நவீன பிளாட்டில் வசிக்கும் நயன்தாரா!



நட்சத்திரங்களின் வசிப்பிடம் குறித்த எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட்

முன்பெல்லாம் சினிமாக்காரர்கள் என்றால் மிகப்பெரிய பங்களா அல்லது பிரும்மாண்டமான தனி வீட்டில் வசிப்பார்கள். சிலர் புறநகரில் பண்ணை வீடு அமைத்துக் கொண்டு குடும்பத்தோடு இருப்பதும் உண்டு. அப்போதெல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை நடைமுறை பிரதானமாக இருந்தது. நாளடைவில் இந்தப் போக்கு முற்றிலுமாக மாறிவிட்டது.

தனி வீடுகளில் வசிக்கும் நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை இப்போது விரல்விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலானோர் அப்பார்ட்மென்டில்தான் வசிக்கிறார்கள். போரூர், வடபழநி, வளசரவாக்கம், சாலிகிராமம், கோடம்பாக்கம், தி.நகர், எழும்பூர், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில், பல கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று அல்லது இரண்டு பிளாட்டுகள் வாங்கி நிறைய பேர் குடியேறிவிட்டனர்.

செக்யூரிட்டி வசதி, கார் பார்க்கிங், நீச்சல் குளம், அதிநவீன உடற்பயிற்சிக் கூடம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் திரையரங்கம், பார்ட்டி ஹால், வாக்கிங் செல்ல மினி பூங்கா உட்பட பல்வேறு வசதிகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இவை நம் நட்சத்திரங்களை திருப்தி செய்கின்றன. யாராக இருந்தாலும் சரி, பலத்த செக்யூரிட்டி சிஸ்டத்தை மீறி வீட்டுக்குள் எளிதில் சென்றுவிட முடியாது.

வீடியோ காலிங் வசதி மற்றும் எலெக்ட்ரானிக் கார்டு வசதி செய்யப்பட்டுள்ளதால், அத்துமீறி யாரும் உள்ளே நுழைய முடியாது. இதனால் இவர்களை ரசிகர்களோ, பத்திரிகையாளர்களோ தொடர்புகொள்ளவே முடிவதில்லை.  அப்பார்ட்மென்ட் வாட்ச்மேனை தாண்டி உள்ளே செல்லுவது பிரம்மப் பிரயத்தனம்  ஆகிவிட்டது. தங்களுடைய பிரைவஸிக்கு இதுபோன்ற பிளாட்டுகள்தான் சரியென்ற  முடிவுக்கு சினிமாக்காரர்கள் வந்துவிட்டாலும், அவர்கள் மக்களிடமிருந்து  தனிமைப்பட்டுக் கொண்டிருப்பதை உணரவில்லை.

போரூர் பகுதியில் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, சுஜா உட்பட சில நடிகர், நடிகைகள் வசிக்கின்றனர். வடபழநியில் இளையராஜா, ஷங்கர், தங்கர்பச்சான், திரிஷா, சந்தியா, உமா ரியாஸ்கான் போன்றோருக்கு பிளாட்டுகள் இருக்கின்றன.

இங்குள்ள சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ராகவா லாரன்ஸ், தன்ஷிகா, கணேஷ் வெங்கட்ராமன், நிஷா, ரமேஷ்கண்ணா, பேரரசு, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வசிக்கிறார்கள். தி.நகர் பகுதியில் பிரசன்னா - சினேகா, எழும்பூர் பகுதியில் நயன்தாரா, நிக்கி கல்ராணி, இயக்குநர் அட்லி, சாக்‌ஷி அகர்வால் போன்றோர் வசிக்கின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், எழும்பூரில் நயன்தாரா வாங்கியிருப்பது அடுத்தடுத்த மாடியில் கட்டப்பட்டுள்ள வீடுகள். கீழ்வீட்டில் இருந்து மேல்வீட்டுக்குச் செல்ல, உள்ளேயே தனி லிஃப்ட் வைத்துக் கட்டியிருக்கிறார்.

மேலும், பல லட்ச ரூபாய் செலவில் இன்டீரியர் டெக்கரேஷன் செய்து, வீட்டை இதுவரை எந்த ஹீரோயினும் அழகுபடுத்த நினைக்காத அளவுக்கு மிகப் பிரமாதமாக அலங்கரித்துள்ளார். சுவர்களில் ஆளுயரக் கண்ணாடிகளைப் பதித்துள்ளார். மேலேயுள்ள அந்த வீட்டில்தான் தன் மனம் கவர்ந்த காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் தனியாக வசித்து வருகிறார் நயன்தாரா.

 ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, அர்ஜுன், கார்த்திக், விஜய், அஜீத்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் தனி வீடுகளில் வசிக்கின்றனர்.

ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், தமன்னா, அனுஷ்கா, திவ்யா, ஆனந்தி ஆகியோருக்கு சென்னையில் வீடு கிடையாது. ஷூட்டிங்கிற்கு வந்தால், தயாரிப்பாளர் செலவில் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் தங்குகின்றனர். இதற்காக மட்டுமே லட்சக்கணக்கான ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது என்று தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

- தேவராஜ்