ரிஷிமூலம்!



அஜீத்குமார் பிறந்த ஊர் ஹைதராபாத்துக்கு அருகில் இருக்கிறது. மே 1, 1971ல் பிறந்தார். அப்பா சுப்பிர மணியம், அம்மா மோகினி. ஓர் அண்ணன், ஒரு தம்பிக்கு இடையில் நடுவில் பிறந்தவர். சகோதரர்கள் இருவருமே அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவருக்கு இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த தங்கைகள் இருவரும், சிறுவயதிலேயே காலமாகிவிட்டார்களாம்.

சென்னை எழும்பூரில் இருக்கும் அசன் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில்தான் படிப்பு. +2 முடிப்பதற்குள்ளாகவே பள்ளியில் இருந்து விலகிவிட்டார். சிறுவயதில் எம்.ஜி.ஆர் ரசிகர். வளர்ந்த பிறகு ரஜினி & கமல் இருவருக்கும் தீவிரமான ரசிகர் ஆனார்.

பதினெட்டு வயதிலேயே கார் பந்தயத்தில் ஆர்வம். இதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட எக்ஸ்போர்ட் கார்மென்ட் கம்பெனியில் வேலை பார்த்தார். அந்தப் பணம் போதாமல் மாடலிங் செய்தும் சம்பாதித்தார். அவருடைய பத்தொன்பது வயதில் சுரேஷ், நதியா நடித்த ‘என் வீடு என் கணவர்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் பள்ளி மாணவராக தோன்றியதுதான் சினிமாவில் அவரது தொடக்கம்.

- தேவா