குரோஷே எனும் லாபகரத் தொழில்



சிறுதொழில்

“நான் வசந்திராஜ், வயது 77, தையல் ஆசிரியை. மற்ற பல கலைகளையும் கற்றுத் தருகிறேன். இப்பொழுது  உங்களுக்கு மிகவும் பழமை  வாய்ந்த கலையை பற்றி சொல்லப் போகிறேன். இது 13ம் நூற்றாண்டில் தோன்றிய கலை. இயந்திரம் இல்லாக் காலத்தில் பெண்கள்  தங்களுக்கான ஆடைகளை நூலைக் கொண்டு, சணல் கயிறு போன்றவற்றை கொண்டு ஒரு வளைந்த கொக்கி கொண்ட ஊசியால்,  நூல்களை ஒன்றின் உள் ஒன்றை கோற்று பின்னுவது குரோஷே (crochet) என்ற கலை ஆகும். இதை தமிழில் கொக்கிப் பின்னல்  என்பார்கள்.

இதனை கொண்டு ஆடைகள், ஸ்வெட்டர்கள், சால்வைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை  செய்யலாம்.  குரோஷே நன்றாக தெரியும். இந்த ஊசிகள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. செய்யும் பொருளின் தன்மைக்கேற்ப  வெவ்வேறு தடிமனான ஊசிகள் பயன்படுத்தலாம்.கலை ஆசிரியை பயிற்சியை 1960ல் முடித்தேன். அதில் எல்லாமே அடங்கி இருக்கிறது.  குரோஷே, நிட்டிங், தையல், எம்பிராய்டரி மற்றும் சிலவற்றை கற்றுக் கொண்டேன். பிறகு எனக்கு கலை மீது இருந்த ஆர்வத்தினால் பல  பயிற்சிகளுக்கு சென்று, மெடல் எம்போசிங், என்கிரேவிங்(ngraving), கேன்வாஸ் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், நிப் பெயின்டிங் (nib  painting), காபி பெயின்டிங், ம்யூரல் வொர்க், மதுபானி பெயின்டிங், கேரளா ம்யூரல், கோண்ட் ஆர்ட், சாஃப்ட் டாய்ஸ், சென்டான்கில்  (zentangle), பாட்டில் ஆர்ட், படா சித்ரா (Pata chitra) மற்றும் பலவற்றை கற்றுக் கொண்டேன். இதையெல்லாம் கற்றுக் கொடுக்கவும்  செய்கிறேன். கடந்த 40 வருடங்களாக நான் இக்கலைகளை வீட்டிலிருந்தபடியே வகுப்பு எடுக்கிறேன். என்னிடம் கற்றுக் கொண்டு நிறையப்  பேர் சொந்த தொழில் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் வந்து என்னிடம் நன்றி கூறும்போது  எழும் ஆத்மதிருப்திக்கு வேறு எதுவும்  ஈடாகாது.

குரோஷே (crochet) என்ற பெயர் பிரெஞ்சிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு சின்ன கொக்கி என்று பொருள். இக்கலை ஐரோப்பாவில்  தோன்றியது. உங்களில் நிறைய பேருக்கு இந்தக் கலையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அதைக் கொண்டு  எத்தனை வகை பொருட்களை தயாரிக்க முடியும் என்று தெரியுமா? இதைக் கொண்டு ஆடைகள் மட்டுமில்லாமல் விதவிதமான  பொம்மைகள், பூக்கள், தொப்பிகள், ஸ்வெட்டர்கள், சாக்ஸ், போர்வைகள், பை, பர்ஸ், ஷால்கள், ஸ்கார்ஃப், ஸ்டோல், டீ கோஸ்டர், டேபிள்  மேட், ஜூவல்லரி, கால் மிதி, தோரணம், ஷிம்மீஸ், குழந்தைகளுக்கு ஆடைகள், ஹேர்பேண்ட், பூ தொட்டிகளை மாட்டி வைக்க  ஸ்டாண்டுகள், விதவிதமான கவர்கள், டேபிள் கவர், பில்லோ கவர்கள், சோபா அலங்கரிக்க கவர்கள் என்று நம் கற்பனைக்கேற்ப இன்னும்  பல விதவிதமான பொருட்களை நம் தேவைக்கேற்ப செய்யலாம்.

இதைக் கொண்டு சிறு தொழில் தொடங்கலாம்.  இப்பொருட்களை செய்வதற்கு செலவு மிக மிக குறைவு. ஆனால் வருமானமோ மிகவும்  அதிகம், இரட்டிப்பு கிடைக்கும். உதாரணத்திற்கு 25 கிராம் உல்லன் இழையின் விலை ரூ. 15. இதில் இரண்டு பொம்மைகள் செய்யலாம்.  ஒரு பொம்மையின் விலை ரூ. 50 என்றால், இரண்டு பொம்மைக்கும் ரூ.85 லாபமாக பெறலாம். இது நீங்கள் போட்ட  முதலீட்டிற்கு ஐந்து  மடங்கு அதிகம். ஆகையால் இதைக் கற்றுக் கொண்டு சிறு தொழில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.இதை யார் வேண்டுமானாலும் மிக  எளிதாக கற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான பொருட்களும் மிகவும் குறைவு. ஒரு குரோஷே ஊசியும், உல், குரோஷே நூல்  அல்லது வேறு நூலோ இருந்தால் போதுமானது. இதெல்லாம் விலை மிகவும் குறைவு, எல்லோராலும் வாங்க முடியும்.

இதை எந்த வயதிலும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதில் ஆர்வம் இருந்தால் போதும். மிக வயதானாலும் செய்யலாம். உடலை  அலட்டிக் கொள்ளாமல் செய்யலாம். ஓய்வு நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம். பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டே  பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே செய்யலாம். குழந்தைகளை கவனித்துக் கொண்டே செய்ய முடியும். உங்கள் அன்றாட வேலைகளை  செய்து கொண்டே இதையும் செய்யலாம். சம்பாதிக்கவும் செய்யலாம் அல்லது பொழுதுபோக்கிற்கும் செய்யலாம்.

இதையெல்லாம் செய்து நீங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருப்பவர்களை அசத்த முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு  பரிசு கொடுக்க வேண்டுமென்றால் இதை செய்து கொடுக்கலாம். உங்கள் கையால் செய்தது என்றால், அதற்கு எப்பொழுதும் ஒரு தனி  மதிப்பு இருக்கும்.இதை முதலில் நீங்கள் ஒரு நல்ல ஆசிரியரிடம் கற்றுக் கொண்டு, நிறைய முறை செய்து பார்த்து நன்றாக கற்றுக்  கொண்டவுடன் யூ-டியூப் பார்த்து இன்னும் நிறைய கற்றுக்கொள்ளலாம். இப்பொழுது என்ன வேண்டுமென்றாலும், இணையத்தைப் பார்த்துக்  கற்றுக் கொள்ளலாம். நமக்கு நல்ல கற்பனைத் திறன் இருந்தால் அதைக் கொண்டு இன்னும் நிறைய செய்யலாம்.பெண்களால் முடியாதது  எதுவுமில்லை. ஆகையால் நீங்கள் மனது வைத்தால், வீட்டிலிருந்தே உங்கள் அன்றாட வேலைகளை செய்துகொண்டே சம்பாதிக்கலாம்.  பொழுதையும் நன்றாக பயனுள்ளதாக போக்கலாம்.இந்த மிகவும் எளிதான குரோஷேவை ஆர்வமுடன் கற்றுக் கொள்ளுங்கள். முயற்சியால்  எதையும் சாதிக்கலாம்” என்கிறார்.

-தோ.திருத்துவராஜ்