கதை என்னன்னு கேட்காதீங்க.. ஆனா ‘ஏ’ கிளாஸா இருக்கும்!



“இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் ஆன அன்னிக்கே, ‘இதுவும் அடல்ட் படமா?’னு நிறைய பேர் ஆர்வமாகக் கேட்டாங்க. ‘அடல்ட் கன்டன்ட்’னு அவங்க எதை மனசுல நினைச்சு கேட்குறாங்கனு புரியல.ஆனா, கண்டிப்பா இதுவும் ‘ஏ’ சர்டிபிகேட் படமாகத்தான் இருக்கும். என்னோட படங்கள்ல எப்பவும்  பொண்ணுங்கள கேவலமான ஷாட் வச்சு, வல்கரா காட்டுறது மாதிரி எக்ஸ்போஸ் காட்சிகள் எதுவும்  விஷுவல் வச்சதில்ல.

அப்படி வைக்கறதுல எனக்கு விருப்பமும் இல்ல. இது இளைஞர்களுக்கான ‘Coming of age’ படம். தியேட்டருக்கு பசங்களும் பொண்ணுங்களும் மட்டும் வந்தால் போதும். ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் வந்துட வேண்டாம். ஃபேமிலியா பார்க்கிற மாதிரி ஃப்யூச்சர்ல படம் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு.’’ நம்மைப் பார்த்ததுமே கேள்விக்கு இடமின்றி மடமடவென்று பேச ஆரம்பிக்கிறார் ஆதிக் இரவிச்சந்திரன். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வுக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷோடு ‘காதலைத் தேடி நித்யா நந்தா’வாக வந்திருக்கிறார்.

“திரும்பவும் ஒரு ‘ஏ’ படமா?”

‘‘இந்தப் படம் இதுவரை நீங்க பார்த்திராத காவியம்.... தமிழ் சினிமாவில் முதல்முறையாக, புதுமுயற்சின்னெல்லாம் எந்த பில்டப்பையும் பண்ணல.  ஒரு க்யூட்டான காதலுக்குள்ள ஃபேன்டஸியும், ஹாரரும் கலந்து கொடுத்துருக்கேன்.

ஆனா, சில ஃப்ரெஷ்ஷான விஷயங்களும் சொல்லியிருக்கேன். இது ‘ஏ’ சர்ட்டிபிகேட் படம்னாலும், கண்டிப்பா இதை ஆஸ்காருக்கு அனுப்புவேன். அங்கே இது செலக்ட் ஆகுதோ  ஆகலையோ அதைப்பத்தி கவலை இல்ல. ஆனா, ஆஸ்காருக்கு அனுப்புறதுல உறுதியாக இருக்கேன்.’’

“மறுபடியும் ஜி.வி.பிரகாஷ்?”

“முதல்படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தோட செகண்ட் ஷெட்யூல்லேயே ஜி.வி.பி சாருக்கு என் மேல பெரிய நம்பிக்கை வந்திடுச்சு. ஒருநாள் அவர் என்கிட்ட ‘நீங்க அடுத்து என்ன கதை வச்சிருக்கீங்க..?’ன்னு உரிமையாகக் கேட்டார். சட்டுனு அவர்கிட்ட ஒரு ஒன்லைனை சொன்னேன். ‘சூப்பர்.

அதையும் நம்ம காம்பினேஷன்லேயே பண்ணுவோம்’னு சொன்னார். சந்தோஷமாகிட்டேன். ஆனா, திரும்பிப் பார்க்கறதுக்குள்ள அவர் மளமளவென நிறைய படங்கள்ல கமிட் ஆகிட்டார். பிடிக்க முடியல. அவரா வரட்டும்னு நானும் கொஞ்சம் வெயிட் பண்ணினேன். அப்படியும் அவரோட கால்ஷீட் கிடைக்கிற மாதிரி தெரியல. அவ்ளோ டைட் பிசியில் இருந்தார்.

அந்த இடைவெளியில் வேற ஒரு ஹீரோவுக்கு படம் பண்ணிட்டு, மறுபடியும் இவரிடம் வந்திடலாம்னு தோணுச்சு. அப்படி தொடங்கினதுதான் சிம்பு சாருக்கான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. அதோட கிளைமேக்ஸ்ல ஜி.வி.பி சார் சின்னதா ஒரு கேமியோ ரோல் பண்ணியிருப்பார். அதோட ஷூட்டிங் நடந்த அன்னிக்கே ‘அடுத்து நம்ம படத்தை தொடங்கிடலாம் ஆதிக்’னு நம்பிக்கை கொடுத்துட்டு போனார்.

அப்புறம் ‘ட்ரிப்பிள் ஏ’ படமும் ரிலீஸ் ஆச்சு. படம், மாபெரும் ரிசல்ட். அதுல கொஞ்சம் கலங்கிட்டேன். கரெக்ட்டா அந்த டைம்ல ஜி.வி.பி சார்கிட்டயிருந்து போன் வந்துச்சு. ‘என்ன பண்றீங்க.... ஃப்ரீயா இருந்தா நம்ம ஆபீஸ் பக்கம் வாங்க’ன்னார். நானும் கொஞ்சமும் அசராமல் ‘ஃப்ரீயாகத்தான் இருக்கேன் செல்லக்குட்டி’னு செல்லமா சொல்லி, ஆரம்பிச்ச படம்தான் இது.”

“படத்தோட ஒன் லைனர் என்ன?”

“புரொடியூஸரும் இதையேதான் அப்பப்போ கேட்கிறார். தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? ஜி.வி.பி சாரும் கூட, ‘என்ன கதைடா பண்ணியிருக்கே.... ப்ளீஸ் சொல்லுடா’னு கேட்டுக்கிட்டிருக்கார். நானும் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன். நான் இப்படி விளையாட்டா சொன்னால் கூட, தயாரிப்பாளரும், ஹீரோவும் என்மேல அப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்காங்க. அதை காப்பாத்துற பொறுப்பு எனக்கும் இருக்கு.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வுலே பசங்களோட பாயின்ட் ஆஃப் வியூல இருந்து சொல்லியிருப்பேன். இதுல பசங்க சொல்றதும் கரெக்ட்டு, பொண்ணுங்க சொல்றதும் கரெக்ட்டுனு ரெண்டு பேர் பார்வையில் இருந்தும் பேசியிருக்கேன். டெக்னாலஜி மாறியிருக்கிறது மாதிரி நம்ம கல்ச்சரும் காதலும் மாறிடுச்சு.

அதை இப்ப உள்ள தலைமுறைக்கு ஏத்த மாதிரி சொல்லியிருக்கேன்.  ஜி.வி.பிரகாஷ்,  இதுல மிலிட்டரி ஸ்கூல் முடிச்சிட்டு, அப்பாவோட பிசினஸை கவனிக்கறவரா வர்றார். அவருக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர். ‘அனேகன்’ல அமைராவின் பெர்ஃபாமன்ஸ் பார்த்து, இதுல கமிட் பண்ணினோம். இதுல அவங்க காலேஜ் போகும் பொண்ணு. இவங்களோட சஞ்சிதா ஷெட்டி நல்ல ரோல் பண்ணியிருக்காங்க.  

சோனியா அகர்வாலுக்கு குத்துப்பாட்டும், லவ் சீன்ஸும் இருக்கு. அப்புறம், வேதானு ஒரு புதுப்பொண்ணும் அறிமுகமாகுறாங்க. அவங்க டெல்லியில் சோஷியல் ஆக்ட்டிவிஸ்ட்டா இருந்தவங்க. ரொம்ப தைரியசாலி பொண்ணு. படத்துலேயும் தைரியமா சில விஷயங்கள் பண்ணியிருக்காங்க.

‘கவண்’, ‘கவலைவேண்டாம்’ அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ஊட்டியில் நடுராத்திரியையும் அவ்ளோ லைட்டை போட்டு பகல் மாதிரி ஆக்கிட்டார். அங்கே ஒருத்தரையும் அவர் தூங்க விடலை.

அப்படி ஒரு பிரைட் லைட்டிங். என்னோட படங்கள்லேயே விஷுவலில் பிரமாதமான படமாகக் கொண்டு வந்திருக்கார். லால்குடி இளையராஜாவின் செட்களும் பேசப்படும். ஜி.வி.பிரகாஷ் இசையமைச்சிருக்கார். பாடல்கள் பிரமாதமா வந்திருக்கு.”

“ஜி.வி.பிரகாஷை நீங்க செல்லக்குட்டின்னு கொஞ்சுறதா சொல்றாங்களே?”

“அவரை ‘குட்டிம்மா’னுதான் ஆரம்பத்துலே கூப்பிட ஆரம்பிச்சேன். அப்புறம்தான் செல்லக்குட்டியா ஆச்சு. நம்ம சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கற நண்பர்கள் நிறையபேர் இருக்காங்க. ஆனா, கஷ்டத்துல பங்கெடுத்துக்கறவங்க ஒருசிலர்தான்.

அதுல முதலிடத்துல இருக்கறவர் ஜி.வி.பி சார். ‘தெனாலி’யில் கமல் சார் ‘நீ தெய்வம் மச்சான்’னு ஒரு டயலாக் சொல்லுவார். அந்த மாதிரி அவர். ஏன்னா, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கதையை எந்த ஹீரோவுக்குச் சொன்னாலும் அதுல நடிச்சிருப்பாங்க. ஆனா, ஹீரோவாகும் முயற்சியில் இருக்கிறவங்க கண்டிப்பா அதை பண்ணியிருக்க மாட்டாங்க.

கேரியர் நெகட்டிவ்வாக போயிடுச்சினா என்ன ஆகும்னு பயந்திருப்பாங்க. ஆனா, ஜி.வி.பி-க்கு தன்னம்பிக்கை அதிகம். அவரோட வயசுல அப்படி ஒரு கான்பிடன்ஸ் ரொம்ப பெரிய விஷயம்.  ஆனா, நிஜத்துல அந்தப் படத்துல அவரை நான் காட்டினதுக்கு நேரெதிரானவர். சமூக நலனில் அக்கறையுள்ளவர். யாரோடவும் பெருசா பேசமாட்டார். நாலு சுவத்துக்குள்ள இசைதான் உலகம்னு வாழ்ந்துக்கிட்டிருந்தவர்.

அந்தப் படத்துல கிஸ்ஸிங் சீன்ல அவர் கொடுத்த டார்ச்சர் இன்னும் ஞாபகத்துல இருக்கு. ஹீரோயினோட லிப்லாக்ல நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார். ‘லிப்லாக் சீனெல்லாம் நீ ஏன் எடுக்கறே? எங்க வீட்டுல என்னைத் தப்பா நினைப்பாங்க’ன்னார். 

இப்படி ஹீரோயின் சொல்ல வேண்டிய டயலாக்கையெல்லாம் அவர் சொல்லி பிடிவாதம் காட்டினார். ஆனாலும் கன்வின்ஸ் பண்ணி நடிக்க வச்சேன். இந்த சின்ன வயசுல புரொட்யூசர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர்னு மல்டி டேலன்ட்டடா இருக்கிறதைப் பார்த்து பிரமிச்சிருக்கேன்.”

“சிம்பு சார்?”

“ஆயிரம் நடந்திருச்சு. இப்பகூட சிம்பு அண்ணா மேல கோபமோ, வருத்தமோ, எதிர்ப்போ கிடையாது. அதே மாதிரிதான் அவருக்கும் என்மீதும். அந்த ஆடியோ சர்ச்சைக்குப் பிறகும் கூட அவரே போன் பண்ணி பேசினார். நானும் பேசினேன். அவரோட பேட்டியில் கூட என்னைப் பத்தி நல்லவிதமாகச் சொல்லியிருந்தார். ‘நாயகன்’ கேரக்டர்தான் அவரும். அவரை யாராலேயும் கரெக்ட்டா புரிஞ்சுக்கவே முடியாது. சில சூழ்நிலைகள்னால ‘ட்ரிப்பிள் ஏ’ அப்படி ஆகிடுச்சு.

மூணு மணிநேரத்தில் முடிஞ்சிடுற கதையாகத்தான் அந்தப்படம் வந்திருக்க வேண்டியது. அதைச் சொல்லித்தான் சிம்புசார்கிட்டே கதையையே ஓகே. பண்ணினோம். ஆனா, இன்னொரு பார்ட்டுக்கான விஷயமான போதுதான் அவ்ளோ பிரச்னை ஆகிடுச்சு. ஆரம்பத்துல நினைச்சது மாதிரி மொத்த படமும் ஒரே பார்ட்டுல முழுசா வந்திருந்தா எல்லா ஆடியன்ஸும் ஜாலியா என்ஜாய் பண்ணி ரசிக்கற படமா வந்திருக்கும்.”

- மை.பாரதிராஜா