தெலுங்கு சினிமாவின் நிரந்தரப் பெருமை!



1955ல் மொகல்தூரு என்று ஆந்திர வரைபடத்தில் கூட இடம் பிடிக்கமுடியாத அந்தஸ்தில் இருக்கும் சிறு கிராமத்தில் பிறந்தவர் சிரஞ்சீவி. அவருடைய இயற்பெயர் சிவசங்கர வரபிரசாத்.

அப்பா, அரசுப்பணியில் இருந்தார்.பள்ளிப் பருவத்திலிருந்தே இவருக்கு ‘சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்’ ஆக இருக்க விருப்பம். நாலு பேருக்கு மத்தியில் தான் ‘பளிச்’சென்று தெரியவேண்டும், தன்னைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகவே எங்கு பாட்டுச் சப்தம் கேட்டாலும் டான்ஸ் ஆட ஆரம்பித்தார்.

அப்போது வெளிவந்திருந்த ‘கேரவன்’ இந்திப்படத்தில் ஹெலன் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்த ‘Piya tu ab to Aaja’ பாடல் மிகவும் பிரபலம். ஹெலன்தான் சிரஞ்சீவிக்கு டான்ஸ் குரு. இந்தப் பாடல் ரேடியோவில் எங்கு ஒலிபரப்பானாலும், அந்த இடத்தில் அப்படியே ஆட ஆரம்பித்து விடுவாராம். பிற்பாடு படங்களில் சிரஞ்சீவியின் நடனம் சிறப்பாக இருக்கிறது என்று யாராவது பாராட்டினால், சிரித்துக்கொண்டே ‘ஹெலனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்பார். முறைப்படி அவர் நடனம் கற்றுக்கொண்டதில்லை.

‘நடனம் ஆடத் தெரிகிறது, நடிப்பை கற்றுக் கொண்டால் சினிமாவுக்கு போய்விடலாம்’ என்று நண்பர்கள் சொல்லவே, சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து சேர்ந்தார். படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே தெலுங்குப் படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தன.
அவர் நடித்த முதல் படத்தின் பிரிவ்யூ காட்சியை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பார்த்தார்.

“இந்தப் பையனோட கண்ணு ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு” என்பதுதான் பாலசந்தர், சிரஞ்சீவி பற்றி அடித்த முதல் கமெண்ட். ‘அவர்கள்’ படத்தை தெலுங்கில் ‘இதி கதை காது’ என்று பாலசந்தர் எடுத்தபோது, தமிழில் ரஜினி செய்திருந்த வேடத்தை சிரஞ்சீவிக்குக் கொடுத்தார்.

சிறிய கதாபாத்திரங்களும், வில்லன் வேடங்களுமே சிரஞ்சீவிக்கு தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருந்தன. பாலசந்தர் இயக்கிய ‘47 Rojulu’ (தமிழில் ‘47 நாட்கள்’ என்று ரிலீஸ் ஆனது) சிரஞ்சீவியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது. இந்தப் படத்தில் அவர் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார்.

தமிழிலும் ‘காளி’, ‘ராணுவவீரன்’ போன்ற ரஜினி படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்தார். தன்னுடைய ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஜூனியர் என்பதால், இவரை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பயன்படுத்துவதை ரஜினி விரும்பினார்.

செகண்ட் ஹீரோ, வில்லன் என்று நடித்துக்கொண்டிருந்தாலும் சிரஞ்சீவியின் ஆக்ரோஷமான நடிப்பு, தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இவர் இளைஞராக இருந்தார் என்பது அவர்களுக்கு ஆகப் பெரிய ஆறுதலாக அமைந்தது. ஏனெனில், எண்பதுகளின் தொடக்கத்தில் ஐம்பதைத் தாண்டிய தெலுங்கு ஹீரோக்களே அளவுக்கதிகமான மேக்கப்பில் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். இளமையான செழுமையான ஹீரோயின்களோடு கலர் கலராக அவர்கள் டூயட் பாட, படம் பார்க்கும் ரசிகர்கள் ஆற்றாமையால் மாய்ந்து போனார்கள். இந்தக் கொடுமையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆபத்பாந்தவனாக சிரஞ்சீவி தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

1983ஆம் ஆண்டு ‘கைதி’ என்கிற படம் சூப்பர்ஹிட் ஆகி சிரஞ்சீவியை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது. இத்தனைக்கும் அரதப்பழசான பண்ணையாரை எதிர்க்கும் கிராமத்து இளைஞன் கதைதான். ஆக்‌ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ், டான்ஸ் என்று அத்தனை ஏரியாக்களிலும் சிரஞ்சீவி பட்டையைக் கிளப்ப, தெலுங்கின் மாஸ்டர்பீஸ் படங்களின் பட்டியலில் இணைந்தது ‘கைதி’.

சினிமா குடும்பங்களின் ஆதிக்கம் மிகுந்த தெலுங்கு சினிமாவை, எவ்வித சினிமாப் பின்னணியுமில்லாத எளிய குடும்பத்தில் பிறந்த சிரஞ்சீவி கைப்பற்றி செய்த சாதனைகள் யாரும் நம்ப முடியாதவை. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வெளியுலகத்தைக் காட்டியவர் இவர்தான். ‘டபுக்கு டபான் டான்ஸு’ என்று தெலுங்குப்பட நடனக் காட்சிகள் கிண்டலடிக்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றிக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

பழைய பண்ணையார் கதைகளை அழித்தொழித்து, ஃப்ரெஷ்ஷான கதைக்களன்களை அறிமுகப்படுத்தினார். ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை, விதவிதமான லொக்கேஷன்களுக்கு அழைத்துச் சென்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தார். வில்லன் மூன்று அடிகள் அடித்தபிறகு, ஹீரோவுக்கு மூக்கில் ரத்தம் வந்தபின்புதான் திருப்பி அடிக்க வேண்டும் என்கிற ஆதிகாலத்து ஸ்டண்ட் கந்தாயங்களை கடாசி எறிந்து, ஆக்‌ஷன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று ஸ்க்ரீனில் ரணகளமாக்கிக் காட்டினார். இதற்காக சிரஞ்சீவி கமர்ஷியல்  ஏரியாவில் மட்டுமேதான் கான்சன்ட்ரேட் செய்தார் என்று முடிவெடுத்து  விடாதீர்கள். ஆந்திர அரசின் நந்தி விருதுகள், மத்திய அரசின் தேசிய  விருதுகளையும் அவரது படங்கள் குவிக்கத் தவறவில்லை.

‘கைதி’யில் அவருக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்துக்குப் பிறகு, திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தார். அடுத்த இருபது ஆண்டுகள், மெகா ஸ்டாரின் ஆட்சிதான் ஆந்திராவில். அவரது படங்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அடக்கமாக இருப்பார். தோல்வி அடையும் போதெல்லாம் வீறுகொண்டு எழுவார்.

சிரஞ்சீவியின் ‘கரண மொகுடு’ (தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தின் ரீமேக்) தெலுங்கு சினிமாவின் முதல் பத்து கோடி ரூபாய் வசூல் திரைப்படமாக அமைந்தது.சிரஞ்சீவியின் சாதனைகளுக்கு எல்லாம் சிகரமாக அமைந்தது 1992-ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் ‘ஆபத் பாண்டவடு’ படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம். ஒண்ணேகால் கோடி. இந்தியாவிலேயே, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை எட்டிய முதல் நடிகர் சிரஞ்சீவிதான். அப்போது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனே எழுபத்தைந்து லட்சமோ என்னவோதான் வாங்கிக் கொண்டிருந்தார். அவ்வகையில் இன்று கோடிகளைக் குவிக்கும் எல்லா மொழி ஹீரோக்களுமே சிரஞ்சீவிக்குத்தான் நன்றிக்கடன் பட்டவர்கள்.

தொண்ணூறுகளின் மத்தியில் தெலுங்கு சினிமாவில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டது. புதிய இயக்குநர்கள், இளம் நடிகர்கள் வரவு அதிகமாக இருந்த அந்த காலகட்டத்தில் சிரஞ்சீவி ஃபார்முலா படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தன்னுடைய வழக்கமான ஃபைட்டர் தன்மையை வெளிப்படுத்தி ‘ஹிட்லர்’ (1997) மூலமாக மீண்டும் மெகாஸ்டார் இமேஜை தக்கவைத்தார்.

சிரஞ்சிவீயின் ‘இந்திரா’ (2002), தெலுங்கு சினிமாவின் முதல் முப்பது கோடி வசூல் படமாக அமைந்தது. நம்மூர் ‘ரமணா’வை ‘டாகூர்’ என்று ரீமேக் செய்து, பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு எடுத்துக் காட்டினார். இரண்டாயிரங்களின் மத்தியில் சில சறுக்கல்கள், சில சாதனைகள் என்று கலந்துகட்டி அவரது கேரியர் அமைந்தாலும், ‘மெகா ஸ்டார்’ இமேஜ் உச்சத்தில் இருந்தபோதே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.

பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மெகாஸ்டாரை முழுநீள ஹீரோவாக ‘கைதி நெம்பர் 150’ படத்தில் கடந்த 2017 பொங்கலுக்கு தரிசித்தார்கள் அவரது ரசிகர்கள். நம்ம விஜய் நடித்த ‘கத்தி’யின் தெலுங்கு ரீமேக்தான் அது. உடனடியாக தன்னுடைய கனவு வேடமான  சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியாக ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

நயன்தாரா, சன்னிலியோன், ஜெகபதிபாபு, ‘நான் ஈ’ சுதீப், விஜய சேதுபதி என்று இந்தப் படத்தில் அவரோடு செமத்தியான நட்சத்திரப் பட்டாளம். பட்ஜெட், சுமார் 150 கோடியாம். ‘பாகுபலி’க்குப் பிறகு உலக அரங்கில் தெலுங்கு சினிமாவின் பெருமையைப் பறைசாற்றும் படமாக இது அமையும் என்று சொல்கிறார்கள்.

யுவகிருஷ்ணா