மாமியாருக்கு செய்த சத்தியத்துக்காக கணவரை நடிகராக்கிக் காட்டிய மனைவி!



“பொது  வாக கணவன் சினிமாவில் நடித்தால் அதை மனைவி அவ்வளவாக ரசிப்பதில்லை. நடிக்கவேண்டாம் என சொல்பவர்களுக்கு மத்தியில் எனக்காக ‘தொட்ரா’ படத்தை தயாரித்துள்ளார் என் மனைவி சந்திரா சரவணக்குமார். நடிகனாக வேண்டும் என்பது என்னுடைய இளமைக் காலத்து ஆசை. பல நாள் ஆசை என் மனைவி மூலம் இப்போது நிறைவேறியுள்ளது’’ என்று மனைவிக்கு மரியாதை கொடுத்து பேச ஆரம்பித்தார் புதுமுக நடிகர் எம்.எஸ்.குமார். அவரிடம் பேசினோம்.

“சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?”

“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம். என் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகில் அறிமுகம் இல்லாதவராக இருந்தார். அதனால் இறக்கும் தருவாயில் தன் மருமகளை அழைத்து தன் மகனுக்காக படம் எடுக்கவேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்துபோனார். என் மனைவி மாமியார் மெச்சும் மருமகளாக அந்த கனவுகளுக்கும், சத்தியத்திற்கும் ‘தொட்ரா’ படத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.”

 “முதன் முதலாக கேமரா முன் நின்ற அனுபவம் எப்படி இருந்தது?”

“நான் பழனியில் இருந்தபோது அங்கே உள்ளூர் சேனலில் தொகுப்பாளராகப் பணியாற்றியதால் இந்தப் படத்திற்காக கேமரா முன் நின்றபோது பெரிதாக பயம் ஏற்படவில்லை. அதுமட்டுமில்ல, என்னுடன் நடித்த ஹீரோ ஹீரோயின் அனைவரும் இளைஞர்கள் என்பதால் எங்களுக்குள் சகஜமாக சிரித்துப் பேசி நடிக்க முடிந்தது.”

“படத்தைப் பற்றி சொல்லுங்களேன்?”

“இந்தப் படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்துல வீணாவின் அண்ணனாக நான் வர்றேன். படத்தின் மொத்த சுமையும் என் தோள் மீதுதான் இருக்கும்.

இயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக் கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்.  இந்தப் படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகள் தவிர அனைத்து காட்சிகளுமே மிக இயல்பாக இருக்கும்.

காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.   எனக்கும் ஹீரோ பிருத்விக்குமிடையே நடக்கும் சண்டைக்காட்சி பேசப்படும் விதத்தில் இருக்கும். நிஜ வாழ்க்கையில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் அதில் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளோம்.

எனக்கு ஜோடியாக ‘மைனா’ சூசன் நடித்துள்ளார். அவர் முன்னாடி நானும் நடிக்கிறேன் என்று போட்டியெல்லாம் போடமுடியாது. கண்களாலேயே மிரட்டக்கூடியவர். படம் பார்க்கும்போது எங்கள் நடிப்பை நிச்சயம் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள்.  தயாரிப்பாளர் நடித்தாலே, என்னத்த பண்ணப்போறாங்க; பணம் போட்டுட்டாங்கன்றதுக்காக நடிக்கத் தெரியாதவனெல்லாம் நடிக்க வந்து நம்மளை சாகடிப்பாங்க. நாம பார்த்துத் தொலையணும் என்ற எண்ணம் பொதுவா மக்கள் மனதில் இருக்கு. ஆனால் நான் உங்களை அப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மாட்டேன். கியாரண்டி கொடுக்கிறேன்.   

படத்தில் சிம்பு ‘பக்கு பக்குன்னு’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். ஹீரோ பிருத்வி மூலமாக இந்தப் பாடலை பாடமுடியுமா என சிம்புவிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் தயங்காமல் மூன்று மணி நேரத்தில் பாடிக்கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்திவிட்டார். இந்தப் படத்துக்காக எங்கள் டீம் நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளோம். கஷ்டப்பட்டதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். வெகு ஜனங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.”

“கதாநாயகி வீணாவை இயக்குநர் அடித்தார் என்று சொல்லப்படுகிறதே?”

“நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கு. படம் பேசும் விஷயம் ரொம்பவும் சீரியஸான மேட்டர். அதில் கதாநாயகியின் பாத்திரம் ரொம்ப முக்கியமானது. சீரியசான காட்சிகளில் அவரது பங்களிப்பு மிக மிக அவசியம். கேரள நாயகி என்பதால் அர்த்தம் புரிந்து உச்சரிப்பதில், எமோஷன் காண்பிப்பதில் வீணா லேசாகத் திணறினார். அந்த ஒரு காட்சிக்கான ரியாக்‌ஷன்தான் அது. ஆனால் படம் முழுக்க அழகான நடிகையாக வருவார். முதல் படத்தை பாடம் என்பார்கள். போகப் போக பழகிக்கொள்வார்.

அவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும். பந்தா இல்லாத இயல்பான கதாநாயகி. இயக்குநரும் அப்படி செய்யக்கூடியவர் அல்ல.  நேரம் விரயமானதால்  ஏற்பட்ட கோபத்தில்தான்  இயக்குநர் கோபப்பட்டார். எல்லோருமே இது அவரவர் படமாக நினைத்து உழைத்தனர். நாயகியும் அதன்பின்  நிலைமையை  உணர்ந்து  தன்னை மாற்றிக் கொண்டார்.”

“உங்கள் மனைவி என்ன சொல்கிறார்?”

“என் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார். என்னுடைய ஆசைக்காகவும் அத்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காகவும் தான் அனுபவம் இல்லாத இந்தத் துறையில் இறங்கினார். அதேசமயம் தன்னுடைய மற்ற தொழில்களில் தன்னிடம் பணிபுரிபவர்களை எப்படி ஆளுமையுடன் வேலைவாங்கி திறம்பட நடத்தி வருகிறாரோ, அதேபோல சினிமாவையும் எளிதாகக் கையாண்டுள்ளார்.

கலப்புத் திருமணம் செய்தவர்கள் நாங்கள். சினிமாவா? ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி. நான் மட்டுமல்ல, என்னுடைய மகள் அபூர்வா சஹானாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.”

“சினிமாவில் உங்கள் இலக்கு?”

“நாமதானே பணம் போடுறோம்? முதல் படத்திலேயே ஹீரோவாக  நடித்தால் என்ன? என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்தத் தவறை செய்யத் தயாராக இல்லை.  எனக்கு நடிக்க வரும் என்பதை மக்களுக்கு அல்ல, இந்தத் திரையுலகிற்கு முதலில் சொல்லவேண்டும். படிப்படியாக திரையுலகின் மூலம் மக்கள் மத்தியில் என்னை பதிய வைக்கவேண்டும். ஒரு நல்ல நடிகனாக பெரிய இயக்குநர்களின் படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.”

​- சுரேஷ்ராஜா