‘நோட்டா’வாகிறது நாவல்!



நடுராத்திரியில் டைட்டில் அறிவிப்பதுதான் கோலிவுட்டின் புது டிரெண்ட். டைட்டில் இல்லாமலேயே படத்தை ஆரம்பித்தாலும் இப்போது நச்சென்று ஒரு டைட்டில் பிடித்து அசத்துகிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர். யெஸ். ‘அரிமா நம்பி’, ‘இரு முகன்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ‘நோட்டா’வை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஹீரோ விஜய் தேவரகொண்டா, தெலுங்கில் பிரபலம். ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ படங்களில் நடித்தவர் இப்போது தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாரிக்கப்படும் ‘நோட்டா’வுக்காக உடம்பை முறுக்கேற்றி நடித்துக் கொண்டிருக்கிறார்.

 ‘ஸ்டூடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இளம் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி எழுதி, வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வெட்டாட்டம்’ என்கிற அரசியல் நாவல்தான் படத்தின் கதை என்று பேசிக்கொள்கிறார்கள்.

ஹீரோயின் மெஹ்ரீன். நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் என்று நட்சத்திரப் பட்டாளமும் உண்டு. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் வாரிசு சாந்தா ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு. இசை சாம் சி எஸ்.

- எஸ்