மரங்களை பாதுகாக்கும் சிறுமி!!



மகாராஷ்டிரா, பூனே நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹிர்கானிக்கு மரங்கள் என்றால் கொள்ளை பிரியம். இவர் வீட்டை சுற்றி மரங்கள் உள்ளன. தினமும் அந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி அதை ஒரு முறையாவது தழுவிய பிறகு தான் இவள் பள்ளிக்கே செல்வாள். ஒரு முறை தான் வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டு வைத்து இருந்தாள் ஹிர்கான். விடுமுறைக்காக கொல்கத்தா சென்றிருந்தார். திரும்பி வந்தவர் தான் நட்டு வைத்த மரக்கன்று கருகி இருந்ததை பார்த்தார். சரியாக தண்ணீர் இல்லாத காரணத்தால் மரக்கன்று வாடியதால் அதற்கு பரிகாரமாக மரங்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

பெரியவர்கள் நம்மாலே மரக்கன்றுகளை காப்பாற்ற முடியவில்லை. ஆறு வயது சிறுமியால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழும். என்னாலும் முடியும் என்று ஆறாயிரம் மரங்களை காப்பாற்றியுள்ளார். பொதுவாக இப்போது எல்லாம் விளம்பர பலகைகளும் பெரும்பாலும் மரங்களில் ஆணி அடித்து தான் மாட்டப்படுகிறது. இவ்வாறு குத்தப்படும் ஆணியால் அந்த மரங்கள் பல நேரங்களில் தனது பசுமையை இழந்து கருகிவிடுகிறது. அதை தவிர்க்க முதலில் மரங்களில் ஆணி அடித்து பேனர்களை தொங்க விடக்கூடாது என பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அதோடு நில்லாமல் தன் தந்தை உதவியுடன் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை தானே நேரில் சென்று பிடுங்கி வருகிறார்.

இவரின் பிரசாரத்தை பின்பற்றி பீகார், தமிழ்நாடு, குஜராத்  மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் 20 மாவட்டங்களில் ‘ஆணி இல்லா மரங்கள்’ என்ற பிரசாரம் வைரலாக பரவி வருகிறது. பூனேவில் மட்டுமே இவரால் பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் 500 தன்னார்வலர்கள் கொண்ட அமைப்பை தன் தந்தை உதவியுடன் ஆரம்பித்துள்ளார் ஹிர்கான். இந்த அமைப்பினை கொண்டு இதுவரை சுமார் 50 ஆயிரம் ஆணிகளை மரங்களில் இருந்து பறித்துள்ளார்.  இதற்காக அவர் பல்வேறு மாநிலங்களில் சிறப்பு குழுக்களை தொடங்கி  சுமார் 6 ஆயிரம் மரங்களின் வாழ்வை உறுதி செய்துள்ளார். அந்த சிறுமி கண்களில் மரத்தில் ஆணி பதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனே  ஆணியை பிடுங்கும் கருவியுடன் சென்று அதை பறித்து எரிந்து விட்டுதான் வேறு வேலை செய்கிறார். மழை தரும் மரத்தை, வீடு கட்ட மரக்கட்டகைள் தரும் மரங்களை, சுத்தமான காற்று தரும் மரங்களை ஏன் அழிக்கிறார்கள். மரங்களை ஒருபோதும் வெட்டாதீர்கள் என்பதும் அவரது முழக்கமாக உள்ளது.

-கோமதி பாஸ்கரன்