மில்க் அல்வா



என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
மைதா மாவு - 30 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாலை நன்கு கொதித்த வைத்து இறக்கவும். அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்து பனீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பனீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து இறக்கவும். அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: 1 டேபிள்ஸ்பூன் சூடானப் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கரைத்து பயன்படுத்தலாம்.