சுவையான பாடலாசிரியர்!



ஓட்டல் பிசினஸோடு பாட்டெழுதும் பிசினஸையும் சேர்த்து கவனிப்பவர் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான். சினிமா பிரபலங்களுக்கு பெர்சனலாக அவர்களுக்கு பிடித்த டிஷ் செய்து கொடுப்பது கவிஞர் கிச்சனின் ஸ்பெஷல்.

அந்த வகையில் ஆம்பூர் சிக்ஸ்டிபைவ் பிரியாணி, ஈரோடு கலக்கி, திண்டுக்கல் வீச்சி, கும்பகோணம் சூப், திருநெல்வேலி அல்வா குருமா என்று இவருடைய ஓட்டல் மெனுக்களின் பெயர்கள் அசத்தலாக இருக்கும். அதை கேள்விப்பட்ட ‘சர்வர் சுந்தரம்’ படக்குழு கவிஞர் கிச்சனின் மெனு கார்டில் உள்ள அயிட்டங்களை வைத்து ஒரு பாடலை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள். உற்சாகத்தில் இருந்த ஜெயங்கொண்டானிடம் பேசினோம்.

‘‘என்னுடைய ஓட்டல் மெனு சந்தானம் சார் படத்தில் பாடலாக வருவது சந்தோஷம். இப்போது தஷி இசை அமைக்கும் இரண்டு படங்களில் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். விவசாயத்தைப் போற்றும் விதத்தில் உருவாகியுள்ள ‘தல தளபதி’ குறும்படத்தில் சம்பளமே வாங்காமல் பாடல் எழுதியது மனநிறைவாக இருந்தது’’ என்று சொல்லும் ஜெயங்கொண்டான் வழக்கம் போல் இந்த தீபாவளிக்கும் ஊருக்கு செல்ல முடியாமல் சென்னையில் தங்கியிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு இலவசமாக பிரியாணி விருந்து அளிக்க உள்ளாராம்.

-எஸ்