தமிழ் ஆர்வத்தில் நிகிஷா



‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்காக லட்சுமி மேனன் முத்தக்காட்சியில் நடித்ததை அவரது அம்மா உஷா மேனன் விரும்பவில்லையாம். இதையடுத்து மகளைக் கண்டித்த அவர், தொடர்ந்து முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்று ஸ்டேட்மென்ட் விடும்படி உத்தரவு போட்டாராம். இதையும் லட்சுமி மேனனே சொல்கிறார்.

தன் அக்கா கணவர் இயக்குனர் திருவிடம் உதவி இயக்குனராக வேண்டும் என்று நினைத்திருந்த விஜயலட்சுமி, அவர் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறாராம். அதனால்தான் உதவி இயக்குனராகும் எண்ணத்தை மாற்றிக்கொண்டாராம். கைவசம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘ரெண்டாவது படம்’, ‘வெண்ணிலா வீடு’ படங்களை வைத்திருக்கிறார்.

‘மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வீர்களா?’ என்ற அடுத்து விநாடி பதறும் வடிவேலு, ‘ஏன்... நான் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா?’ என்று கேட்கிறார். ‘தெனாலிராமன்’ ரிலீசான பிறகு ஹீரோவாக ஒரு படத்திலும், மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவும் வலம் வர கால்ஷீட் கொடுத்துள்ளாராம். சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கியுள்ள நிகிஷா படேல், தமிழ் கற்க ஆர்வமாக இருக்கிறார்.

‘சிம்பு ஜோடியாக நடிக்கிறீர்களே. மீண்டும் அவரைக் காதலிப்பீர்களா?’ என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு, ‘அது முடிந்து போன விஷயம். இனி எந்த ஜென்மத்திலும் நான் அவரைக் காதலிக்க மாட்டேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். பேச்சில் இவ்வளவு ஆக்ரோஷம் ஏனென்று தெரியவில்லை.

‘மோதி விளையாடு’ படத்தைத் தொடர்ந்து சரண், விநய் இணையும் படத்துக்கு ‘செந்தட்டிக் காளை செவத்தக் காளை’ என்று பெயரிடப்பட்டது. இப்படம் கைவிடப்பட்ட நிலையில், வேறொரு கதையை எழுதி இயக்கும் சரண், இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ள அந்தப்படத்துக்கு ‘ஆயிரத்தில் இருவர்’ என்று பெயரிட்டுள்ளார். இதிலும் விநய்க்கு இரட்டை வேடம்.

பிரபு சாலமன் இயக்கும் ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்தி, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். மே 14ம் தேதி சென்னையில் ஷூட்டிங். அதற்கு முன், ‘பென்சில்’ ஷூட்டிங்கை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஜி.வி. ‘முத்து’, ‘படையப்பா’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இரட்டை வேடம் என்பதால், ரஜினி ஜோடியாக அனுஷ்கா, பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். மே 20ம் தேதி மைசூரில் ஷூட்டிங் தொடங்குகிறது.

தேவராஜ்