இயக்குநரை துரத்தித் துரத்தி ஹீரோ ஆனவர்!
“சத்யராஜ், கிஷோர் போன்ற ஆளுமைகளிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன்’’ என்கிறார் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தில் நாயகனாக நடித்த விவேக் ராஜ்கோபால்.மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சர்ஜுன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்ற படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’. இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும், மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பார்கள். விவேக் ஓர் அறிமுக நடிகராக இருந்தாலும், அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருந்தார்.
‘‘நான் சென்னை பையன். லதா ரஜினி நடத்தும் ஆஸ்ரம ஸ்கூலில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தேன். லயோலாவில் டிகிரி முடித்தேன். படிக்கும் காலத்திலிருந்தே சினிமா கிரேஸ் அதிகம். நல்லா படிக்கிற பையனா இருந்தாலும், சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது. டிகிரிக்குப் பிறகு கூத்துப் பட்டறையில் சேர்ந்தேன். அங்கு எனக்கு பயிற்சி அளித்தவர் ‘ஜோக்கர்’ பட நாயகன் சோமசுந்தரம் . நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன். பட வாய்ப்புக்காக இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன் . நான் சந்தித்தபோது அவர், பிரபலமான நடிகரை ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருப்பதாகவும், இல்லா விட்டால் புதுமுகம்தான் என்றார்.
ஏற்கெனவே பலரையும் ஆடிஷன் மூலம் பார்த்து நாலு பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். ஆனாலும் நான் விடவில்லை. விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும்போது நானும் கூடவே இருந்தேன். அது கூட எனக்கு ஒரு பாடமாக இருந்தது . இயக்குநரின் எண்ணம், எதிர்பார்ப்பு பற்றி அறிய முடிந்தது. ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை எல்லாம் வந்தது. ஏனென்றால் உடன் நடிப்பவர்கள் சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி என்று ஏற்கனவே பிரபலமானவர்கள் இருக்கும்போது இயக்குநர் நான் ஏற்ற தாமஸ் பாத்திரத்துக்குப் பிரபலமான ஒரு நடிகரைக் கூட நடிக்க வைத்திருக்க முடியும், இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு எப்படியும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த டைரக்டர், புரொடியூசர் சுந்தர் அண்ணாமலை சார் இருவருக்கும் மிகப்பெரிய நன்றியை நான் சொல்லியே ஆகணும்’’ என்றவரிடம் படப்பிடிப்பு அனுபவம் பற்றிக் கேட்டால் பரவசமாகிறார்.
‘‘இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். சத்யராஜ் சாருடன் நடிக்கவேண்டும். அவர் பெரிய நடிகர். அனுபவசாலி. ‘பாகுபலி’ படம் எல்லாம் வந்து அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது. ஸ்பாட்டில் அவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம், பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகப் பேசிப் பழகி என்னை ஆச்சரியப்பட வைத்தார். நான் நடித்ததைப் பார்த்து ‘பரவாயில்லையே, பையன் நல்லா பண்றானே’ன்னு இயக்குநரிடம் கூறினாராம். பிறகு படம் பற்றி அவர் பேசும்போதெல்லாம் கூட என்னையும் பற்றிப் பேசுவார். அவருடைய பெருந்தன்மை ஆச்சரியப்பட வைத்தது. அதேபோல கிஷோர் சாரும். அவர் எவ்வளவு நல்ல நல்ல பாத்திரங்களில் நடிப்பவர்! `ரிச்சி’ படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் எனக்குப் பிடிக்கும். அவருடன் நான் இணைந்து நடிப்பது, படம் முழுக்கப் பயணம் செய்வது என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு. அவர் அருகில் நான் இருக்கும்போது எனக்கு பலம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது. அவரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப் படுத்தினார்.
அப்புறம் வரலட்சுமி. சினிமாப் பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். அது மட்டுமல்ல, ‘தாரை தப்பட்டை’ படத்தில் சண்டைக்காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். பாடல் காட்சியிலும் அதே போல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்த பின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான கண்ணியமான நடிகை. இப்படி ஒரே படத்தின் மூலம் மறக்கமுடியாத பல அனுபவங்கள்.”
“பாராட்டு?”
“பலரும் என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள், நான் பிரமிக்கும் ஜாம்பவான்கள் இயக்குநர்கள் கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சித்தார்த் என்று தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் வரை பலரும் படக் குழுவை வாழ்த்தி ட்விட்டரில் என்னையும் டேக் செய்திருந்தார்கள். அது மறக்கமுடியாதது.”
“எப்படிப்பட்ட நடிகரா பேரெடுக்க ஆசை?”
“நான் ஒரு கதாநாயகன் என்கிற பெயரில் வர விரும்பவில்லை, நான் ஒரு நடிகன்; நான் ஒரு இயக்குநரின் நடிகன். இப்படி அறியப்படவே ஆசை. நல்லதோ கெட்டதோ, எப்படிப்பட்ட பாத்திரமும் ஏற்கத் தயார். என்னை விட என் பாத்திரம் பேசப்பட வேண்டும். இதுவே என் விருப்பம், கனவு எல்லாமே.”
- சுரேஷ்ராஜா
|