ஒய் நாட் நயன்தாரா?



சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘சிங்கம்-3’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் ஹரி, மீண்டும் விக்ரமோடு இணைந்து ‘சாமி-2’ எடுக்க திட்டமிட்டிருக்கிறார். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘சாமி’ வெற்றி கண்டபோது, தமிழில் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை.

ஆனால், இப்போது ‘சிங்கம்’ உள்ளிட்ட படங்களின் அடுத்தடுத்த பாகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பே, ‘சாமி’ படத்துக்கான இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ப்ரியன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையென்று தனக்கு வசதியான டீமுடனேயே களமிறங்குகிறார் ஹரி. கதாநாயகி யாரென்று மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லை. ‘ஐயா’ படத்தில் நயன்தாராவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவரே ஹரிதான்.

இப்போது தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்திருக்கும் அவரையே ஏன் ‘சாமி-2’வுக்கும் ஹீரோயின் ஆக்கக்கூடாது என்று பலரும் ஹரியை கேட்டுவருகிறார்கள். இதுவரை அவர் இக்கேள்விக்கு மவுனத்தையே பதிலாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்.