அக்கட தேசத்தை ஆளுகிறேன்! டிஎஸ்பி சொல்கிறார்



உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இசைக் கலைஞர்களுக்கு நோட்ஸ் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

“உங்க முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுதே?”

“தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினார்கள்.. இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அப்போது நான் மேடையி லிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்தபோது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமரவைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இதுவரை கிடைக்காத சந்தோஷம்.

அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. தியானம் பண்ணினால் கிடைக்கும் பரவசத்தை அப்போது அடைந்தேன். இந்த இரண்டு ஜாம்பவான்களின் பாராட்டும் ஒருசேர கிடைத்தது வாழ்க்கையில் மறக்கமுடியாத விஷயமாகிவிட்டது.”

“உங்களை இப்போ தமிழில் அதிகம் பார்க்கமுடியலையே?”

“அக்கட தேசத்தைவிட்டு கொஞ்சமும் நகரமுடியாதளவுக்கு படங்களில் பிஸி. கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’, ‘நேனு லோக்கல்’, ‘ராரண்டோய் வேடுக சூதம்’, ‘துவ்வாட ஜெகந்நாதம்’, ‘ஜெய ஜானகி நாயகா’, ‘ஜெய் லவகுசா’, ‘உந்நாதி ஒகட்ட ஜிந்தகி’, ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ என எட்டு படங்களுக்கு இசையமைத்தேன். இந்தப் படங்களின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ‘ஒரே ஆண்டில் எட்டு படங்களுக்கு இசையமைத்து எட்டு படங்களின் பாடல்களையும் ஹிட்டாக்கிய ஒரே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் என்று தெலுங்கு ஊடகங்கள் பாராட்டு தெரிவித்தன.

அதேபோல் ஒரு படத்தில் இடம்பெற்ற பாடல்களை, பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியை தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ மூலம் தொடங்கிவைத்தேன்.

அந்த ஸ்டைல் அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. லிரிக் வீடியோஸில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் புகைப்படத்தையும், கான்செப்ட்டையும், கிராபிக்ஸையும் இணைத்து முதன்முறையாக நான்தான் அறிமுகப்படுத்தினேன். அந்த ஸ்டைலுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.”

“அடுத்து?”

“இப்போது விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறேன். ஹரி சார் படங்களில் திரைக்கதை மின்னல் வேகத்தில் இருக்கும். அதற்கு ஈடுகொடுக்குமளவுக்கு பாடல்கள் அனைத்தும் மெர்சலா வந்திருக்கின்றன. படப்பிடிப்பு தளத்தில் படத்தின் பாடலை கேட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த ஆண்டிற்கான ஹிட் ஆல்பம் என்றார்கள். இதுதவிர வழக்கம் போல் தெலுங்கில் நாலைந்து படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.”

- சுரேஷ்ராஜா