மைசூர் மசாலா பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு.

மைசூர் மசாலாவிற்கு...

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2,
நறுக்கிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 2,
பூண்டு - 3 பற்கள்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

மிளகாய் சட்னிக்கு...

காய்ந்தமிளகாய் - 4-5,
வறுத்த கடலைப்பருப்பு - 1/2 கப்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
பூண்டு - 2 பற்கள்,
புளிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். மிளகாய் சட்னிக்கு கொடுத்தவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆறவைக்கவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, இரண்டு உருண்டைகளை எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் சட்னியை, சுற்றிலும் 1/4 அங்குல இடைவெளி விட்டு பரப்பி, நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி, மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒன்றோடு ஒன்றை சேர்த்து ஒட்டி விடவும். நன்கு மூடியதும் மாவில் புரட்டி, கையால் தட்டி மெதுவாக பெரிய கனமான சப்பாத்தியாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.