வீரையன்



தஞ்சை வாழ்க்கை!

ஏழைத்தொழிலாளியான ஆடுகளம் நரேன், தன் மகனை பெரிய படிப்பாளியாக மாற்றிக்காட்டுகிறேன் என்று சபதம் போடுகிறார். அந்த சபதத்துக்கு குறுக்கே சாபமாக வந்து நிற்கிறார் அரசியல்வாதி வேல ராமமூர்த்தி. இவர்களின் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ தலையிடுகிறார் இனிகோ பிரபாகர். அது என்ன பிரச்சனை, நரேன் சபதத்தில் ஜெயித்தாரா, இனிகோவால் பிரச்சனையிலிருந்து வெளியே வர முடிந்ததா ஆகிய கேள்விகளுக்கு விடைதான் ‘வீரையன்’.

வழக்கம் போல் இனிகோ பிரபாகர் இயல்பாக நடித்து ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்குகிறார். நாயகி ஷைனி கச்சிதம்.  இனிகோவின் கூட்டாளிகளாக வரும் கயல் வின்சென்ட், பிரீத்திஷா இருவரும் மீட்டருக்கு மேல் நடித்து தங்கள் இருப்பை காண்பித்துக் கொள்கிறார்கள். ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

அருணகிரியின் இசையில் பாடல்கள் சோக ராகமாக இருந்தாலும் சுகமான ராகங்கள். சமூகத்தின் புறக்கணிப்பால் படிப்பு தடைப்பட்ட ஒரு மாணவன் சில நல்ல உள்ளங்களின் உதவியால் எப்படி படிப்பை முடித்தார் என்பதை யதார்த்தமான காட்சிகளால் உணர்த்தியதற்காக இயக்குநர் பரீத்தை பாராட்டலாம்.