அழகிகளுடன் அருவியில் உல்லாசக் குளியல் நடத்திய மன்சூர் அலிகான் மகன்!



பிரபு நடித்த ‘வேலை கிடைச்சிடுச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு மன்சூர் அலிகானுக்கு ஏறுமுகம்தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வில்லனாக கொடிகட்டிப் பறந்தார். தற்போது எல்லா மொழிகளிலும் சேர்த்து 250 படங்களுக்கு மேல் நடித்ததுள்ளார். நடிப்பது மட்டும் இல்லாமல் ஏராளமான படங்களைத் தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.

இப்போது தன் மகனுக்காக மீண்டும் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘கடமான் பாறை’. படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த மன்சூரலிகானிடம் லஞ்ச் ப்ரேக்கில் பேசினோம்.“அதென்ன ‘கடமான் பாறை’ன்னு இலக்கியத்தனமா டைட்டில்?”

“இந்த டைட்டிலுக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கு. பதினெட்டு வருடமாக என் மனசுல பூட்டி வைத்த நிஜ சம்பவம் இது. முதன் முறையாக ‘வண்ணத்திரை’க்காக தான் மனம் திறந்து சொல்கிறேன். அது நாட்டுல நடந்த சம்பவம்தான். அந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. மனதுக்குள் பூட்டி வைத்த அந்த சம்பவத்தை படமாக்க இப்போதுதான் வாய்ப்பு அமைந்தது.

காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம். இதுதான் படத்தின் மையக்கதை. பொண்ணுங்க கிட்ட இருக்கிற ஒண்ணு அவங்கள விட மத்தவங்களுக்குத் தான் அதிகமாகப் பயன்படும் என்பதுதான்  படத்தோட ஒன் லைனர். காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்னைகளை பக்கா கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.”

“அலிகான் துக்ளக் உங்கள் மகன் என்பதால்தான் ஹீரோவாக இந்தக் கதைக்குத் தேர்வு செய்தீர்களா?”

“அப்படி சொல்ல முடியாது. என் மகன் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சினிமாஅவனுக்கு புதிதில்லை. சின்ன வயதிலிருந்து அவன் மீது சினிமா காற்று வீசியிருக்கிறது. எங்களுடைய ராஜ் கென்னடி பிலிம்ஸ் தயாரித்த படங்களில் அலிகான் துக்ளக்கின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

தயாரிப்பாளரின் மகன் என்றில்லாமல் படப்பிடிப்புக்கான முழு நிர்வாகத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அத்துடன் நடிப்பு, டான்ஸ், சண்டைப் பயிற்சி என்று ஒரு நடிகனுக்குரிய திறமைகளையும் முன்னணி கலைஞர்களிடம் கற்றுக் கொண்டார்.

வீட்லேயே ஹீரோ இருந்ததால் வெளியே தேடவில்லை. என் பையன் என்பதற்காக சொல்லவில்லை. சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்கிறார். மற்றவர்கள் நடிக்கும்போது என்னால் ஓரளவுக்குத்தான் சுதந்திரமாக வேலை வாங்க முடியும். என் மகனே ஹீரோ என்பதால் நினைத்ததை எடுக்க முடிந்தது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை என் மகன் ஹீரோ என்பதை கதைதான் முடிவு பண்ணியது. என்னுடைய செல்வாக்கில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்திருக்க முடியும். கதை எழுதி முடித்ததும் என்னுடைய பையனே பொருத்தமாக இருந்தார். அலிகான் துக்ளக் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறேன்.

இந்தப் படத்துக்காக ஆந்திராவில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடத்தினோம். வனவிலங்குகள், சீதோஷண நிலை என்று கடும் சவால் நிறைந்த அந்தக் காடுகளில் நாங்கள் தான் முதன் முறையாக படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படத்துக்காக எத்தனை சிரமங்கள், பூச்சிக் கடி, கல்லடி வேதனையை அனுபவித்திருப்பார் என்பதற்குக் கணக்கே இல்லை. அத்தனை வலிக்கும் மருந்தாக இந்த ‘கடமான் பாறை’ இருக்கும்.”

“ஹீரோயின்?”

“பொதுவா புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு ஹீரோயின் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு அந்த சிரமம் இல்லாமல் இருந்தது. எனக்காக ஒரு பெரிய இயக்குநர் ஹீரோயினைத் தேர்வு செய்து கொடுத்தார். நாயகிகளாக நடிக்கும் அனுராகவி, ஜெனி பெர்னாண்டஸ் இருவருமே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் சினிமாவைப் பற்றிய புரிதல் இருந்தது. கிளாமர், பெர்ஃபாமன்ஸ்னு கலக்கியிருக்காங்க.

அதுமட்டுமில்ல, இரண்டு பேருக்குமே தமிழ் தெரியும் என்பதால் ஈஸியாக வேலை வாங்க முடிந்தது. ஹோட்டலில் இருந்து செட்டுக்கு வரும் போதே டயலாக்கை மனப்பாடமாக வைத்திருப்பார்கள். இவர்களோடு நானும் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கிறேன். சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற மிருகங்கள் மனிதனாக மாறினால் எப்படியிருக்குமோ அதுபோல் என்னுடைய கேரக்டர் இருக்கும்.”

“உங்கள் மகன் நாயகிகளுடன் உல்லாசக் குளியல் போடும் காட்சிகளை எடுக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?”

“அப்பா, மகன் என்ற உறவு வீட்டோடு முடிந்துவிடும். படப்பிடிப்புத் தளத்தில் நடிகர், இயக்குநர் என்ற முறையில்தான் எங்கள் அணுகுமுறை இருக்கும். அருவியில் குளிக்கும் காட்சியை நாலைந்து நாள் படமாக்கியிருப்போம்.

 குளிர் காலத்தில் அருவி நீரில் குளிக்கும்போது உடம்பெல்லாம் நடுங்கும். அந்தக் காட்சியை மிக அற்புதமாக எடுக்க எனது டீம்தான் காரணம். நாங்கள் ப்ளான் பண்ணியதை விட வேகமாக படப்பிடிப்பு நடக்கிறது.”

“பாடல்கள் எப்படி வநதிருக்கு?”

“இசை ரவிவர்மா. ஏற்கனவே சில படங்களுக்கு ஒர்க் பண்ணியிருக்கிறார். வளர்ந்து வரும் இசையமைப்பாளர் என்பதால் சுலபமாக அவரிடம் வேலை வாங்க முடிந்தது. ஃப்ரெஷ்ஷா சாங்ஸ் கொடுத்திருக்கிறார்.

படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். ரவிவர்மா, சொற்கோவுடன் இணைந்து நானும் பாடல் எழுதியுள்ளேன்.  ‘அழகே நீ நடந்து வந்தால் உலகம் திரும்பிப் பார்க்கும்’ என்ற பாடலை நானே பாடியிருக்கிறேன். பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் மகேஷ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். இந்தப் படம் ஒட்டு மொத்த டீமுக்கும் மாஸ்டர்பீஸாக இருக்கும்.”

- சுரேஷ்ராஜா