ஆரோக்கியமான அழகுக்கு மசாஜ்



நவீன அறிவியல் வளர்ந்தபின்னர் அழகுக் கலை மூலம் சருமப் பிரச்சனைகளை எளிமையாக சரி செய்ய முடிகிறது. அழகுக் கலையில்  பாடி மசாஜுக்கென்று ஒரு முக்கிய பங்கு உண்டு. மசாஜ் செய்வதன் மூலம் தங்களுடைய அழகை பாதுகாத்துக் கொள்ளவும், மனதை  ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா ராம்குமார்.“இன்றைய சூழலில் பெரும்பாலான  மக்கள் மசாஜ் செய்வதை மறந்து விட்டார்கள். ஆனால் மசாஜ் செய்வதன் மூலம் தங்களுடைய அகம் புறம் இரண்டையும் பாதுகாப்பாகவும்,  அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும். மசாஜ் குறித்த போதிய விழிப்புணர்வு நம் நாட்டில் இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.பொதுவாக க்ரீம், ஜெல், ஆயில், பவுடர் போன்றவை  மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சருமத்தின் தன்மை பொருத்து எதை பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய  வேண்டும். உடலுக்கு பவுடர் பயன்படுத்தலாம்.வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பயன்படுத்த வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள்  க்ரீம் பயன்படுத்த வேண்டும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 லிருந்து 20 நிமிடங்கள்வரை மசாஜ் செய்ய வேண்டும். 18  வயதுக்குட்பட்டவர்களுக்கு நாங்கள் மசாஜ் செய்ய சொல்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு முகம் இயற்கையாகவே சரும செல்கள்  புத்துயிர் பெற்று மேம்படும். ஆகையால் 18 வயதுக்குட்பட்டவர்கள் மசாஜ்  செய்வதை  தவிர்த்துக்கொள்ளலாம்.

கரும்புள்ளிகள், பருக்கள் உள்ளவர்கள் சாதாரண மசாஜ் செய்ய வேண்டாம். கரும்புள்ளிகள் உள்ள சருமத்திற்கு ஏற்ற ஜெல் இருக்கிறது.  அதை பயன்படுத்தி மசாஜ் செய்வது நல்ல பலனைத்தரும். பலர் இது தெரியாமல் கரும்புள்ளிகள் உள்ள சருமத்தில் ஆயில் அல்லது கிரீம்  பயன்படுத்தி மசாஜ் செய்வதால் மேலும் அது சருமப் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.முகத்தை பொறுத்தவரை மசாஜ் செய்தபின்பு,    ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று இருக்கும். வயது ஆனவர்கள் போல் இல்லாமல் சருமத்தை இளமையாக  வைத்துக்கொள்ள உதவும்.30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் இருமுறை மசாஜ் செய்து கொள்வது நல்லது.மசாஜ் செய்வதால் மன  அமைதி கிடைக்கிறது. இன்றைய இயந்திர உலகில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு  மன அமைதி என்பது அடிப்படை தேவை. அப்படி இருப்பவர்கள் வாரம் ஒரு முறை பாடி மசாஜ் செய்து கொள்வது நல்ல புத்துணர்வை   கொடுக்கும்.

இன்றைய இளைய தலைமுறை பெரும்பாலும் தலையில் எண்ணெய் வைப்பதே இல்லை. முகத்திற்கு மசாஜ் செய்கிறவர்கள் அதே நேரம்  தலைமுடிக்கும் ஆலிவ் ஆயில், தலைமுடிக்கு ஏற்ற கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு தலை  முடிக்கும் மசாஜ் செய்யும்போது முடி உதிர்வு நின்று முடி நன்றாக வளரும். முகத்திற்கு மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் நீங்கி புதிய  செல்கள் உருவாகும் முகம் பளிச்சென்று இளமையை தக்க வைத்துக்கொள்ளும்.சிலருக்கு கருவளையம் இருக்கும். தொடர்ந்து மசாஜ்  செய்வதன் மூலம் நாளடைவில் கருவளையம் மறைந்து முகம் பொலிவடையும்.பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம்  சீரடையும்.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பாதத்தை மசாஜ் செய்வதன் மூலம். எலும்புகள் வலுபெறும். பாதங்களுக்கென்று பயிற்சி பெற்ற  மசாஜ் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.அரசு அங்கீகாரம் இல்லாத சில நிறுவனங்களில் மசாஜ் பற்றிய புரிதல் இல்லாதவர்களிடம் மக்கள் சென்று ஏமாந்து வருகிறார்கள். மசாஜ்  செய்வதற்கென்று படித்து இதற்காகவே பார்லரில் பணிபுரியும் அனுபவ மிக்கவர்களிடம் மசாஜ் செய்ய வேண்டும். 30 வயதுக்கு  மேற்பட்டவர்கள் நிச்சயம் மாதம் இரு முறை மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்” என்கிறார் அழகுக் கலை நிபுணர் மேனகா  ராம்குமார்.                          

-ஜெ.சதீஷ்