தாய்ப்பாசத்துக்கு ஏங்கும் மகன்!



தாமிரா இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில், பாலசந்தர்- பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் பாலசந்தரின் மகனாக நடித்தவர் யுவராஜா. இப்போது ‘கெளுத்தி’ நாயகன் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

“தாயின் அன்புக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு முரட்டு இளைஞனைப் பற்றிய காதல் கதை இது. வாழ்க்கையில் நான் சந்தித்த பல மனிதர்கள் எனக்குள் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதன் தொகுப்பே இந்தக் கதை.

தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் மேலோட்டமாக இந்தக்கதையைச் சொன்னேன். கண்கலங்கியபடி கேட்டவர், உடனடியாக படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தார். அவரது அன்புக்கும் அக்கறைக்கும் மதிப்பளித்து, படத்தை சிறந்த முறையில் இயக்கியிருக்கிறேன்” என்கிறார் யுவராஜா.
‘திட்டக்குடி’ படத்துக்கு இசையமைத்த செல்வா நம்பி இசையமைக்கிறார். அகரன் ஒளிப்பதிவு. தா.கண்ணன் மற்றும் யுவராஜா பாடல்களை எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பாளரும், அவரது மகன் அக்சகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் கன்னிகா இந்தப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறாராம். இந்தப்படம் திரைக்கு வரத் தயாராகிவிட்ட நிலையில் அடுத்த படத்தை இயக்கி நடிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார் யுவராஜ்.

- நெல்பா