ஒரு நாயகன் உதயமாகிறான்!



அறிமுக இயக்குநர் டிஸ்னி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’. இதில் நாயகிகளாக அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா நடித்துள்ளார்கள். முக்கிய வேடத்தில்  எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், அருள் டி.சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை கே.எஸ்.மனோஜ். ஒளிப்பதிவு கே.கோகுல். அமராவதி பிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரித்துள்ளார்.

படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஹீரோ ஆதிக்பாபு, படம் மற்றும் தனது நடிப்பு பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

“அதென்ன ‘குற்றம் புரிந்தால்’னு நெகட்டிவ் டைட்டில்? என்ன மாதிரியான கதை?”

“இது கிரைம் த்ரில்லர் ஜானர் படமாகும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு எவ்வளவு பொருத்தம் என்பதை, படம் பார்த்தவுடன் உணர்வீர்கள்.

ஹீரோவின் மாமா பெண் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதற்காக ஹீரோ அவர்களைப் பழிவாங்கு வதுதான் கதை.

இது வழக்கமான டெம்ப்ளேட் கதை போல் தெரிந்தாலும் ஹீரோ வில்லன்களைப் பழிவாங்கும் விதம் இதுவரை தமிழ் சினிமாவில் கையாளப்படாத புதிய வகை டெக்னிக்காக இருப்பதோடு, திரைக்கதை ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு சஸ்பென்ஸாக நகரும்.

இது கமர்ஷியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக இருந்தாலும், படத்தின் இறுதியில் பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவதும், அதில் இருந்து அவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் மெசேஜாக சொல்லியிருக்கிறோம்.”

“உங்க சினிமா பயணம் எப்படி ஆரம்பித்தது?”

“எனது சொந்த ஊர் கோயமுத்தூர். சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளேன். சராசரி மாணவன் போல் படித்து முடித்ததும் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக் கொண்டு செட்டிலானேன். சிறு வயது முதலே நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன். இந்த நடிகர், அந்த நடிகர் என்றெல்லாம் இல்லாமல், வாரா வாரம் வெளியாகும் புதுப்படங்களை உடனே பார்த்துவிடுவேன்.

இப்படி படம் பார்த்து பார்த்து எனக்குள்ளும் சினிமா ஆசை வளர்ந்துவிட்டது. ஒரு கட்டத்தில் சினிமாவுக்காக முயற்சி செய்யத் தொடங்கினேன். சாதாரணமாக தொடங்கினாலும், சுமார் 8 வருடங்களாக வாய்ப்புக்காக பல நிறுவனங்களையும், பல சினிமா பிரபலங்களையும் சந்தித்திருக்கிறேன்.

பல நிறுவனங்களுக்கு என் புகைப்படங்களையும் அனுப்புவேன். அப்படி என் புகைப்படங்களைப் பார்த்த அமராவதி பிலிம்ஸ் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட வேடத்திற்காக என்னைத் தேர்வு செய்தார்கள்.

ஆனால், என்னை நேரில் பார்த்த இயக்குநர் டிஸ்னி, என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நானும் அவர் சொன்னதைச் செய்தேன். உடனே அவர் ‘என் கதையின் ஹீரோ இவர்தான். இவரைப்போலத்தான் இருக்கவேண்டும்’ என்று கூறி என்னையே ஹீரோவாக்கிவிட்டார்.”

“அப்படியானால் நீங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடவில்லையா?”

“ஹீரோ, வில்லன் அப்படி எல்லாம் கிடையாது. நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும். அதுதான் என் விருப்பம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், என்னையும் ரசிகர்களிடம் நடிகராக அந்த கதாபாத்திரம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி ஒரு கதாபாத்திரமாக இருந்தால் ஒரு காட்சியில் கூட நடிக்கத் தயார்.”

“சினிமாவுக்காக உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?”

“வேறு ஒரு தொழிலில் இருந்தாலும், எப்போதும் சினிமா மீது எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே என்னை சினிமாவுக்கு தயார்படுத்திவிட்டது. அத்துடன், கடந்த 8 வருடங்களாக நான் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது, நான் சந்தித்தவர்கள், அவர்கள் என்னிடம் நடிகனாக எதிர்பார்த்த விஷயங்களை நான் வெளிப்படுத்தியது போன்றவைகளே என்னை சினிமாவுக்கான ஒருவனாக தயார்படுத்திவிட்டது.”

“எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

“முதலிலேயே சொன்னது போலத் தான். இப்படித்தான் நடிக்கவேண்டும் என்பதில்லை. நல்ல வேடம் எப்படி இருந்தாலும் நடிப்பேன். ஆனால், எனக்கு நெகட்டிவ் வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசை. அதிலும், எம்.ஆர்.ராதா போல வித்தியாசமான, குறிப்பாக அவரது ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற படங்களில் நடிக்க வேண்டும்  என்று விரும்புகிறேன்.

இப்போது விஜய் ஆண்டனி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் ஜானர் படங்களும் எனக்கு சூட்டாகும் என்று நினைக்கிறேன். அதனால், அதுபோன்ற கதைகள் அமைந்தால் சந்தோஷப்படுவேன். அதேபோல், பெண்களுக்குப் பிடித்தமான கதைகளிலும்  நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.”

“படக்குழுவினர் என்ன சொல்கிறார்கள்?”

“படப்பிடிப்பு தொடங்கியபோது முதல் இரண்டு நாட்கள் சற்று தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குநர் டிஸ்னி சொல்லிக்கொடுத்ததைப் போலச் செய்தேன். அதன்பிறகு சகஜமாகிவிட்டேன். பிறகு எனது நடிப்புக்கு சுற்றியிருப்பவர்கள் கைதட்டும் அளவுக்கு நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

படம் முடிந்தபின் படத்தைப் பார்த்த அனைவரும் எனது நடிப்பைப் பாராட்டினார்கள். குறிப்பாக ‘முதல் பட நடிகர் போல அல்லாமல், ரொம்பவே பல படங்களில் நடித்த அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறீர்கள். சண்டைக்காட்சிகளும் இயல்பாக வந்திருக்கு என்றெல்லாம் பாராட்டினார்கள்.”

“எதிர்காலத் திட்டங்கள்?”

“நிச்சயம் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எதிர்காலத் திட்டம். ‘குற்றம் புரிந்தால்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வெளியானபிறகே அடுத்த படம் குறித்து அறிவிப்பேன். தற்போது இரண்டு கதைகளைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன்.

ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல வேடமாக இருந்தால் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ரெடி. கோவையில் இருந்து ரகுவரன் சார், சத்யராஜ் சார், பாக்யராஜ் சார் என பல நடிகர்கள் வந்து பிரபலமாகியிருக்கிறார்கள். அவர்கள் வழியில் நானும் தமிழக மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடிக்க வேண்டும் என்பதும் என் எதிர்காலத் திட்டம்.”

- ராஜா