வெல்வெட் நகரத்தில் 48 மணி நேரம்!



அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கும் படம் ‘வெல்வெட் நகரம்’. இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ்குமார் நடராஜனிடம் கேட்டபோது, “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாக்கியுள்ளேன். இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழுப் பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி.  தலைநகரத்தில் அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்‌ஷன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம்’ இருக்கும்” என்றார்.

- எஸ்