வாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க!



ஆரோக்கியம்தான் அத்தனைக்கும் அடிப்படை. சாதனை புரிவதற்கு மட்டுமல்ல, ஒரு இயல்பான இனிமையான வாழ்க்கை வாழ்வதற்கும்  கூட ஆரோக்கியம் அவசியம். அதிலும் பெண்கள் ஒரு நாள் படுத்துவிட்டாலும் குடும்பமே திண்டாடி போகும். பெண்கள் பொதுவாக  ஆரோக்கியமாக இருக்க என்ன மாதிரியான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரேகா  ராவ்.

* ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல உறக்கம் அவசியம். குறைந்தபட்சம் எட்டு அல்லது ஏழு மணிநேரம் நன்கு தூங்க வேண்டும்.

* தொடர்ந்து கணினி பார்ப்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து போகும். அதற்கு வாரத்தில் இருமுறை தூங்கப் போகும் முன் கண்களில்  விளக்கெண்ணெய் சிறு துளி விட்டுக் கொண்டு உறங்குவது நல்லது.

* ஆஸ்துமா நோயாளிகளை தவிர்த்து மற்ற பெண்கள் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம். இதனால்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ரத்தமும் சுத்திகரிக்கப்படும்.

* பொதுவாக தினமும் குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் உடல் முழுவதும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தடவி  அரை மணி நேரம் கழித்து குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் பளபளப்புடனும் இருக்கும்.  

* தலைமுடியை  பொறுத்த மட்டில் ரசாயனம் அதிகமுள்ள ஷாம்புக்களை பயன்படுத்த வேண்டாம். ஷாம்பு போட்டு குளிக்கும் முன்  தலையில் சிறிது நேரம் எண்ணெயைத் தேய்த்து ஊற வைத்துக் குளிப்பது நல்லது. இல்லையென்றால் மண்டையோட்டின் ஈரப்பதம்  குறைந்து முடி கொட்டும். ஷாம்பு பயன்படுத்திய பின் அதிகம் ரசாயன கலப்பற்ற கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல்நலத்திற்கு பல விதத்திலும்  பயன் கொடுக்கும்.

* உணவில் காய்கறி மற்றும் கீரை வகைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* உணவில் அதிக எண்ணெய், காரம், புளிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட  வேண்டாம். எப்போதாவது ஒரு நாள் எடுத்துக்கொள்ளலாம்.

* ஜங்க் ஃபுட்டை தவிர்த்து மாலை வேளைகளில் பேரீச்சை, நட்ஸ் (பாதாம், பிஸ்தா) போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

* பருவமடைந்த பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய மாதவிடாய் சீராக வருகிறதா என்பதை கட்டாயம் கண்காணிக்க  வேண்டும். 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வர வேண்டும். ஓரிரு நாட்கள் தள்ளிப் போகலாம். ஆனால் வராமல் இருக்கக்கூடாது.  மிகக் குறைவான நாட்களின் இடைவேளையில் மாதவிடாய் ஏற்பட்டாலோ மிக அதிகமான நாட்கள் தள்ளிப்போய் மாதவிடாய் வந்தாலோ  கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும். 3லிருந்து 5 நாட்களுக்கு மாதவிடாய் போக்கு இருக்கலாம். மிகவும் குறைவாகவோ அல்லது  அதிகமாகவோ ரத்தப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* மாதவிடாய்க்கு பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்த பட்சம் மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது  பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

* தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருக்கக்கூடாது. கர்ப்பப்பையில் பிரச்னை இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஏதாவது நோயின்  அறிகுறியாக வெள்ளைப்படுதல் இருக்கலாம். அதிகளவோ, குறைந்தளவோ, துர்நாற்றத்துடனோ அது இல்லாமலோ எப்படி இருந்தாலும்  வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

*தினமும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர், நார்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள்  சாப்பிட வேண்டும். தினமும் ஒரு மலை வாழைப்பழம் அல்லது செவ்வாழை சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னை தீர்வதோடு அவற்றில்  இருந்து நம் உடலுக்குத் தேவையான பொட்டாசியமும் இரும்புச்சத்தும் கிடைக்கும். ஹைபிரீட், செயற்கை முறையில் விளைவித்த  (hybrid) பழங்களை சாப்பிட வேண்டாம். அதில் எந்த சத்தும் இருக்காது.  

*காய்கறி சூப் மற்றும் முருங்கை கீரை சூப்பை வாரம் இரு முறை சாப்பிட்டு வர உடல் பலவீனம் பேலன்ஸ் ஆகும்.

* பீட்ரூட் ஜூஸ் அல்லது பெங்களூர் தக்காளி ஜூஸ் வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.

* உணவை ஐந்து வேளையா பகுத்து சாப்பிடும் போது எனர்ஜி லெவல் மெயின்டெயின் ஆகும்.

* சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பல பிரச்னைகளுக்கு தொடர்ந்து மருந்து எடுத்து வருபவர்கள் உணவில் போலிக் அமிலம்  அதிகமுள்ள பசலை அல்லது பாலக் கீரையை சாப்பிட்டு வருவது நல்லது.

*இவற்றோடு கட்டாயம் தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடமாவது நமக்கே நமக்கென்று ஒதுக்கி உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

-ஸ்ரீதேவி மோகன்