இன்னொரு அஜித் நடிக்க வருகிறார்!



ஒருகாலத்தில் சினிமா வாய்ப்பு தேடுபவர்கள் ஸ்டில் போட்டோகிராபர்களிடம் போட்டோ எடுத்து, போர்ட்போலியோ ஆல்பம் தயார் செய்து எடுத்துக்கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குவார்கள்.

டிஜிட்டல் இந்தியாவில் எல்லாமே டிஜிட்டல் மயம்தான். அந்த வகையில் இப்போது யூட்யூப்பில் ஹிட் ஆகும் குறும்படங்கள்தான் ஹீரோ, ஹீரோயினை சப்ளை செய்துவருகிறது.  விஜய சேதுபதி போன்றவர்கள் குறும்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். விஜய சேதுபதி வழியில் கோடம்பாக்கத்தில் கால்பதிக்கிறார் அஜித் கெளரவ்.

ஹீரோவுக்கான மிடுக்குடன் இருக்கும் அஜித் கெளரவ்விடம் பேசினோம். ‘‘நான் படிச்சது பி.இ. சிவில் இன்ஜினியரிங். நடிப்பில் ஆர்வம் வந்ததால் அப்பாவிடம் அனுமதி கேட்டேன். கையில் ஒரு டிகிரியை வைத்துக்கொண்டு நடிக்கப் போ என்று க்ரீன் சிக்னல் காட்டினார்.

நடிக்க முடிவு செய்தவுடன் முறைப்படி நடிப்பு கற்றுக்கொள்ள நினைத்தேன். கத்துக்குட்டி கலைக்கூடம் பயிற்சிப் பட்டறையில் சேர்ந்து நடிப்பு கத்துக்கிட்டேன். பிரபல டான்ஸ் மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டேன்.

இப்போது கோபக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படமே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்தது. படத்தின் பெயர் ‘கமலோகா’ அதாவது வான்வெளிக்கும்  பூமிக்கும் இடையே உள்ள கற்பனை உலகம்தான் அது. இதில் மெயின் லீட் பண்ணுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. மனதில் பதியும் கதாபாத்திரம் கிடைத்தாலே போதும். அதன்  மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி ஹீரோ அந்தஸ்தை அடையலாம். அப்படி கிடைக்கும் இடம்தான் நீடிக்கும்.

இயக்குனர் பாலா படத்தில் நடிக்க ஆசை. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் உழைப்பால் உயர்ந்த அஜித் என்னுடைய இன்ஸ்பிரேஷன். ஹீரோயின்களில் தன்ஷிகா, ஸ்ரீதிவ்யாவுடன் டூயட் பாட ஆசை. விஜய சேதுபதி போல எல்லா வேடத்திலும் நடிப்பேன்’’ என்கிறார் அஜித் கெளரவ்.

 - எஸ்