கவர்ச்சி கல்லாப்பெட்டி... முடிஞ்சா இவன புடி!



‘நான் ஈ’ படத்தில் மிரட்டும் கண்களால் உருட்டியே புகழ் பெற்றவர் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப். ‘பாகுபலி’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்ததால் தென்னிந்தியா முழுக்கவே சுதீப்புக்கு இப்போது நல்ல டிமாண்ட். கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், இதுவரை டப்பிங் படங்கள் மூலமாகவே தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்த சுதீப், முதன்முதலாக இப்போதுதான் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார்.

ரஜினிகாந்தின் ‘லிங்கா’வை முடித்ததுமே சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ படத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகவேகமாக நடந்து வருகின்றன.

நன்கு தமிழ் பேசக்கூடிய சுதீப், இந்தப் படத்துக்காக நடை, உடை, பாவனை என்று தன்னை முழுக்க தமிழனாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் படக்குழுவினர். ஆனால், கதையைப் பற்றி மட்டும் மூச்சுவிடவும் தயங்குகிறார்கள்.

ஹீரோயினாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். அமிதாப் பச்சன் மாதிரி உயரமான சுதீப்புக்கு, ஜெயா பச்சன் மாதிரி குள்ளமான நித்யா மேனன் என்று எகனைமொகனையான காம்பினேஷன். ‘போக்கிரி’, ‘பூஜை’ போன்ற படங்கள் மூலம் தமிழுக்கு நன்கு அறிமுகமான முகேஷ்திவாரிதான் வில்லனாக சுதீப்பை விரட்டுகிறாராம். ‘எதிர்நீச்சல்’, ‘பாண்டியநாடு’ படங்களில் நடித்த சரத் லோகித்சுவா இன்னொரு வில்லன்.

இவையெல்லாவற்றையும் விட படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பை கூட்டியிருப்பவர் செக்ஸ் குயீன் சன்னி லியோன். நேரடியாக முதன்முதலாக இந்தப் படத்தின் மூலமாகத்தான் தமிழுக்கு ஐட்டம்சாங் ஒன்றில் அறிமுகமாகிறார். அவரது கவர்ச்சி கல்லா கட்டும் என்கிறார்கள். இமான் இசையில் சுதீப், நித்யாமேனன் இணைந்து பாடியிருக்கும் டூயட் ஹைலைட்டாம்.

தமிழ் மற்றும் கன்னடம் இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ‘முடிஞ்சா இவன புடி’யை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ரஜினியின் ‘கபாலி’ ரிலீஸுக்குப் பிறகு தமிழ் ரசிகர்களுக்கு இவனைப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

- சுரேஷ்ராஜா