புன்னகை அரசி!



ஹீரோயினிஸம்

ஒரு நாள் அந்த சினிமா பத்திரிகையாளருக்கு ஒரு போன் வந்தது. “அண்ணா...  நான் சினேகா பேசுறேன். நாளைக்கு என்னோட பிறந்தநாள். அவசியம் வீட்டுக்கு வந்து வாழ்த்துங்க” என்றது குரல். அந்த பத்திரிகையாளருக்கு ஆச்சர்யம்.

சினேகா பற்றி அதிகம் கிசுகிசு எழுதி வருகிறவர் அவர். சரி, ஏதோ அழைக்கிறார். போனால் ஒரு செய்தி கிடைக்கும் என்று பிறந்தநாளுக்கு செல்கிறார். வீட்டில் இன்னும் சில பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். எல்லோரையும் உட்காரவைத்து குளிர்பானம் கொடுத்தார்.

“எல்ேலாரும் இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும். அதுவும் என் கையால சமைக்கிறத” என்றவர், காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார். பேச்சும் வேலையுமாக ஒரு மணிநேரத்துக்குள் சமைத்து அனைவருக்கும் சாப்பாடு பரிமாறினார்.

“எப்படி இருக்கு நான் சமைச்சது?” என்று கேட்டார். குறிப்பாக அந்த கிசுகிசு பத்திரிகையாளரிடம். “சூப்பரா இருக்கும்மா” என்றார் அவர். “அண்ணா நீங்க கடைசியா என்னைப் பற்றி எழுதின கிசுகிசு சினேகாவுக்கு சமைக்கவே தெரியாதுன்னு. இப்ப தெரியுதாண்ணா நான் எப்படி சமைக்கிறேன்னு. இது மாதிரிதான் உங்களோட எல்லா கிசுகிசுவும். ஆனா ஒவ்வொண்ணையும் நான் புரூப் பண்ண முடியாதே” என்றார் சினேகா.

முதல் படத்தில் எப்படி கண்ணியமாக நடித்தாரோ, அதேபோல இன்றுவரைக்கும் நடித்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகை சினேகாதான். ‘பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி’ என்று சொல்கிற வாக்கியம் அச்சு அசலாக சினேகாவுக்கு பொருந்தும். அதை உணர்ந்தே அவர் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார். சில நடிகைகள் தமிழில் கண்ணியமாக நடிப்பார்கள். தெலுங்கு, மலையாளத்தில் கனவுக் கன்னியாக இருப்பார்கள். சினேகா எல்லா ெமாழியிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்.

மீடியாக்களின் வார்த்தை தாக்குதலுக்கு இவரளவிற்கு யாரும் உள்ளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அவருடன் நடித்த முதல்பட ஹீரோ முதல் அவர் நடித்த விளம்பரப்பட முதலாளி வரை அனைவருடனும் இணைத்துப் பேசப்பட்டார்.

அதில் அவருக்கு வருத்தம் இருந்தாலும் புன்னகை மட்டுமே அவரது பதிலாக இருந்தது. அவரை பலர் காதலித்திருக்கலாம். அதற்கு அவர் என்ன செய்வார். அவர் காதலித்த ஒரே மனிதன் பிரசன்னா. காதலித்தார். அதனை வெளிப்படையாக அறிவித்தார். திருமணம் செய்தார். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார். அவரைப் பற்றி வந்த எதிர்மறை செய்திகள் அனைத்தும் பிரசன்னாவுடனான அவரது வாழ்க்கை மூலம் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

இப்போதும் அவரைப் பற்றிய எதிர்மறை செய்திகளுக்கு பஞ்சமில்லை. சொந்தப் படம் தயாரிப்பது தொடர்பாக கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அதற்கு அடுத்த நாளே இருவரும் சேர்ந்து, நலிந்த விவசாயிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து சண்டை செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

சினேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கே சொந்தமானது. அதில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனாலும் சினேகா அறிமுகமான காலத்திலிருந்து இப்போது வரை அதனை எதிர்ெகாண்டே வாழ்ந்திருக்கிறார். நல்ல நடிகை, நல்ல மனைவி, நல்ல தாய், நல்ல மகள், நல்ல தோழி, நல்ல மருமகள் என அவரின் எல்லா முகமும் புன்னகை முகமாகவே இருக்கிறது.

- மீரான்