MR.சந்திரமௌலி
கார்ப்பரேட் மோதலில் பலியாகும் அப்பாவிகள்!
அடுத்தடுத்து அடல்ட் படங்கள் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கெளதம் கார்த்திக். அதன் காரணமாகவே அவர் நடித்துள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ளது. இரண்டு கார்ப்பரேட் நிறுவங்களுக்கிடையே நீயா, நானா போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் அப்பாவி மக்கள் எதிர்பாராவிதமாக பலியாகிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் தன் அப்பா கார்த்திக்கை விபத்தில் பறிகொடுக்கிறார் குத்துச்சண்டை வீரரான கெளதம். ஒரு கட்டத்தில் அது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்பதை உணர்கிறார். மரணத்துக்குக் காரணமானவர்களை எப்படி தேடிப்பிடித்து பழிவாங்குகிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
மணிரத்னம் படத்தில் நடித்தும் கிடைக்காத புகழை ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ போன்ற படங்களின் மூலம் பெற்று முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கெளதம் கார்த்திக், இதில் நல்லபிள்ளை மாதிரியான கதையைத் தேர்வு செய்து, குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார். தனிமையில் அப்பாவை நினைத்து உருகும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
கெளதம் அப்பாவாக கார்த்திக். ரியல் லைஃபிலும் இவர்களுக்குள்ளான உறவு இப்படித்தான் இருக்குமா என கேட்குமளவுக்கு அப்பா - மகன் இருவரும் நெஞ்சுருகி பாசமழையில் நனைய வைக்கிறார்கள். வயதானாலும் அந்த ஸ்டைல், காமெடி சென்ஸ் கார்த்திக்கிடம் குறையவில்லை.
கொழுகொழுன்னு மொந்தம்பழம் மாதிரி கிண்ணுன்னு இருக்கிறார் ரெஜினா. இரண்டாவது பாதியில் அடக்கி வாசிக்கணும் என்பதால் முதல் பாதியிலே கடையைப் பரப்பிவிடுகிறார். விபத்தால் கௌதமுக்கு ஏற்படும் குறையைச் சமாளிக்க இவர்கள் கையாளும் டெக்னிக் சம்திங் டிஃபரன்ட். காமெடிக்குன்னு சதீஷ் இருந்தாலும் மேலோட்டமாக நடித்து கடமையை நிறைவேற்றுகிறார்.
வரலட்சுமி லேட்டாக வந்தாலும் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், மைம் கோபி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.சாம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையாலும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார்.
நடிகர்களிடமும் டெக்னிக்கல் டீமிடமும் இயக்குநர் திரு நன்றாக வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. முதல் பாதியை ஜாலியாகவும் இரண்டாவது பாதியை சீரியஸாகவும் எடுத்துச் சென்றுள்ள விதம் இயக்குநரின் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிறது.வழக்கமான பழிவாங்கல் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையில் கவனம் ஈர்த்துள்ள திருவுக்கு இனி எல்லா முயற்சியும் திருவினையாக்கும்.
|