சூட்டைக் கிளப்புவார் ரெஜினா!



‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ என்று படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் திரு, இப்போது ‘மிஸ்டர் சந்திரமெளலி’யில் பிஸியாக இருக்கிறார். விஷாலோடு ஹாட்ரிக் அடித்தவர் திடீரென கார்த்திக் - கெளதம் கார்த்திக் காம்பினேஷனுக்கு மாறியிருக்கிறார்.

“மணிரத்னத்தின் ‘மவுனராகம்’ படத்தில் கார்த்திக்கின் ‘சந்திரமெளலி காமெடி’ ரொம்ப பிரபலம். படத்தோட கதை, அதோட தொடர்ச்சியா...?”

“இது மல்டி ஜானர் மூவி. எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படம். அப்பா - மகன் கதை. நிஜவாழ்வு அப்பா, மகனையே நடிக்க வெச்சிருப்பதுதான் ஸ்பெஷல். படத்தோட டைட்டில் உங்களைப் போலவே நிறைய பேருக்கு கியூரியாசிட்டி கிரியேட் பண்ணியிருக்கு. படம் வர்ற வரைக்கும் மத்த விஷயங்களை சஸ்பென்ஸா வெச்சிருக்க விரும்பறேன்.”

“அப்பாவும், மகனும் என்ன சொல்றாங்க?”

“கார்த்திக் சார் அதே பழைய இளமை மற்றும் இமேஜோடு இருக்காரு. அவரோட தனித்துவமான மேனரிசம் இக்கால ரசிகர்களையும் கவரும். அவரோடு கெளதமை நிறைய பேர் ஒப்பிட்டுப் பார்க்குறாங்க. கார்த்திக் சார் நூறு படங்களுக்கும் மேலாக நடிச்சவர். கெளதம் இப்போதான் ஆறேழு படம் பண்ணியிருக்காரு. இருவரையும் ஒப்பிடுவது தவறு. வளரும் நடிகருக்கு அவர் வளரும்வரை வாய்ப்பு கொடுத்துவிட்டு விமர்சிப்பதே நியாயம்.

கார்த்திக் சாருக்கு காட்சிகள் முடிஞ்சபிறகும்கூட ஸ்பாட்டில் நின்னு மகன் நடிக்கிறதை பார்த்துக்கிட்டே இருக்காரு. ஒரு காட்சியை ஒரே டேக்கில் கெளதம் பண்ணினப்போ சந்தோஷமா கைதட்டி ரசித்தார். எங்கிட்டே வந்து ‘தேங்க்ஸ்’ அப்படின்னு சொல்லிட்டுப் போனாரு. நெகிழ்ந்துட்டேன்.”

“கெளதமோடு ரெஜினாவின் போஸெல்லாம் கசமுசான்னு இருக்கே?”

“ரெண்டு பேருக்கும் செம கெமிஸ்ட்ரி. ஒரு டூயட்டுக்கு பிகினி காஸ்ட்யூம் தேவைப்பட்டது. இதுவரை பிகினி போட்டதில்லைன்னு மறுத்தவங்க, அப்புறம் அவங்களா இன்வால்வ் ஆகி ஓக்கேன்னு சொல்லிட்டாங்க.

தாய்லாந்துலே படம் பிடிக்கப்பட்ட அந்தப் பாட்டு தமிழ்நாட்டுலே பயங்கரமா சூட்டைக் கிளப்பும். ரெஜினா ரொம்ப நல்ல ஆர்ட்டிஸ்ட். தமிழில் அவங்களுக்கு இன்னும் சரியான பிரேக் கிடைக்கலை. இந்தப் படத்துக்குப் பிறகு அவங்களுக்கு தமிழில் மிகப்பெரிய இடம் கிடைக்கும்னு நம்புறேன். ரெஜினா, இயக்குநரின் நடிகை. அவங்களை நாம இன்னமும் கொஞ்சம் கூடுதலா பயன்படுத்திக்கணும்.”

“வரலட்சுமி?”

“கொஞ்சம் விவகாரமான ரோல். அதே நேரம் முக்கியமான ரோலும் கூட. எனக்கு நல்ல நண்பர்னாலும் ‘பண்ணுறியா?’ன்னு கொஞ்சம் தயங்கிக்கிட்டேதான் கேட்டேன். ‘இதுக்கு எதுக்கு தயங்கறே? கண்டிப்பா பண்றேன் திரு..’ன்னு சொல்லிட்டு பண்ணியிருக்காங்க.

இந்தக் கதையில் ஒரு இயக்குநராக எல்லாருடைய கேரக்டரும் எனக்குப் பிடிக்கும். ஆனால் ஒரு ஆடியன்ஸ் பார்வையில் எனக்கு பிடிச்ச ரோல் என்றால் அது வருவுடைய ரோல்தான். சந்திரமெளலி கேரக்டருக்கு எப்படி அதிக சிரத்தை எடுத்து ஸ்கிப்ரிட் பண்ணினேனோ, அதேபோல் பைரவி என்ற இந்தக் கேரக்டருக்கும் ரொம்ப மெனக்கெட்டேன்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“சாம் சி.எஸ். மியூசிக் பண்ணியிருக்கிறார். படத்துல மூன்று பாடல்கள்தான் இருந்தது. விஷுவல்ஸ் பார்த்துட்டு இரண்டு பாடல்களை சாம் சேர்த்துள்ளார். இந்த இடத்துல ஒரு சாங், இன்னொரு குட்டி சாங் என்று இன்வால்வாகி போட்டுக் கொடுத்தார். ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு அவருக்கு பெரிய பேர் கொடுக்கும்.  

ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். என்னுடைய முந்தைய படங்களில் வேலை பார்த்திருக்கிறார். இந்தப் படத்தை 42 நாட்களில் முடித்திருக்கிறோம் என்றால் அதில் ரிச்சர்டுக்கு பெரிய பங்கு இருக்கு. ஃபாஸ்ட் ஒர்க்கர். எங்களுக்குள் எந்த குழப்பமும் இருக்காது. பெரிய இயக்குநர்களிடம் வேலை பார்த்திருந்தாலும் ஈகோ பார்க்காமல் வேலை செய்வார்.

நான் ‘‘இந்த பேக்ரவுண்ட் கொஞ்சம் சரியில்லையே, மாத்திக்கலாமா’’ என்றால் ‘‘ஓ.கே’’ சொல்லிவிடுவார்.அதேபோல் நான் ஏதாவது சொல்லும்போது என்னிடம் சஜஷன் சொல்வார். நானும் அதை கேட்டுக்கொள்வேன். எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு வந்ததே கிடையாது.

யூனிட்ல இருந்தவங்களே ஆச்சர்யப்பட்டு இவ்வளவு ‘சிங்க்’ல இருக்கிறீங்களே என்றார்கள். அதுக்குக் காரணம் எங்கள் புரிதல்தான். பாடல்கள் பாலிவுட் ஸ்டைலில் பண்ணியிருக்கிறார்.  ‘ஆளப்போறான் தமிழன்’ போன்ற புரட்சிகரமான பாடல்கள் எழுதியுள்ள விவேக் பாடல்களை எழுதியுள்ளார். சாம் ஒரு பாடல் எழுதியுள்ளார். ‘தீராத விளையாட்டு பிள்ளை’க்குப் பிறகு எடிட்டர் சுரேஷ் இணைந்துள்ளார்.

தனஞ்செயன் சார் கார்ப்பரேட் தயாரிப்பாளர். என்ன வேண்டும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். அதையும் மீறி சில விஷயங்கள் கேட்கும்போது கொஞ்சம் சங்கடப்படுவார். ஆனால் செய்து கொடுப்பார்.

அவருடைய அப்ரோச் அனைத்திலும் கார்ப்பரேட் ஸ்டைல் இருக்கும். ஆரம்பத்தில் எனக்கு அது கொஞ்சம் புதிராக இருந்தது. எல்லா நடைமுறையும் இப்படித்தான் இருக்குமா என்று யோசித்தேன். ஆனால் அந்த சிஸ்டம் இருந்ததால் தான் படப்பிடிப்பை விரைவாக முடிக்க முடிந்தது.

முதல் தேதி அன்று உதவி இயக்குநர்களின் கணக்கில் சம்பளம் சேர்ந்துவிடும்.  நடிகர்களுக்கு அக்ரிமென்ட்டில் இருக்கிறபடி பாக்கி வைக்காமல் சம்பளம் செட்டில் பண்ணினார். அவருடைய ஸ்டைல் பிடித்திருப்பதால் அவருடன் சேர்ந்து அடுத்த படமும் பண்ண வேண்டும் என்று ஆசை வந்திருக்கு.”

- சுரேஷ்ராஜா