இந்தியாவே மூக்கில் விரல்வைக்கும் ஆக்‌ஷனை அமைத்த இரட்டையர்கள் இவர்கள்தான்!



ஒரு படத்தின் வெற்றிக்கு மியூசிக் உதவியது ஒரு காலம், ஒளிப்பதிவு உதவியது ஒரு காலம். தற்போது ஒரு படத்தின் வெற்றிக்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்களும் உதவுகிறார்கள் என்பது சமீபத்தில் வெளிவந்த ‘கே. ஜி. எஃப்’வெற்றி மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வெற்றிக்கு சொந்தக்காரர்களில் ஒருவர், ஸாரி, இருவர்... அன்பறிவ். இரட்டை சகோதரர்களான இவர்கள் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ஃபைட் மாஸ்டர்களாக அறிமுகமானவர்கள்.

தொடர்ந்து ‘கபாலி’, ‘இருமுகன்’ உட்பட இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் ஃபைட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளார்கள். சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் அபாரமான வசூல் வேட்டை நடத்திய ‘கே. ஜி.எஃப் ’ படத்தில் இவர் களது உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கும் இவர்களை ‘வண்ணத்திரை’க்காக சந்தித்தோம்.

“உங்க ‘கே.ஜி.எஃப்’ பட அனுபவம்  எப்படியிருந்தது?”

“வண்ணத்திரை வாசகர்களுக்கு எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் கதையை இயக்குநர் எங்களிடம் விவரித்த போது, வித்தியாசமான கதைக் களம் என்ற ஒரு விஷயம் எங்களைக் கவர்ந்தது. அதன் பிறகு தயாரிப்பாளர், ஹீரோ யஷ்,  இயக்குநர் பிரசாந்த் நீல், கேமராமேன் புவன் என அனைவரும் அளித்த ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது. இந்தப் படத்தின் ஆக் ஷன் காட்சிகளுக்காக கிட்டத்தட்ட நாற்பது நாள் வரை படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் உற்சாகம் அளித்ததால்தான் சண்டைக் காட்சிகளை சிறப்பாக கம்போஸ் பண்ண முடிந்தது.

திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகள் வரும் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் எங்களின் பொறுப்பு மேலும் கூடியது. அதற்கேற்ற வகையில் நன்றாக திட்டமிட்டு, பணியாற்றினோம்.

ஒரு ஆக் ஷன் காட்சியை படமாக்கும்போது முதலில் நடிகர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொண்டோம். பிறகு கேமரா கோணங்களையும், அதற்கு தேவையான விஷயங்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றினோம். அதனால் தான் எங்களால் திட்டமிட்ட நாட் களுக்குள், அதாவது முப்பத்தைந்து நாட்களுக்குள் ஆக் ஷன் காட்சிகளை படமாக்க முடிந்தது.”

“பீரியட் பிலிம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ரெஃபரென்ஸ் எடுத்தீர்களா?”
“இல்லை. முழுக்க முழுக்கவே எங்களுடைய கற்பனைத் திறன்தான். கதை நிகழும் காலகட்டத்தையொட்டிய பல படங்களின் ஆக் ஷன் காட்சிகள் Rawவாகத்தான் இருந்தது. அதனை தற்போது காட்சிப்படுத்த இயலாது.

அதனால் இயக்குநர் கொடுத்த சுதந்திரத்தையும், நாங்கள் இருவரும் எங்களுக்குள் விவாதித்தும், திரைக்கதையின் தேவையை மனதில் வைத்துத் தான் ஆக் ஷன் காட்சிகளை உருவாக்கினோம். அதே போல் ஆக் ஷன் காட்சிகள் மாஸாக இருக்கவேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் தென்னிந்திய ரசிகர்களின் விருப் பத்தையும் மனதில் வைத்துத் தான் ஆக்  ஷன் காட்சிகளை வடிவமைத்தோம்.”

“பொதுவாக ஆக்‌ஷன் காட்சி களில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்குமே... இந்தப் படத்தில் எப்படி?”

“இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு. கேமராமேனின் அயராத உழைப்பால் தான் இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. இந்த விஷயத்தில் ஹீரோ யாஷின் ஈடுபாடு அபாரம். தான் ஒரு பெரிய ஹீரோ என்பதையே மறந்து, எங்களிடம் ஆக்‌ஷன் காட்சியில் எப்படி இருக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை புதுமுக நடிகர் மாதிரி கேட்டுக் கேட்டு நடிப்பார். 90 சதவீதத்திற்கும் மேல் அவரே தான் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார்.”

“இந்தப் படத்தில் சவாலாக அமைந்த ஆக்‌ஷன் காட்சி எது?”

“சுரங்கத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் இருந்தார்கள். முதலில் நடிகர்களிடையே அந்த இடத்தைப் பற்றிய பயத்தைப் போக்கினோம். அத்துடன் அவர்களது ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் முழு அக்கறை எடுத்துக் கொண்டோம். முதலுதவிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது.

இதற்கு தயாரிப்பாளருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அதே போல் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட ஆக் ஷன் சீனில் போதிய வெளிச்சம் இல்லை. அந்த இடத்தில் படமாக்குவது என்பது சவாலான காரியம். ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமத்திற்கு இடையே குறைவான லைட்டிங்கை  வைத்தே  ஸ்கிரீனல் பிரமிப்பாகக் கொண்டு வந்தார்.”

“அடுத்து என்ன படம் செய்றீங்க?”

“நிறைய இருக்கு. குறிப்பா சொல்லணும்னா ‘கே. ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் நாங்கதான் ஃபைட் பண்றோம். ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கும் கார்த்தி சார் படம், ரவிகுமார் இயக்கும் சிவகார்த்திகேயன்  படம்னு சொல்லிக்கிட்டே போகலாம்.”

“நடிப்பு, டைரக்‌ஷன் ஐடியா இருக்கிறதா?”

“எங்கள் அடையாளம் ஃபைட் மாஸ்டர்ஸ் என்பதுதான். அதனால் எப்போதும் அதை விட்டுத்தரமாட்டோம். சண்டைக் காட்சிகளில் புதுமை புகுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். விரைவில் சென்னையில் ஆக்‌ஷன் அகாடமி ஒன்றைத் தொடங்க உள்ளோம்.அதாவது சண்டைப் பயிற்சிக்கான ஸ்டூடியோ அது.

இங்கு வந்து ஆக் ஷனுக்காக உருவாக்கிய சண்டைக் காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம். இதன் மூலம் படப்பிடிப்பின்போது ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்டு சண்டைக் காட்சிகளை அமைப்பதால், அதனை புதுமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.

இங்கு ஒத்திகை மட்டுமில்லாமல் ஆக்‌ஷன் காட்சியில் எப்படி நடிக்கலாம். என்பதற்கான தொழில்நுட்பத்தையும் கற்பிக்க உள்ளோம். அத்துடன் பாதுகாப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்க உள்ளோம். சண்டைக் கலைஞர்கள், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள், நடிகர்கள், ஆக் ஷன் காட்சியில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என பலருக்கும் இந்த அகாடமி பயனுள்ளதாக இருக்கும். ஹாலிவுட் ஸ்டைலில் workshop நடத்தும் திட்டமும் இருக்கிறது.

ஒரு துறையில் சிறந்து விளங்கும் வெளிநாட்டுக் கலைஞர்களை அழைத்து வந்து இங்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறோம். உதாரணத்திற்கு, ஸ்கேட்டிங் ஃபைட், சைக்கிளிங் ஃபைட்  பயிற்சி அளிக்கவுள்ளோம். இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா போன்ற நாடுகளில் எல்லாம் இது போன்ற ஆக்‌ஷன் அகாடமிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதனைத் தொடங்கவேண்டும் என்று எண்ணி இந்த ஆண்டில் சென்னையில் துவங்குகிறோம்.”

- சுரேஷ்ராஜா