அஜீத்துக்கு லண்டனில் சிகிச்சை!



கடந்த 2013ம் ஆண்டு ‘ஆரம்பம்’ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜீத்குமார், கார் சேஸிங் காட்சியில் நடித்தபோது எதிர்பாராத விபத்தில் சிக்கினார். இதில் அவரது வலது முழங்கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. கடுமையான வலியால் துடித்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வலி குறைந்ததால், மீண்டும் அஜீத் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தார். பிறகு ‘என்னை அறிந்தால்’ படத்தின் சண்டைக் காட்சியில் பங்கேற்ற நிலையில், மீண்டும் அவருக்கு அதே வலது முழங்கால் மற்றும் தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்பட்டது. அப்போதும் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து ‘வேதாளம்’ படத்தின் பாடல் காட்சியில் வேகமாக நடனமாடிய அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. உடனே ஷூட்டிங்கை ரத்து செய்த அஜீத், மருத்துவமனைக்குச் சென்றார். வலது முழங்கால் மற்றும் தோள்பட்டை வலி பூரண குணமடைய வேண்டும் என்றால், உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர். ஷூட்டிங் இருந்ததால் ஆபரேஷன் செய்வதை தள்ளிப்போட்டு வந்த அஜீத், கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான வலியைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டார். உடனே அவரை சென்னை புறநகர் ஏரியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



கடந்த 12ம் தேதி இரவு எட்டு மணியளவில், கோவையைச் சேர்ந்த ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராஜன் மற்றும் சென்னையிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு இணைந்து, அஜீத்தின் வலது முழங்கால் மற்றும் தோள்பட்டையில் ஆபரேஷன் செய்தனர். தொடர்ந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அஜீத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு அவரது வீட்டிலுள்ள தனி அறையை, மருத்துவமனையின் ஸ்பெஷல் வார்டு போல் மாற்றி, அங்கு டாக்டர்கள் மேற்பார்வையில் சிகிச்சை நடந்து வருகிறது. கண்டிப்பாக இரண்டு மாதங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
 
இதையடுத்து அவர் லண்டன் சென்று, அங்கு அதிநவீன பிசியோதெரபி சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். அங்கு ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து, உடல்நிலை நன்கு தேறிய பிறகு சென்னை திரும்புகிறார். வரும் ஜூன் மாதம் தொடங்கப்படும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார். இந்தப் படத்தை ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அஜீத்தை இயக்கிய சிவா இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கான ஸ்டோரி டிஸ்கஷனும் தொடங்கப்பட்டுள்ளது. தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள், தன் உடல்நிலை தேற ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும்படி அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- தேவராஜ்