அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்த ஆடியோ ரிலீஸ்!
காவிரிக்காக இரண்டு மாநிலங்களும் தகித்துக் கொண்டிருந்த நிலையில், பெங்களூர்காரரான கிஷோர் நடித்துள்ள ‘கடிகார மனிதர்கள்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எந்தப் பிரச்சினையுமின்றி நடந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் அப்படத்தின் இயக்குநர் வைகறை பாலன். இயக்குநர் சசிகுமாரின் சிஷ்யன் என்கிற அடையாளத்தோடு களமிறங்கி யிருப்பவரைச் சந்தித்தோம்.
“சென்னை மாதிரியான பெருநகரங்களில் வசிக்கும் மக்களின் மாதாந்திரப் பிரச்னையே வீட்டு வாடகைதான். தாங்கள் சம்பாதிப்பதில் பெரும் பகுதியை வாடகைக்கே கொட்டி அழுகிறார்கள். அப்படியும் அடிக்கடி வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் பந்தாடுகிறார்கள். வீடுமாற மூட்டை முடிச்சோடு குடும்பங்கள் தெருவில் அகதிகள் மாதிரி அலைவது இங்கே சகஜமாக காணக்கிடைக்கும் காட்சி.
என்னோட ‘கடிகார மனிதர்கள்’ இந்த மனிதர்களைப் பத்தின படம்தான். கிஷோர், கருணாகரன் ரெண்டு பேரும் லீட் ரோல் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்தோட பாப்புலர் முகமே இவங்க ரெண்டு பேருடையதுதான். படத்தோட தயாரிப்பாளர்களில் ஒருத்தரான பிரதீப் ஜோஸ், கதைக்கு திருப்பம் கொடுக்கக்கூடிய ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிச்சிருக்காரு.
கிஷோரைப் பொறுத்தவரை ‘கபாலி’ மாதிரி பெரிய பட்ஜெட் படங்களில் நடிச்சாலும், ஸ்டோரி வேல்யூ இருக்கிற எந்த சின்னப் படத்தையும் மிஸ் பண்ணுறதே இல்லை.பெருசா ஆடியோ ரிலீஸ் பண்ணி புரமோட் பண்ணத் தான் ஏற்பாடுகளை செஞ்சிக்கிட்டிருந்தோம்.
ஆனா, அப்போதான் பெங்களூரில் கலவரம் கட்டுக்கடங்காம நடந்துக்கிட்டிருந்தது. கிஷோர் சாரே இல்லாமதான் விழாவை நடத்தணுமோன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தோம். ஆனா, அவர் ஏகப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்.
வாடகைப் பிரச்சினை பத்தின கதை என்பதால் நடுத்தர மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒண்ணை ஃபிக்ஸ் பண்ணி ஷூட்டிங் செய்ய ஏற்பாடு செஞ்சோம். ஆனா, என்ன கதையை எடுக்கப் போறோம்னு தெரிஞ்சிக்கிட்ட ஹவுஸ் ஓனர்ஸ், தங்களுக்கு எதிரான படம் இதுன்னு எங்களுக்கு ‘நோ’ சொல்லிட்டாங்க. அப்புறம் பாண்டிச்சேரி பக்கத்துலே நூறு வீடு செட் போட்டு எடுத்தோம். படம் பார்க்குறப்போ உங்களுக்கு செட்டிங்ஸ் என்கிற ஃபீலே கொஞ்சம்கூட வராது.
வாடகைப் பிரச்சினை, அது இதுன்னு நான் பேசிக்கிட்டிருக்கிறதாலே மெசேஜ் சொல்லி கழுத்தறுப்பேன் போலிருக்கேன்னு பயந்துடாதீங்க. என்னோட குருநாதர் சசிகுமார் படம் மாதிரியே, இந்தப் படமும் ஜனரஞ்சகமா எல்லா உணர்வுகளும் கலந்திருக்கும். குடும்பத்தோட நீங்க நம்பி படம் பார்க்க வரலாம்” என்கிறார் வைகறை பாலன்.
- எஸ்
|