தி என்று மொழிகளுக்கு ஏற்ப நிறைய வித்தியாசம் இருக்கு. ஸ்கிரிப்ட்தான் ஃபைட் எப்படினு முடிவு பண்ணும். தெலுங்குப் படத்தில அடிச்சா கதவ உடச்சிட்டு வெளில பறந்து விழுவாங்க. தமிழ்ல அப்படி கிடையாது. திரைக்கதைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.”
“ஸ்டண்ட் ஏன் தத்ரூபமா இருக்கிறதே இல்ல?”

“அப்படி கிடையாது. நான் பண்ணின எந்தப்படம் வேணாலும் எடுத்துக்கங்க. ஒரிஜினலா இருக்கும். தெலுங்கு படமாவே இருந்தாலும் தத்ரூபமா இருக்குற மாதிரிதான் பண்ணுவேன். ‘பிதாமகன்’ பார்த்தா தெரியும். அந்தப்படத்தில ஹீரோ வெட்டியான். அவன் அடிச்சா எப்படி இருக்குமோ அதுமாதிரி பண்ணியிருப்பேன். ஆனால் எல்லாப் படத்திலயும் அதப்பண்ண முடியாது. கதை என்ன கேட்குதோ அதுக்குள்ள எப்படி
பண்ணணுமோ அதத்தான் பண்ண முடியும்.”

“விக்ரம், சங்கீதா கிட்ட ‘பிதாமகன்’ படத்துலே துடைப்பத்துலே அடி வாங்குவாரே... அது நீங்க எடுத்ததுதானா?”

“ஆமா. அதை நான்தான் எடுத்தேன். அந்தக் காட்சியில் ஒரிஜினல் துடைப்பத்துல முகத்திலயே அடிப்பாங்க. அதை எடுக்கும்போது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. காட்சியைவிட ஒரு நடிகனுக்கு முகத்தில தொடர்ந்து அடி விழும்போது என்ன ஆகும். ஆனால் விக்ரம் சலிக்கவே இல்ல. பாலாவுக்கு எல்லாம் ஒரிஜினலா இருக்கணும். சண்டை எல்லாமே நேச்சுரலா  இருக்கணும். யாரும் கொஞ்ச காலத்துக்கு அந்த மாதிரி முயற்சி கூட பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணி பண்ணின படம்தான் பிதாமகன்.”

“எந்த ஹீரோ நல்லா ஃபைட் பண்ணுவாரு?”

“ஃபைட் பண்ணத்தெரியாத ஒரு ஹீரோவ கூட ஃபைட் பண்ண வைக்கிறதுதான் ஸ்டண்ட் மாஸ்டர் வேலை. என்னைப் பொறுத்தவரை எல்லா ஹீரோவும் நல்லாவே ஃபைட் பண்ணுவாங்க. ஃபைட் மாஸ்டர் அவங்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்து கொடுத்தாலே போதும். எல்லா ஹீரோவுக்கும் ஃபைட்னா பிடிக்கும். அதனால் ஃபைட் பண்ண ஆர்வமாக இருப்பாங்க.”

“இப்ப படங்களில் ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராபர் பண்றாங்க. இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“நான் கூட நிறைய வெளிநாடுகள்ல போய் படம் பண்ணிருக்கேன். தமிழ் ‘பில்லா’வ தெலுங்குல பிரபாஸை வச்சு எடுத்தப்ப நான்தான் வெளிநாட்ல நடக்கிற ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பண்ணேன். தமிழ்ல வாங்னு ஒரு வெளிநாட்டுக்காரர் பண்ணியிருந்தாரர். அவர விட நான் நல்லாவே பண்ணியிருந்தேன். அவங்கள பொறுத்தவர அவங்க கிட்ட நிறைய உபகரணங்கள் இருக்கும். அவங்க நல்லாவே ஃபைட் கோரியோகிராப் பண்ணுவாங்க. ஆனா அவங்க ஹீரோவோட மாஸ், கதை புரிஞ்சு பண்ண மாட்டாங்க.”

“தெரியாத ஹீரோவுக்கு ஃபைட் சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அடி வாங்குற மாதிரி பண்ணும்போது நாம ஹீரோவாகலாம்னு தோணிருக்கா?”
“அப்படி நினைச்சதில்ல. ஆரம்பகாலங்கள்ல எல்லாருக்கும் தோணலாம். ஆனா ஒரு ஃபைட் மாஸ்டர் வேலையே ஹீரோவ டிரெய்ன் பண்றதுதான். ஒரு இயக்குநர் கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்கும்போது அவர் கூட்டி வர்ற ஹீரோவை நாம் எப்படி டிரெய்ன் பண்ணி மாஸா காட்டுறோம்கிறதுதான் நம்ம வேலை.”

“ஃபைட் பண்ணும்போது அடிபட்டா அதற்கான சரியான நிவாரணங்கள், இன்ஷூரன்ஸ் எல்லாம் கிடைக்குமா?”

“ஃபைட்டைப் பொறுத்தவரை இன்ஷுரன்ஸ் கிடையாது. ஆனா எங்க யூனியன்ல அதைப் பண்றோம். அப்புறம் அந்த படத் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ எல்லாருமே பார்த்துப்பாங்க. விஜய் சார் கூட ஒரு படத்தில ஒரு ஃபைட்டருக்கு ஒன்றரை லட்சம் கொடுத்தாரு. எங்க யூனியன் மூலமா அடிபடறவருக்கு தேவையான  எல்லாமே பார்த்துக்கிறோம்.”

“அடுத்து என்ன திட்டங்கள்?”

“என் பசங்க கெவின், ஸ்டீபன் இரண்டு பேரும் ஸ்டண்ட் யூனியன்ல மெம்பரா இருக்காங்க. அவங்க படம் பண்ணணும். இப்ப இவங்க என்னோட படங்கள்ல உதவியா இருக்காங்க. இவங்க இருக்கும்போது நிறைய யூத்தோட ஐடியா கிடைக்குது. ‘பூமி’ படத்துல மூணு பேரும் சேர்ந்து பண்ணிருக்கோம். யூத் ஒலிம்பிக் தேர்வுல இந்தியா சார்பா ஸ்டீபன் மட்டும்தான் கராத்தேவுக்காக தேர்வாகியிருந்தார். பசங்களிடம் நிறைய திறமை இருக்கு. இவங்களோட இணைஞ்சு இன்னும் ஆக்‌ஷன்ல நிறைய புதுமை பண்ணணும்.”

- சுரேஷ்ராஜா