ரவுடிகளிடம் வேலை பார்க்கும் நல்லவன்!



தமிழ்நாட்டிலிருந்து அத்தனை ரவுடிகளும் ஆந்திராவுக்குப் போய்விட்டாலும், சென்னையில் செயின் திருட்டும் வழிப்பறியும் நடந்துகொண்டுதான் இருக்கும். எனவேதான் அதையே தன் படத்தின் கதைக்கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் விமலா பெருமாள். படத்துக்கும் ‘வெடிகுண்டி பசங்க’ என்று அராஜகமாக டைட்டில் வைத்திருக்கிறார்.
சப்ஜெக்ட் லோக்கலாக இருந்தாலும் கதைக்களம் மலேசியாவாம். படத்தை ‘ஸ்ரீஐஸ்வர்ய ஜனனி கிரியேஷன்ஸ்’ சார்பில் ஜனனி கே பாலு, ‘வீடு புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் தினேஷ் குமார் இருவரும் இணைந்து பிரும்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

இதன் நாயகன் தினேஷ் குமார். நாயகி சங்கீதா கிருஷ்ணசாமி. இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக், மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு சிதம்பரம்.ஆடியோ விழாவை விமரிசையாக நடத்திய திருப்தியில் இருந்த இயக்குநர் விமலா பெருமாளிடம் பேசினோம்.

‘‘நாயகன் தன் நண்பர்களுடன் மாமா நடத்தும் இசைக்குழுவில் வேலை செய்து வருகிறான். தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று வேறொரு இடத்தில் வேலைக்குச் சேர்கிறான்.

ஆனால் -அந்தக் கும்பல்தான் நகரத்தில் நடக்கிற பல முக்கியமான திருட்டுச் சம்பவங்களைச் செய்திருக்கிறது என்ற மறுபக்கத்தை அறியாமலேயே அங்கு வேலை செய்துகொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த கும்பலைப் பற்றிய உண்மையை நாயகனின் தந்தை எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறான்.

அதே நேரத்தில் நாயகனின் முதலாளியைக் கைது செய்வதற்காக காவல்துறை தனிப்படை அமைக்கிறது. இது எதையுமே அறியாத நாயகனைத் தொடர்ந்து  தனது தவறான காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் அவனுடைய முதலாளி.நாயகியின் பிறந்தநாளன்று, நாயகனுக்கு ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படுகிறது.

ஆனாலும், எப்படியாவது நாயகியைச் சந்தித்து விட வேண்டும் என ஆசைப்படுகிற நாயகன்  முதலாளியையும் அழைத்துக் கொண்டு போகிறான். அங்கே எதிர்பாராத விதமாக நாயகிக்கு பெரிய அசம்பாவிதம் நடக்கிறது. அதற்கு நாயகன்தான் காரணம் என காவல்துறை அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

நாயகிக்கு என்ன ஆனது, அவளின் நிலைமைக்குக் காரணம் யார்? தான் குற்றவாளி இல்லை என எப்படி ஹீரோ நிரூபித்தான் போன்ற கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்லி யிருக்கிறேன். வழிப்பறி கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதுதான் இந்தப் படத்தோட ஹைலைட்’’ என்கிறார் விமலா பெருமாள்.

- எஸ்