தெரிந்த முடக்குவாதம்... தெரியாத தகவல்கள்!



முடக்குவாதம் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட நம்மில் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது குறித்து எல்லோருக்கும் தெரியுமா என்றால், மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட முடக்குவாதம் குறித்து தெரிந்துகொள்ளவே இக்கட்டுரை.

முடக்குவாதம் என்பது...?

முடக்குவாதம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய நாள்பட்ட ஒரு நோய். உடலில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியின் காரணமாய் வரும் இந்த முடக்கு வாதத்தை, மூட்டு வாதம் அல்லது சரவாங்கி என்றும் கூறுவர்.
மூட்டு வாதம் என அழைக்கப்படுவதால் இது மூட்டை மட்டுமே பாதிக்கக்கூடிய நோய் என பலரும் நினைக்கலாம். ஆனால், அது முழுவதும் உண்மை கிடையாது. மாறாக, இது மூட்டுகளை அதிகம் பாதித்தாலும், பல்வேறு உடல் உறுப்புகளையும் சேர்த்து பாதிக்கும் நோய் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.  

இது ஓர் ஆட்டோ இம்யூன் நோய்...
முடக்கு வாதம் ஓர் ஆட்டோ இம்யூன் நோய் (தன்னுடல் தாக்கு நோய்) என மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. அதாவது, வெளியில் இருந்து வரும் தொற்று நோய்களிடமிருந்து நம் உடலைக் காப்பதற்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்கும்.

இது வெள்ளையணுக்கள் உதவியோடு நடை
பெறும். ஆனால் இந்த முடக்கு வாதத்தில் உடலானது தன்னுடலில் உள்ள சில பகுதிகளை நோய்க்காரணியாக தவறாக அடையாளப்படுத்திக்கொண்டு, தனக்கு எதிராக தானே செயல்பட ஆரம்பிக்கும். எனினும், இதற்கான சரியானக் காரணங்கள் இதுதான் என இதுவரை எதுவும் கண்டறியவில்லை.

30 முதல் 50 வயது வரை...

உலக மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் மக்கள் இந்த முடக்குவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.இது ஆண்களையும் பாதிக்கும் என்ற போதிலும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 80 சதவிகிதம் இது பெண்களுக்கான நோய் என்றும் சொல்லலாம். ஏனெனில், ஒரு ஆணுக்கு மூன்று பெண் என்ற விகிதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். இது சராசரி வயதான 30 முதல் 50 வயது வரை உள்ளவர்களை அதிகம் பாதிக்கக்கூடும்.

நீளும் அறிகுறிகள்

* வளையும் தன்மை உடைய புறநீர்மை மூட்டுகளையே (அதாவது, நம் கை, கால் மற்றும் தண்டுவட மூட்டுகள்) இது பெருமளவு பாதிக்கும். ஆனால், ஆரம்ப நோயின் அறிகுறிகள் கை, கால்களில் உள்ள சிறு மூட்டுகளில் மட்டுமே தெரியும்.

* மூட்டுக்களில் வலி, வீக்கம், விறைப்புதன்மை ஏற்படும். இது மூட்டுகளில் ஏற்படும் அழற்சியின் விளைவாகவே ஏற்படும்.

* மூட்டுகளின் செயல்பாடு குறைந்து போகும். இறுதியில் மூட்டுகள் இயக்குவதற்கு கடினமானதாய் விரைப்பானதாய் மாறிவிடும். அதனால், மூட்டுகளில் நீண்டகால சேதத்தினை ஏற்படுத்தி, மூட்டுச் சிதைவு எனப்படும் மூட்டு உருக்குலைவு உண்டாகும்.  அதாவது, மூட்டின் உருவம் மாறுபட்டு சிதையும்.

* பொதுவான அறிகுறிகளாக உடல் எடை இழப்பு, சோம்பல், மனச்சோர்வு காணப்படும்.

* சிறு மூட்டுகளைத் தொடர்ந்து மற்ற மூட்டுகளையும் பின்னாளில் பாதிக்கத் தொடங்கும்.

* இருபக்க மூட்டுகளையும் சமமாக பாதிக்கும்.

* அதிகாலையில் எழுந்ததும், அதாவது நீண்ட நேர ஓய்வுக்குப் பின்பு எழுந்ததும் உடலில் உள்ள எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும். இது குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது தோன்றும்.

* போதிய தூக்கம் இல்லையெனில் நோயின் தன்மை அதிகமாய் இருப்பது போன்று தோன்றும்.

* இந்த நோய் 90% கை, கால்களில் உள்ள சிறு மூட்டுகளையும், 80% மணிக்கட்டு, தோள்பட்டை, கணுக்கால், முழங்கால் மூட்டையும், 40% இடுப்பு மற்றும் முழங்கை மூட்டுகளையும் இது பாதிக்கக்கூடும்.

மற்ற உறுப்புகளில்...

* சிவப்பணுக்கள் குறைந்து போகும்.

* இதயத்தை சுற்றியும், நுரையீரலை சுற்றியும் அழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* நோயின் அறிகுறிகள் தோன்றும்பொழுது  மெல்லிய காய்ச்சலும், ஆற்றல் குறைவும் இருக்கும்.

* கண் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும்.

* சில முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் மற்றும் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இதயம், நுரையீரல் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

* தோளுக்கு அடியில் சிறு முடிச்சுகள் போன்று ஆங்காங்கே தென்படும்.

* நாள்பட்ட ரத்த சோகை அறிகுறிகள் இருக்கும்.

கண்டறிவது எப்படி?

* பருவ காலத்திற்கு ஏற்றார்போல் நோயின் அறிகுறிகள் தென்படவும் பிறகு மறையவும் செய்யும். குளிர்காலங்களில் நோயின் தன்மை அதிகமாகத் தோன்றும். மேலும் அறிகுறிகள் மற்ற மூட்டு வலிகளின் அறிகுறிகளைப் போல் இருப்பதால் கண்டறிவதில் சிரமமும் தாமதமும் ஏற்படலாம்.

காலை எழுந்ததும் மூட்டுகளை அசைப்பதற்கு கடினமாய், விரைப்பாய் இருந்தால், மூட்டு வலியும் வீக்கமும் அழற்சியும் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து மூன்று மூட்டுகளுக்கு மேல் இருந்தால் இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும்.

*ரத்தப் பரிசோதனையில்  சீரம் ஆர்.எச் ஃபேக்டர் (serum Rh factor) என்பது இருந்தால் முடக்கு வாதம் என்று  உறுதி செய்யலாம்.

* எக்ஸ்-ரே செய்து பார்ப்பதினால் மூட்டுகளின் பாதிப்பு எதுவரை இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.

என்னதான் தீர்வு..?

பொதுவாக, முடக்கு வாத நோய்கள் குணப்படுத்த முடியாதவை. சர்க்கரை நோயைப்போலவே, இவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க மட்டுமே முடியும். அதுவும் ஆரம்பநிலையில் கண்டறிந்தால் மட்டுமே சாத்தியமாகும். மாறாக, நீண்ட நாள்களுக்கு முடக்கு வாதம் இருந்து கவனிக்காமல் விட்டுவிட்டால், உள்ளுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடைசெய்து, கண், நுரையீரல், இதயம் போன்றவற்றையும் பாதித்துவிடும்.

அதனால், நோயின் வளர்ச்சியைக் கட்டுக்குள் வைக்கவும் அறிகுறிகளைக் குறைக்கவும் மருந்துகளும், இயன்முறை மருத்துவமும் மிக அவசியம். ஆங்கில மருத்துவத்தில், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வாத நோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றை இதற்கென பரிந்துரைப்பர்.
கை கொடுக்கும் இயன்முறை மருத்துவம்...

 இயன்முறை மருத்துவத்தில், மூட்டுகளின் வலியை, வீக்கத்தை, அழற்சியைக் குறைப்பதற்கு இயன்முறை மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்துவர். மேலும் தசைத் தளர்வு பயிற்சிகள், தசை வலிமைப் பெற பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.

இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதினால் மூட்டுகளை மேலும் சிதையாமல் பாதுகாக்கலாம். மேலும் வீட்டில் கடைப்பிடிக்க வேண்டியவற்றையும் அறிவுரைகளாக வழங்குவர்.எனவே, முடக்கு வாத நோய்கள் குறித்த போதிய விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருந்தால் மிக எளிதில் எதிர்த்து வென்றுவிடலாம்.