கதை கேட்டார், கைவிட்டார்!



எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் சூழ்நிலை சூழ்ச்சி செய்துவிடுகிறது என்கிற விதிக்கு அஜீத்தின் திரைவாழ்வில் சில உதாரணங்கள் இருக்கின்றன.அவருக்கான கதையை அவர் மட்டுமே கேட்பார், அவர் மட்டுமே மறுப்பார். அப்படி நடிக்க மறுத்த சில படங்கள் மற்ற நாயகர்களின் நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்றன.

* இயக்குநர் பாலசேகரன் முதலில் ‘லவ் டுடே’ கதையை அஜீத்துக்குச் சொன்னார். அவருக்குப் பிடிக்கவில்லை. பிறகு அந்தக் கதை விஜய்க்கு போனது. படம் வெற்றி.

* ‘ரன்’ கதையை அஜீத்துக்கு சொன்னார் லிங்குசாமி. திருப்தியடையாத அஜீத், அந்தக் கதையை மறுத்துவிட்டார். மாதவனுக்கு அடித்தது லக். படம் சூப்பர் டூப்பர் வெற்றி.

* பாலாவின் படத்தில் நடிப்பதற்கு முன்னணி நாயகர்கள் போட்டி போட்ட காலகட்டம் அது. அவரது ‘நந்தா’ கதை அஜீத்துக்கு சொல்லப்பட்டது. பிடிக்காததால் பிடிகொடுக்கவில்லை. சம்மதித்து நடித்தார் சூர்யா. அந்தப் படம் அவரது திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

* சரண் இயக்கத்தில், ஏவி.எம் தயாரிப்பில் உருவான ‘ஜெமினி’ கதை முதலில் அஜீத்துக்குத்தான் விவரிக்கப்பட்டது. ஏனோ அவருக்கு பிடிக்காமல் போனது. கெட்டியாகப் பிடித்துக்கொண்ட விக்ரம்  வெற்றிபெற்றார்.

* ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படக்கதையை ஆரம்பத்தில் கேட்டவர் அஜீத். தவிர்க்க இயலாத காரணத்தால் நடிக்க முடியவில்லை. அதில் நடித்த சூர்யாவுக்கு அகில இந்திய அங்கீகாரம்  கிடைத்தது.

* ‘போலீஸ் ஸ்டோரி’ என்ற பெயரில் கவுதம் வாசுதேவ் மேனன் சொன்ன கதையில் அஜீத்துக்கு நாட்டமில்லை. விலகிக்கொண்டார். அது ‘காக்க காக்க’ என்ற பெயர் மாற்றத்துடன் சூர்யா நடிப்பில் வெளியாகி, காப்ஸ் படங்களின் கேப்டன் என்ற பெயரைப் பெற்றது.

* உலக அதிசயங்கள் உள்ள இடங்களிலெல்லாம் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ‘ஜீன்ஸ்’ படத்தின் கதையை  முதலில் அஜீத்துக்கு சொன்னார் இயக்குநர் ஷங்கர். அதிசயம் எதுவும் அஜீத்தை ஈர்க்கவில்லை. அந்தப்படம் பிரஷாந்த் திரைவாழ்வில் முத்திரையானது.

* ‘கில்லி’ கதையை தரணியிடம் கேட்ட அஜீத், அது ரீமேக் படம் என்கிற காரணத்தைச் சொல்லி தவிர்த்துவிட்டார். ஒப்புக்கொண்டு நடித்த விஜய்யின் திரைவாழ்வில் அந்தப்படம் மிகப்பெரிய ஆக்‌ஷன் மூவியாக கொண்டாடப்பட்டது.

* தரணியின் ‘தூள்’ கதையையும் விருப்பமில்லை என்று விலக்கிவிட்டார் அஜீத். அதில் நடித்த விக்ரம், ஆக்‌ஷன் ஹீரோவாக உச்சம் தொட்டார்.

* கே.வி.ஆனந்த் ஜர்னலிச சாகசம் சொல்லும் ‘கோ’ கதையை அஜீத்திடம் சொன்னார். சாகசத்துக்கு சமரசம் ஆகமுடியாததால் ஐக்கியமாகவில்லை அஜீத். அந்தப்படம் ஜீவாவின் மார்க்கெட் மதிப்பை உயர்த்தியது.

* மீண்டும் அஜீத்தை நாடினார் பாலா. ‘நான் கடவுள்’ கதையைக் கேட்டு கைகூப்பி வணங்கி, ஸாரி சொல்லிவிட்டார். அந்தப்படம் ஆர்யாவின்மீது அனைவரது பார்வையையும் திருப்பியது.

* விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்டு, சக்கையையும் பிழிந்து சாறு எடுத்த வெற்றிப்படம் ஹரி இயக்கிய ‘சாமி’. அந்தக்கதையை முதலில் கேட்டு, நடிக்க மறுத்துவிட்டார் அஜீத். பட்டியலில் இன்னும் சில படங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்.

- நெல்பா