சிம்ரனோடு சேர்ந்து நடிக்க ஜோதிகா விருப்பம்!



நாயகிகளுக்கான முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேடிப் பிடித்து நடித்து வருகிறார் ஜோதிகா. சமீபத்தில் வெளியான ‘ராட்சசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது நடிப்பில் ‘ஜாக்பாட்’ படம் வெளியாகியுள்ளது. சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்துள்ள ஜோதிகா விடம் ஜாலி சாட் பண்ணினோம்.

“கணவன், மனைவியாக நீங்க  இரண்டு பேருமே படப்பிடிப்பில் இருக்கும் சமயத்தில் உங்க குழந்தைங்க யாரை மிஸ் பண்ணுவாங்க?”
“ரெண்டுபேரையுமே மிஸ் பண்ணுவாங்க. பசங்களுக்கு சில விஷயத்திற்கு அப்பா வேணும்,  சில விஷயங்களுக்கு அம்மா வேணும். அதனால் முடிந்தளவுக்கு யாராவது ஒருத்தர் பசங்களோடு தொடர்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.”

“லேட்டஸ்ட் ரிலீஸ் ‘ஜாக்பாட்’  அனுபவம்?”

“அக்‌ஷயா கேரக்டர் எனக்கே எனக்கானதாக இருந்தது. இந்தப்படத்தில் கல்யாண் சாரின் கான்செப்ட் எனக்கு ரொம்பவே பிடித்தது. ஒரு பெரிய ஹீரோ படத்தில் அந்த  ஹீரோவுக்கு என்னவெல்லாம்  இருக்குமோ  அதெல்லாம் இந்தப் படத்தில் வைத்திருந்தார்.

ஹீரோவுக்கு ஈக்குவலா ஒரு ஹீரோயினை திங்க் பண்ணி எழுதும் கல்யாணின்  அந்த தாட்ஸ் எனக்குப் பிடித்தது. கல்யாண் மேல எனக்குப்  பெரிய ஆச்சர்யம். என்னன்னா மூன்று வார அவகாசத்துக்குள் படத்தை முடிச்சிட்டார். ஸ்பாட்டுக்குப் போனா எல்லாப்பக்கமும் கேமரா வச்சிருப்பார். அவர் மட்டுமில்ல, ஒட்டுமொத்த டீமும் சுறுசுறுப்பா இருந்ததால் எங்களால் சுலபமாக படப்பிடிப்பு நடத்தமுடிந்தது.”

“இளம் இயக்குநர்களுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி உள்ளது?”

“ரொம்ப பிரில்லியன்டா யோசிக்கிறாங்க. வித்தியாசமான ஜானர்ல படம் பண்ண ஆர்வம் காட்டுகிறார்கள். நான் பொதுவா கதையை மூன்று மாதத்திற்கு முன்பே வாங்கி மனப்பாடம் பண்ணுவேன். இது பாலா சாரிடம் படித்த பாடம்.”

“உங்க பசங்களுக்கு ‘ராட்சசி’ மாதிரி படங்கள்ல வர்ற ஜோதிகாவைப் பிடிக்குமா?”

“ஒரு நடிகையாக எல்லா வகை படங்களும் எனக்குப் பிடிக்கும். பசங்களுக்கு ‘ஜாக்பாட்’ ஜோதிகாவைத்தான் பிடிக்குதுனு நினைக்கிறேன். என் படங்கள் பற்றி  என் பையனைவிட பொண்ணுதான்  நிறைய பேசுவார்.”

“பயோபிக் படத்தில் நடிப்பீர்களா?”

“அப்படி யாரும் மனதில் இல்லை. இதுவரைக்கும் அந்த ஐடியாவும் இல்லை. மற்றபடி பல இளம் இயக்குநர்கள் எனக்காகவே சில கதைகளை எழுதுறாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெண்கள் பத்தி இன்றைய இளைஞர்கள் எழுதுவது உண்மையாவே அமேசிங்கான விசயம். ஆனால் ஆடியன்ஸ் ஹீரோயின் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கொடுக்க மாட்டேன்றாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு.

பெரிய ஹீரோக்கள் படம்னா போறாங்க. பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சண்டைக்காட்சிகளுக்கு 5 நாள் எடுத்துக்கிறாங்க. அந்தப்படங்களின் வியாபாரம் அப்படி. அதே ஓப்பனிங் இருந்தால் ஹீரோயின் படங்களிலும் அது சாத்தியமாகும். அதேபோல் ஏ.ஆர் ரஹ்மான் பெண்கள் படத்திற்கும்  இசை  அமைக்கணும். அப்பதான் எல்லாருக்கும் அந்த தாட்ஸ் வரும்.''

“தயாரிப்பாளர்  சூர்யா எப்படி?''

“மத்த கம்பெனிகளைவிட இங்க தாராளமா செலவு பண்ணுவாங்க. எனக்கு எங்க கம்பெனி செம்ம கம்ஃபோர்டா இருக்கும். நான் லீட் கேரக்டர்ல நடிச்ச படத்திற்கு முதன்முறையா 100 டான்ஸர் யூஸ் பண்ணியிருக்கறது இந்தப் படத்துக்குத்தான். மேலும் சனி, ஞாயிறு லீவு எடுத்துப்பேன். அந்த சவுகரியமெல்லாம் தயாரிப்பாளர் சூர்யாவிடம்தான் கிடைக்கும்.”

“தயாரிப்பாளர் சூர்யா சம்பள விஷயத்தில் எப்படி?”

“ஓக்கேதான். ‘ராட்சசி’ படத்தோட ஒப்பீடு செய்யும்போது ‘ஜாக்பாட்’ படத்துக்கு சம்பளம் அதிகம்தான். எல்லா சம்பளமும் ஒரே வீட்டுக்குத்தானே வருது. நான் என்ன தனியாவா எடுக்கப் போறேன்?”

“எதிர்மறையான விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?”

“எதிர் மறையான விமர்சனங்கள் வரும் என்று நினைத்தால் சமூகத்துக்கான படங்கள் பண்ண முடியாது. ‘ராட்சசி’ படம் வெளியானதும் அதன் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியருக்கு கடிதம் அனுப்பினார்கள். அந்தக் கடிதங்களை நானும் பார்த்தேன். உண்மையைத்தான் படத்தில் காட்டியுள்ளீர்கள் என்று பலரும் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்கு பயம் எதுவும் இல்ல. பயம் இருந்தா படமே நடிக்க மாட்டேனே..”

“உங்க கேரியரில் ‘ராட்சசி’ முக்கியமான படம். பாசிட்டிவ்வா ஏதாவது விளைவுகள் நடந்திருக்கா?”

“சிலர் ஈரோட்டுல ஒரு கவர்மென்ட் ஸ்கூலுக்கு பஸ் கொடுத்திருக்காங்க. சிலபேர் ஸ்கூலுக்கு ஃபண்ட் கொடுத்திருக்காங்க. இதுதான் பெரிய பாராட்டு.”
“நீங்க ஏன் ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல ஒருநாள் டீச்சரா இருக்கக் கூடாது?”

“அப்படி எல்லாம் போகமுடியாது. அதுக்கு முக்கியமா டிகிரி வேணும்.”

“படம் இயக்குவீங்களா?”

“படம் இயக்கும் ஐடியா இல்லை. எனக்கு அந்தளவுக்கு நாலேஜ் இருக்கான்னு தெரியல. என் லட்சியம் என்னன்னா... பெரிய ஹீரோ படமளவுக்கு நான் நடிக்கும் படம் வசூல் பண்ணணும். ஜஸ்ட்... நூறு கோடி வசூல் பண்ணணும்.”

“உங்களின் இந்த வெற்றிகரமான பயணத்திற்குக் காரணம்?”

“என்னைவிட பெரிய நடிகைகள் சினிமாவில் இருக்கிறார்கள். சூர்யாவால்தான் எனக்கு இப்படியான வெற்றி வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ‘36 வயதினிலே’ படம் பண்ணியபிறகு இரண்டு வருஷம் எனக்குப் படம் வரல. மறுபடியும் ‘மகளிர் மட்டும்’ படத்தை சூர்யா தயாரிச்சார். என்னைப் பொறுத்தவரை நல்ல படம் பண்ணணும். ஏன்னா எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. நல்ல படங்கள் பண்ணுவேன். ஏன்னா எனக்கு 2டி இருக்கு. சூர்யா இருக்கார்.”

“நீங்க ஏன் சோஷியல் மீடியாவுக்கு வர்றதில்ல?”

“அதில் எதாவது நெகட்டிவிட்டீஸ் பார்த்தேன்னா அது மனசைக் காயப்படுத்துது. அதான்.”

“ரேவதியுடன் நடித்துள்ளீர்கள். அடுத்து யார்கூட நடிக்கணும்னு ஆசை?”
“சிம்ரன் கூட நடிக்கணும்னு ஆசை.”

“லைஃப்டைம் கேரக்டர்?”

“அப்படி எந்த யோசனையும் இல்லை. நிறைய படங்கள் நானே  எதிர்பாராமல்  கிடைக்குது. இன்னும் சில நல்ல படங்கள் பண்ணுவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.”

- சுரேஷ்ராஜா