வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் நீயா நானா போராட்டம்!



இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘வாண்டு’.சீனு, ஆல்வின், எஸ்.ஆர்.குணா, ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, ‘மெட்ராஸ்’ ரமா, வின்னர் ராமச்சந்திரன், ரவிஷங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை நேசன், ஒளிப்பதிவு ரமேஷ் வி. மகேந்திரன், தயாரிப்பு என்.முனியாண்டி, மதி எட்டியான்.

‘‘விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர்கள் சொல்வார்கள். அதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லியுள்ளேன்’’ என்று ஆரம்பித்தார் இயக்குநர் ஷாஜி.‘‘இது 1971 ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக இருந்தாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டத்தை விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.

வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தையும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும்’’ என்றார்.

இந்தப் படத்தை ரீது ஷிவானி இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் உலகமெங்கும் வெளியிடுகிறார் நடிகரும் தயாரிப்பாளருமான விஜயகுமார். அவர் நம்மிடம் படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.‘‘என்னுடையது சினிமா பின்னணி கொண்ட குடும்பம். சினிமா குடும்பம் என்பதால் சினிமா ஆர்வம் இயல்பாகவே இருந்தது. ‘கில்லி’ உட்பட ஏராளமான படங்களை விநியோகம் பண்ணியிருக்கிறேன்.

தற்போது ‘அவசரப்படாதீங்க’ என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறேன். அந்த சமயத்தில் இயக்குநர் ஷாஜி ‘வாண்டு’ படத்தை எனக்கு பிரத்யேகமாக ஸ்கிரீன் பண்ணினார். படம் எனக்கு பிடித்திருந்ததால் என்னுடைய சொந்தப் படத்தின் பட்ஜெட்டை எடுத்து இந்தப் படத்தில் முதலீடு பண்ணி ரிலீஸ் பண்ணு கிறேன்.

இதில் நடித்த நடிகர் நடிகைகள் குப்பைமேட்டில் வாழ்ந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இயக்குநர் குப்பை மேட்டில் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.கதைதான் இந்தப் படத்தின் நாயகன். ‘வாண்டு’ இந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார் விஜயகுமார்.

- சுரேஷ்ராஜா