V for அஜித்குமார்! : தமிழ் சினிமா சென்டிமென்ட்ஸ்



* பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பாலாஜி தமிழில் நேரடியாக தயாரித்த ஒரே படம் ‘தங்கை’. அதன் பிறகு அவர் தயாரித்த படங்கள்  பெரும்பாலும் இந்தி ரீமேக் தான். அவரது படங்களில் ஹீரோவுக்கு ராஜா என்றும், ஹீரோயினுக்கு ராதா என்றும் பெயர்கள் இருக்கும்.

* இயக்குநர் ஹரியின் படங்களில் டைட்டில் கார்டில் அவரது பெயர் வரும்போது அதன் பின்னணியில் கோயில் கோபுரம் ஒன்று  கண்டிப்பாக இடம்பெறும். காரைக்குடியில் ஒரு ஷாட்டாவது எடுத்துவிடுவார். அது திருநெல்வேலியில் நடக்கும் கதையாக இருந்தாலும்,  காரைக்குடி வாசம் கண்டிப்பாய் வீசும். அதேபோல  நாய்க்கும் சின்னதொரு முக்கியத்துவம் இருக்கும்.

* சாய்பாபாவிற்கு உகந்த தினமான வியாழக்கிழமையில் தனது பட பூஜை, அறிவிப்புகள், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு இருக்குமாறு பார்த்துக்  கொள்வார் அஜித். அதேபோல ‘V’ வரிசையில் டைட்டில் அமைவதை அதிர்ஷ்டமாகக் கருதுவார். ‘வான்மதி’யில் தொடங்கிய  சென்டிமென்ட் இது. ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ எனத் தொடர்ந்து இப்போது ‘விஸ்வாசம்’ வரை தொடர்கிறது.

* இயக்குநர் ராமின் படங்களில் ஹீரோக்கள் தாடியுடன் தான் வலம் வருவார்கள். ‘கற்றது தமிழ்’ தொடங்கி இப்போது மம்மூட்டி நடிக்கும்  படம் வரை ‘தாடி’ வளர்த்திருக்கிறார்கள்.

* இயக்குநர் ஷங்கரின் ஒரு சில படங்களைத் தவிர, மீதமுள்ள படங்களில் எல்லாம் கண்டிப்பாக ஃப்ளாஷ்பேக் ஒன்று இடம்பெறும்.

* தான் இயக்கும் படங்களின் பாடல் காட்சியின் போதோ, அல்லது படத்தின் கிளைமாக்ஸிலோ ஒரு ஃபிரேமிலாவது தலைகாட்டுவது  கே.எஸ்.ரவிக்குமாருக்குப் பிடித்தமானது.

* இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் படங்களில் அவரது சொந்த ஊரான ‘கள்ளக்குறிச்சி’ டயலாக்கிலாவது இடம்பெற்று விடும்.

* ‘மின்னலே’வில் இருந்து இப்போது எடுக்கும் படங்கள் வரை அதில் ‘அமெரிக்கா’வை குறிப்பிட்டு விடுவது கவுதம்மேனனின் ஸ்டைல்.

* மணிரத்னம் படங்களில் ட்ரெயின் ஷாட், மழை கண்டிப்பாக இடம்பெறும். அதே போல ஒரு கேரக்டர் உயரமான இடத்தில் இருந்தும்,  இன்னொரு கேரக்டர் அதன் அடிவாரத்திலிருந்தும் (கத்தி பேசுவார்) பேசுவது உண்டு.

* ஆள்மாறாட்ட காட்சிகள் என்றாலே சுந்தர் சி.க்கு அல்வா சாப்பிடுவது போல.... அவரது படங்களில் ஆள்மாறாட்ட காட்சிகள் நிச்சயம்  இடம்பெறும்.


* மிஷ்கின் படங்களில் ‘இருட்டு’, ‘கால் ஷாட்’, ‘ஹீரோ தலையைக் குனிந்துகொண்டே பேசுவது..’ இடம்பெறும். அதே போல பிச்சைக்காரர்,  திருநங்கை, மனநலம் பாதித்தவர்கள் போன்ற எளிய மனிதர்களை இரக்க குணம் மிகுந்தவர்களாகக் காட்டுவது வழக்கம்.

*கிரேசி மோகன் தனது பட ஹீரோயின்களுக்கு ஜானகி, மைதிலி என பெயர்கள் வைத்துவிடுவார். அதே போல விசுவும், அவரது  ஹீரோயினுக்கு உமா என பெயரிட்டிருப்பார்.

* சீன்கள் ஷூட் பண்ணும் போதும் சென்டிமென்ட் கடைப்பிடிப்பது உண்டு. ஒருவர் பிணமாக நடிப்பதற்கு முன்னர் அவருக்கு எதுவும்  நேரக்கூடாது என்பதற்காக தீபாராதனை காட்டிய பின்னர்தான் பிணமாக நடிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி ‘செத்து’ நடித்து பின்னர், உடனே  ஷாட்டை அப்படியே முடித்துவிட மாட்டார்கள். அவரைச் சிரிக்க வைத்து ஒரு ஷாட் எடுத்து முடித்த பின்னர்தான் (அது படத்தில்  இடம்பெறாது) அடுத்த சீனுக்கான ஷாட்டிற்கு தாவுவார்கள்.

தொகுப்பு : மை.பாரதிராஜா