தயாரிப்பாளர் ஆகிட்டார் அதர்வா!



செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு பேசுகிறார் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவை வைத்து ‘பாணா காத்தாடி’ கொடுத்த இயக்குநர். அடுத்த படத்தின் டைட்டிலே கிறங்கடிக்குது. ‘செம போத ஆகாத’.“என்ன தலைவா, இப்படி இறங்கிட்டீங்க?”‘‘மது, மாது எல்லாமே போதை வஸ்துதான். போதை ஏறினால் புத்தி கெட்டுடும். அது தடுமாறினா தப்பான முடிவு எடுப்போம்.

எந்த போதைனாலும் அது சிலமணி நேரத்துல தெளிஞ்சிடும். ஆனா, அந்த டைம்ல நாம எடுத்த முடிவு, நம்ம வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். அதனாலதான் ‘செம போத ஆகாத’னு சொல்றோம். அப்போ கொஞ்சமா போதை ஆகலாமா?னு கேட்டுடாதீங்க!’’ - புன்னகையுடன் தொடர்கிறார் பத்ரி.

‘‘மறுபடியும் அதர்வாவோட கூட்டணி வச்சிருக்கேன். இந்த முறை இன்னும் ஸ்பெஷல். அவரே படத்தை தயாரிக்கறார். டார்க் காமெடியும், ஆக்‌ஷன் த்ரில்லருமான ஒரு கதை இது. சின்ன ஒரு அறையில தொடங்குற கதை அப்புறம் அடுத்தடுத்து வெளியூர், வெளிமாநிலம்னு பரந்து விரியும். அதனால லொகேஷன்களுக்கு நிறைய மெனக்கெட்டிருக்கோம்.

கூகுள்மேப்ல கூட காட்டாத லொகேஷன்களுக்கு போய் ஷூட் பண்ணிட்டு வந்திருக்கோம்.இன்னிக்கு எல்லா தரப்பினரும் கடுமையான ஸ்ட்ரெஸ்னால பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு கண்டிப்பா ஒரு ரிலீஃப் கொடுக்கற படமா இது இருக்கும். இளைஞர்களுக்கு பிடிச்ச படமா இருக்கும். யூத்தோட பல்ஸ் தெரிஞ்சு சீன்ஸ் வச்சிருக்கோம்.

ஐ.டி.யில ஒர்க் பண்றவரா அதர்வா நடிக்கறார். புதுமுகம் மிஷ்டி சக்ரவர்த்தி, ‘காவியத்தலைவன்’ அனைகா சோதி தவிர கருணாகரன், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சேத்தன், தேவதர்ஷினினு கலகலப்பும் கலர்ஃபுல்லாவும் நட்சத்திரங்கள் இருக்காங்க. ‘பீட்சா’, ‘ஆம்பள’ படங்களின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், ‘பைரவா’ எடிட்டர் பிரவீன் கே.எல்., ‘மிருதன்’ கலை இயக்குநர் மூர்த்தினு நல்ல டீம் அமைஞ்சிருக்கு..’’

‘‘நடிகர் அதர்வா - தயாரிப்பாளர் அதர்வா- ஒப்பிடுங்க?’’
‘‘நானும் அதர்வாவும் ஒரு இயக்குநர்- ஹீரோ உறவுல பழகல. ‘பாணா’ல இருந்து அவரோட ஃபேமிலியில ஒருத்தரா  நானும் ஆகிட்டேன். ஒரு நடிகரா நிறைய டெவலப் ஆகிட்டார். ‘பாணா’ அதர்வாவுக்கும் ‘செ.போ.ஆ’ அதர்வாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் பார்த்தேன். இப்போ சின்னச்சின்ன விஷயங்கள்ல கூட பிச்சு உதறுறார். ஒரு நடிகரா அசுர வளர்ச்சியடைஞ்சிருக்கார்.

நல்ல மாற்றம். அவரே தயாரிப்பாளராகவும் இருக்கறதால கதைக்கு என்ன தேவையா இருந்தாலும் உடனே பண்ணிக் கொடுத்திடுறார். காலையில ஆறு மணியில இருந்து சாயங்காலம் ஆறு மணி வரை அவர் கால்ஷீட் கொடுத்தால் அந்த டைம்ல அவர் நடிகரா மட்டும்தான் இருப்பார். தயாரிப்பு தொடர்பான எந்த ஒரு விஷயத்தை அவர்கிட்ட கொண்டு போக மாட்டாங்க.

ஆறு மணிக்கு மேல புரொட்யூசர் அதர்வா ரெடியாகிடுவார். ஷூட்டிங் நடந்த ஆறேழு மாசங்கள்ல அவரை தாடியோட பார்த்துப் பழகிட்டு, இப்போ தாடி இல்லாத அதர்வா வேற ஆள் மாதிரி தெரியுறார்.’’‘‘ஹீரோயின் குளுகுளுன்னு இருக்காங்களே?’’

‘‘தேங்க்ஸ். புதுமுகம் மிஷ்டி பாலிவுட்ல நிறைய படங்கள் பண்ணினவர். மாதுரி தீக்‌ஷித்தை அறிமுகப்படுத்தின சுபாஷ்கையோட ‘கான்ஞ்சி’ படத்தில் அறிமுகமான பொண்ணு மிஷ்டி. தமிழ்ல ஒரு பெரிய ரவுண்ட் இனி வருவார்னு எதிர்பார்க்குறேன். இதுல அதர்வா கூட இன்னொரு ஹீரோயின் அனைகா சோதி. ‘காவியத்தலைவன்’ல நடிச்சிருக்காங்க. இதுல அவங்க call girl கேரக்டர் பண்ணியிருக்காங்க.

அனைகாகிட்ட இந்தக் கேரக்டர் சொல்லும்போது நடிப்பாங்களோ மாட்டாங்களோன்னு சின்ன தயக்கம் இருந்தது. ஆனா, எல்லாமே ஆக்ட்டிங் தானேன்னு சொல்லி ஆச்சரியப்படுத்தினாங்க. ‘பாணா’வுல நான் சமந்தாகிட்ட பார்த்த ஒரு விஷயம் இவங்ககிட்டேயும் இருந்துச்சு.  டயலாக்கிற்கான அர்த்தம் தெரிஞ்ச பிறகுதான் நடிப்பாங்க. ரொம்பவே புரொஃப ஷனல் ஆக்ட்ரஸ்.’’ ‘‘மறுபடியும் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி...’’

‘‘ ‘பாணா’வில் எனக்கு நல்ல பாடல்கள் கொடுத்திருந்தார். யுவன்கிட்ட இப்போ நிறைய சேஞ்ஜஸ் தெரிஞ்சது. குறிப்பாக ரொம்ப சந்தோஷமா இருக்கார். யூத்களுக்கு பிடிச்ச மாதிரி பாடல்கள் கொடுத்திருக்கார். அவர்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே ‘இதான் பாடல்’னு எதையும் திணிக்கமாட்டார். நமக்கு திருப்தி இல்லைன்னா அது முகத்திலேயே தெரிஞ்சிடும்.

உடனே வேற பாடல் கொடுத்திடுறார். அவரை சந்திச்ச பிறகு எனக்குள்ளேயே நிறைய எனர்ஜி வந்திடுச்சு. ஒரு படத்தோட எடிட்டர்கள் அவங்க ஒர்க் பண்ணும் போதே, படத்தோட வெற்றியை தீர்மானிச்சிடுவாங்க. ‘செம காமெடியா இருக்கு’னு இதோட எடிட்டர் பிரவீன் நிறைய ட்விட் போட்டிருக்கார். இப்பவே பாதி சக்சஸ் கிடைச்ச சந்தோஷமா இருக்கு.’’

- மை.பாரதிராஜா