நயன்தாராவோடு நடிக்க ஆசை!



கமல்ஹாசனின் மாவட்டமான ராமநாதபுரத்திலிருந்து சினிமாவுக்கு வந்திருப்பவர்கள் மிகவும் குறைவு. லேட்டஸ்ட்டாக வந்திருப்பவர் துறைமுகம் பயாஸ்.‘‘பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி. நான் குழந்தையாக இருக்கும்போதே எங்கள் குடும்பம்  சென்னைக்கு ஷிப்ட்டாகிவிட்டது.

படிப்புல நான் கில்லி. ப்ளஸ் டூ முடித்ததும் பி.பி.ஏ., எம்..பி.ஏ என்று அடுத்தடுத்து பட்டங்களை வாங்கிக் குவித்தேன். சினிமாவில் நடிக்கணும் என்று ஆசை இருந்தாலும் அப்பா அம்மா நான் டிகிரி வாங்கணும் என்று விருப்பப்பட்டார்கள்.

படிப்பு முடிந்ததும் என்னுடைய உறவினரின் ஏற்றுமதி நிறுவனத்தோட நிர்வாகத்தை பார்த்துக்கொண்டேன். அதிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினேன். அப்போது என்னுடைய மாமா ‘ராயல் மூன் என்டர்டெயின்மென்ட்’ ஹபீப் ‘சேதுபூமி’ என்ற படத்தைத் தயாரித்தார். என்னுடைய முயற்சியில் ‘சேதுபூமி’ படத்துக்கு தியேட்டர் ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்தேன்.

அப்போதான் எனக்கு நடிகன் ஆகணும்னு ஆசை வந்தது. ‘சேதுபூமி’யில் சின்ன வேடம் கிடைத்தது. என்னுடைய நடிப்புல திருப்தியான இயக்குநர் கேந்திரன் முனியசாமி ‘‘என்னுடைய அடுத்த படத்தில் நடிக்கிறீங்களா’’னு கேட்டார்.

சினிமாவில் நடிப்பதை தவமாகப் பார்க்கும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வேறு என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? கேந்திரன் முனியசாமி இயக்கும் அடுத்த படத்துல ஹீரோவுக்கு அடுத்து வரும் முக்கியமான கேரக்டர் பண்றேன். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் அது.

சினிமாவில் எனக்கு ரோல் மாடல்னா அஜித் சாரைத்தான் சொல்வேன். எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் ஜெயித்திருக்கிறார். அவருடைய வெற்றி எனக்கு இன்ஸ்பிரேஷன். அடுத்து அவருடைய உதவும் குணம். அதுவும் எனக்கு பிடிக்கும். அஜித் அண்ணனின் படத்தில் ஒரு காட்சியாவது நடிக்கணும்.

ஹீரோ, வில்லன் என்றில்லாமல் எந்தவித கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். ‘தனி ஒருவன்’ படத்துல அரவிந்தசாமி வந்த மாதிரி ஸ்டைலீஷ் வில்லனா பண்ண ஆசை இருக்கு. எனக்கு வரும் வாய்ப்புகளைத் தட்டிக்கழிக்காமல் என் திறமையை வெளிப்படுத்தி என்னை நிரூபித்துக் காட்டுவேன். சினிமாவை வெளியே இருந்து பார்ப்பதற்கும் உள்ளே இருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

இன்னிக்கு ஒரு படம் தியேட்டர்ல ஓடும்போதே ஃபேஸ்புக், டிவிட்டர்ல கமெண்ட் போடுகிறார்கள். என்னுடைய சின்ன அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் கமெண்ட் போடுவது ஈஸி. ஆனால் ஒரு சினிமாவுக்கான உழைப்பு அதிகம்’’ என்று சொல்லும் துறைமுகம் பயாஸுக்கு நயன்தாராவை ரொம்பவும் பிடிக்குமாம். அவருடன் நடிக்கணும் என்பது நீண்டநாள் கனவாம்.

- எஸ்