அஜய் தேவ்கன் vs கரண் ஜோஹர்!



பாலிவுட்டில் ஆக்‌ஷன் தீபாவளி

2016 துவங்கும்போதே தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ் என்பதை முடிவு செய்துவிட்டார்கள். முதலில் அறிவித்தவர் அஜய் தேவ்கன்தான். தன்னுடைய ‘ஷிவாய்’ தீபாவளி ரிலீஸ் என்று அவர் அறிவித்த அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளேயே பாலிவுட்டின் டாப் டைரக்டர் கம் புரொடியூஸரான கரண் ஜோஹர், ‘ஏ தில் ஹே முஷ்கில்’ மூலமாக தானும் தீபாவளி ரேஸில் அஜய்தேவ்கனுக்கு போட்டியாக களமிறங்கப் போவதாக சொன்னார்.

பொதுவாக பாலிவுட்டில் இதுபோல போட்டி நடக்காது. ஒரே படம் மொத்த வசூலையும் சுருட்ட வேண்டும் என்று கணக்கு போட்டு, பேசிவைத்துக் கொண்டு யாரேனும் ஒருவரின் படத்தை வெளியிட மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள்.ஆனால்-முதன்முறையாக இந்த வழக்கத்தை உடைத்தெறிந்தவர் அஜய்தேவ்கன்தான்.

அதுவும் அவர் மோதியது சாதாரண ஆளுடன் அல்ல. பாலிவுட்டின் பாட்ஷாவான ஷாருக்கானுடன். இத்தனைக்கும் ஷாருக்கின் அந்தப் படத்தை தயாரித்து இயக்கியவர் யாஷ் சோப்ரா. ‘ஜப் தக் ஹே ஜான்’தான் அந்தத் திரைப்படம். அதோடு தன்னுடைய ‘சன் ஆஃப் சர்தார்’ (தமிழில் சந்தானம் நடிப்பில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’) படத்தை மோதவிட்டார்.

இப்போது கரண் ஜோஹர் என்ன செய்திருக்கிறாரோ, அதையேதான் 2012ல் அஜய்தேவ்கனும் செய்தார். யஷ் சோப்ரா தீபாவளிக்கு ஷாருக்கானின் படம் என்று அறிவித்த இரண்டே நாட்களில் தன்னுடைய படத்தின் அறிவிப்பை அஜய்தேவ்கன் செய்தார்.

அதுவுமின்றி தீபாவளி ரிலீஸ் நேரத்தில் தன்னுடைய படத்தை வெளியிட தடங்கல் செய்வதாக யாஷ்ராஜ் பிலிம்சுக்கு லீகல் நோட்டீசும் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் மூலமாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் திரைமறைவில் அஜய்தேவ்கனின் ‘சன் ஆஃப் சர்தார்’ படத்துக்கு எதிராக செய்து கொண்டிருந்த சதிவேலைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

எனினும், ரிசல்ட் இரண்டு படங்களுக்குமே சாதகமாக அமைந்தது என்பதுதான் பிரச்னை பெருசாகாமல் அமுங்கக் காரணம். இரு படங்களுமே 100+ கோடியை வசூலித்து சாதனை புரிந்தன.

இத்தனைக்கும் அஜய்தேவ்கனின் படத்துக்கு மீடியா ரெஸ்பான்ஸ் மிகவும் மோசமாக அமைந்தது. வேண்டுமென்றே அந்தப் படத்தை மட்டம் தட்டி சமூக வலைத்தளங்களிலும் மோசமாக எழுதினார்கள். அத்தனையையும் மீறி எழுந்து நின்றார் அஜய்தேவ்கன்.

இந்த வரலாற்றை இங்கே குறிப்பிட வேண்டியதன் அவசியம் என்னவென்றால், அந்த யாஷ் சோப்ராவின் ஆத்மசீடர்தான், இப்போது அதே அஜய்தேவ்கனுக்கு போட்டியாக களமிறங்கும் கரண் ஜோஹர்.

‘சன் ஆஃப் சர்தார்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் தீபாவளிக்கு வரும் அஜய்தேவ்கன் படம் இந்த ‘ஷிவாய்’தான். முன்பு யாஷ்ராஜ் க்ரூப் என்ன வேலைகளை எல்லாம் செய்து அஜய்தேவ்கனை வெறுப்பேற்றினார்களோ, அதையெல்லாம் கரண் ஜோஹரும் செய்ய ஆரம்பித்திருப்பதால் ரிலீஸுக்கு முன்பே சூடு பிடித்திருக்கிறது பாலிவுட் தீபாவளி.

நம்மூர் பவர்ஸ்டார் போல் பாலிவுட்டில் கமால்கான் என்று ஒருவர் இருக்கிறார். இப்போது வேலை வெட்டி எதுவுமின்றி இருக்கும் அவர் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிட்டு ட்விட்டரில் விமர்சனம் எழுதி ஹிட்ஸ்களை குவிக்கிறார். இவரது கேலிக்கூத்தான விமர்சனங்களுக்கு உலகம் முழுக்க பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது.

கரண் ஜோஹர் இவரை நோக்கி கண்சிமிட்ட தனக்கான அசைன்மென்ட் என்னவென்பதை கமால்கான் உணர்ந்து கொண்டார். அதன் அடிப்படையில் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தைப் பாராட்டியும், ‘ஷிவாய்’ திரைப்படத்தை கண்டமேனிக்கு கிண்டல் அடித்தும் சமூகவலைத்தளங்களில் ரகளை செய்துகொண்டிருக்கிறார்.

ஒரு கட்டம் வரை இதை பொறுத்துக் கொண்ட அஜய்தேவ்கன், தன்னுடைய மேனேஜர் மூலமாக கமாலிடம் பேசியபோதுதான் கரண் ஜோஹரின் கள்ளத்தனம் வெளிவந்தது. கமால்கானுக்கு கரண் ஜோஹர் இருபத்தைந்து லட்சம் கொடுத்திருப்பதாகவும், அதைவிட அதிகப் பணத்தை தருவதாக இருந்தால் அஜய்தேவ்கனுக்காக தான் களமிறங்குவதாகவும் அவர் பேசியதை அப்படியே ரெக்கார்ட் செய்து சோஷியல் மீடியாக்களில் ஏற்றிவிட்டார் அஜய்தேவ்கனின் மேனேஜர்.

கரண்ஜோஹருக்கு இப்போது அடுத்த பிரச்னை அவரே எதிர்பாராத ஏரியாவில் இருந்து வந்திருக்கிறது. ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தப் படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் பவாத்கானும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை எல்லையில் சூடுபிடித்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் நடிகர் நடித்த படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அஜய்தேவ்கனின் படம் குழந்தை கடத்தலை மையமாகக் கொண்டது. இந்தப் படத்துக்கான கதையையும் அவரே எழுதியிருக்கிறார். இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளை இப்படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கணிக்கப்படுகிறது.

மல்லுக்கு நிற்கும் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ இளமை ததும்பும் ரொமான்ஸ் படம். ரன்பீரோடு மிகவும் நெருக்கமாக ஐஸ்வர்யாராய் நடித்திருப்பதால், அவருக்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் பிரச்னையென்று பாலிவுட்டில் கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

கூடுதலாக அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சியும் நன்கு கல்லா கட்டும் என்கிறார்கள். கள்ளக் காதலை நல்ல காதலாக சித்தரிக்கும் கதையென்று சிலர் தலையில் அடித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

இந்த சூடான மோதலில் ஷாருக்கானும் இருக்கிறார் என்று வேடிக்கையாக சொல்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ஐஸ்வர்யாராயின் கணவராக கரண் ஜோஹர் படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறாராம் ஷாருக்.

ஜியா