பத்ரா
என்னென்ன தேவை?
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், ஆப்ப சோடா - 1 சிட்டிகை, கடுகு - சிறிது, எள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், சேப்பங்கிழங்கு இலை - 5 மீடியம் சைஸ்.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இலைகளை நன்கு கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும். சப்பாத்திக்கல்லின் மேல் ஒரு இலையை எடுத்து தலைகீழாக வைத்து அதன் மேல் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும். பிறகு மற்றொரு இலையை அதன் மேல் அதேபோல தலைகீழாக வைத்து மீண்டும் கடலை மாவு கலவையை இலை முழுவதும் தடவி விடவும்.
இப்படியாக அனைத்து இலைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ரோல் செய்து கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரோல் செய்து வைத்துள்ள பாத்ராக்களை வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வட்டமாக கட் செய்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பிறகு எள்ளு சேர்த்து வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள பத்ராக்களை சேர்த்து சிறிது பிரவுன் கலர் ஆனதும் எடுத்து பரிமாறவும்.
|